வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)





தேர்தலில் வாக்களிக்க வேண்டியது கிறிஸ்தவர்களின் புனித கடமை!

நாட்டின் பொதுத் தேர்தலில் கிறிஸ்தவர்கள் வாக்களிக்க வேண்டியது ஒரு புனித கடமை மற்றும் குடிமைப் பொறுப்பு என்று கோவா மற்றும் டாமன் பேராயர் ஃபிலிப் நேரி ஃபெராவ் அவர்கள் அறிக்கையொன்றில் கூறியுள்ளதாகத் தெரிவிக்கிறது ஆசியா செய்தி நிறுவனம். தமிழ்நாட்டிலுள்ள அன்னை வேளாங்கண்ணி கோவிலுக்கு வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே இரயில் சேவை கிடைக்கும் நிலையில், அங்குச் செல்லும் திருப்பயணிகள் சிலர் வாக்களிக்க சரியான நேரத்தில் வர முடியாமல் போகலாம் என்பதால், மே 6-ஆம் தேதி இரயில் பயணம் செல்ல வேண்டாம் என்று, பேராயர் ஃபிலிப் நேரி அவர்கள் விசுவாசிகளை அவ்வறிக்கையில் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறுகிறது அச்செய்தி நிறுவனம். மாநில மக்களுக்கு, குறிப்பாக, கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு ஆற்றிய உரையில், அனைவரும் தேர்தலில் வாக்களித்து தங்கள் கடமையை நிறைவேற்றுமாறு பேராயர் கேட்டுக்கொண்டுள்ளார் என்றும், வாக்களிப்பின் வெற்றிக்காக மே 3 மற்றும் 5 தேதிகளில் சிறப்பு இறைவேண்டல்களை நடத்துமாறு அருள்பணியாளர்கள், இருபால் துறவுசபையினர், அதன் தலைவர்கள், தனிக்குழும இல்ல அருள்பணியாளர்கள் அனைவரையும் வலியுறுத்தியுள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பு உரைக்கின்றது.
அனைத்து மக்களின் நன்மைக்காகவும், நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள விழுமியங்களை நிலைநிறுத்துவதற்காகவும் உண்மையாகவே தங்களை முழுமையாக அர்ப்பணித்துப் பணியாற்றும் நபர்களை இந்தப் பொதுத்தேர்தலில் தேர்வு செய்யுமாறு கத்தோலிக்கர்கள் அனைவரிடமும் பேராயர் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.
கத்தோலிக்கர்கள் விடுமுறையில் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வெளியேறுவது அல்லது தேர்தல் நாளில் திருப்பயணம் செல்வது என்பது, மே 7-ஆம் தேதி வாக்களிக்கும் தங்களின் செயல்பாட்டில் பங்கேற்பதற்கான பொறுப்பிலிருந்து விலகுகின்றனர் என்பதை மட்டுமல்ல, மாறாக, குடிமக்களுக்குரிய தங்களின் கடமைகளிலிருந்து தவறுவதையும் குறிக்கிறது என்று பேராயர் கருதுவதாகவும் குறிப்பிடுகிறது அச்செய்திக் குறிப்பு. [2024-04-19 23:01:23]


மதச்சார்பற்ற அரசிற்கு வாக்களியுங்கள் : பேராயர் பீட்டர் மச்சாடோ

இந்திய நாட்டில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் மதச்சார்பற்ற அரசிற்கு வாக்களிக்குமாறு கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ அவர்கள் கத்தோலிக்கர்களை வலியுறுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம்.
மதச்சார்பற்ற, வகுப்புவாதமற்ற, அரசியல் சாசனத்தில் நம்பிக்கையுள்ள, ஊழல் குறைந்த ஒரு தலைவரைத் தேர்ந்தெடுங்கள் என்று இம்மாதம் 7-ஆம் தேதியன்று பேராயர் மச்சாடோ அவர்கள் கிறிஸ்தவ மக்களுக்கு அழைப்புவிடுத்ததாகவும் அச்செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. மதச்சார்பற்றவர் என்றால் எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்து மக்களையும் மதிக்கிறவர் என்றும், வகுப்புவாதமற்றவர் என்றால் அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்பவர் என்றும் பேராயர் மச்சாடோ அவர்கள் விளக்கினார் என்றும் உரைக்கின்றது அச்செய்திக் குறிப்பு.
பெங்களூருவில் உள்ள Logos தியான மையத்தில் மறையுரை வழங்கியபோது இவ்வாறு கேட்டுக்கொண்ட பேராயர் மச்சாடோ அவர்கள், ​​வரும் தேர்தல் மிகவும் முக்கியமானதாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவும் இருப்பதால் அனைத்து கத்தோலிக்கர்களும் வாக்களிக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்தார் என்றும் எடுத்துக்காட்டுகிறது அச்செய்திக் குறிப்பு. நம் வாக்களிக்கவில்லை என்றால் அது ஒரு பாவம் என்றும், நாட்டில் கிறிஸ்தவர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்களுக்கு எதிராக வளர்ந்து வரும் துன்புறுத்தல் பற்றி பின்னர் உட்கார்ந்துகொண்டு புகார் செய்வது பயனற்றது என்றும் பேராயர் மச்சாடோ அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும் அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்களிக்க தகுதியுடையவர்கள் அனைவரும் வாக்களிக்கும் நாளில் மற்ற அனைத்து அலுவல்களையும் இரத்து செய்துவிட்டு வாக்களிக்க நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று பேராயர் மச்சாடோ அவர்கள் அனைத்துக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களையும் வலியுறுத்தியதாகவும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு. நாட்டின் தேர்தல் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 26, மே 7 ஆகிய இரண்டு தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கர்நாடகாவில் வாழும் 6 கோடியே 80 இலட்ச மக்களில் 1.87 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். (UCAN) [2024-04-11 23:00:56]


இந்திய கத்தோலிக்கப் பள்ளிகளுக்கு CBCI-இன் புதிய வழிகாட்டுதல்கள்!

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை (CBCI), தனது அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில், மற்ற மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் மீது கிறிஸ்தவ மரபுகளைத் திணிக்காமல், அனைத்து மதங்களையும் மதிக்கும் பண்பை ஊக்குவிக்க அறிக்கை ஒன்றில் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறியுள்ளது ஆசிய செய்தி நிறுவனம். கத்தோலிக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தினமும் காலையில் இந்திய அரசியலமைப்பின் முகவுரையை வாசிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு பள்ளியின் நுழைவாயிலிலும் அது பொறிக்கப்படலாம் என்றும், அதன் வளாகத்தில் அனைத்துமத இறைவேண்டல் அறை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை பரிந்துரைத்துள்ளது எனவும் மேலும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம். இதுகுறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய கல்வி மற்றும் கலாச்சார அலுவலகத்தின் தலைவர் பேராயர் Elias Gonsalves அவர்கள், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் கல்விப் பணிக்குழு மற்றும் கலாச்சார அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட 13 பக்க வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தல் ஆவணம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டுகளைப் போலவே, கலாச்சார மற்றும் கல்விக்கான ஆணையத்தால் வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றாலும், இம்முறை வரவிருக்கும் பொதுத் தேர்தல்களைக் கருத்தில்கொண்டு இந்த வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் பேராயர் Gonsalves.
இந்தியாவில் உள்ள கத்தோலிக்கத் தலத்திருஅவை ஏறத்தாழ 14,000 பள்ளிகள், 650 கல்லூரிகள், ஏழு பல்கலைக் கழகங்கள், ஐந்து மருத்துவத்துறைகள் மற்றும் 450 தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. (ASIAN) [2024-04-10 23:03:26]


இந்திய கத்தோலிக்கப் பள்ளிகள் இணக்க வாழ்வை ஊக்குவிப்பவை

மதமாற்றம் செய்கிறார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டு இந்திய கிறிஸ்தவர்கள் மீது வலதுசாரி இந்து குழுக்களால் முன்வைக்கப்பட்டுவரும் இவ்வேளையில், இந்தியாவின் அனைத்து கத்தோலிக்கப் பள்ளிகளும் மதங்களிடையே இணக்க வாழ்வை ஊக்குவிப்பவர்களாகச் செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் இந்திய ஆயர்கள்.
இந்தியாவின் அனைத்துக் கத்தோலிக்கப் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்து மத பாரம்பரியங்களையும் நாம் மதிக்கவேண்டும் என விண்ணப்பித்துள்ளனர். இந்த சுற்றறிக்கைப்பற்றிக் குறிப்பிட்ட இந்திய ஆயர் பேரவையின் கல்வி மற்றும் கலாச்சார அலுவலகத்தின் செயலர், அருள்பணி மரிய சார்லஸ் அவர்கள் உரைக்கையில், தலத்திருஅவை தொடர்ந்து கடைப்பிடித்துவரும் மதிப்பீடுகளை மீண்டும் ஒருமுறை பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நினைவூட்டவே இந்த சுற்றறிக்கை எனக் கூறினார்.
கிறிஸ்தவப் பள்ளிகள் வழி மதமாற்றம் இடம்பெறுகிறது என சில மதவெறிக் குழுக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில், கிறிஸ்தவப் பள்ளிகளிலிருந்து கிறிஸ்தவ அடையாளங்கள் அகற்றப்படவேண்டும், மற்றும், கிறிஸ்தவக் கல்வி நிலையங்களில் பணிபுரியும் துறவியர் தங்கள் துறவியருக்குரிய அடையாளத்தை அணியக் கூடாது எனவும், அஸ்ஸாம் மாநிலத்தில் அண்மையில் வலது சாரி இந்துக் குழுக்கள் தாக்குதலை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் 2.3 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்கள் எனினும், ஆறு பல்கலைக்கழகங்கள், ஆறு மருத்துவக் கல்லூரிகள், 400 கல்லூரிகள் உட்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் வழி சேவையாற்றி வருகின்றனர். [2024-04-06 00:14:32]


காரித்தாஸ் உரிமத்தை இரத்து செய்ய இந்து தேசியவாதிகள் கோரிக்கை!

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CBCI) அதிகாரப்பூர்வ தொண்டு நிறுவனமான கரித்தாஸ் இந்தியா, இந்து தேசியவாதிகளின் மதமாற்ற எதிர்ப்பு பிரச்சாரத்தில் சிக்கித்தவிப்பதாகக் கூறியுள்ளது ஆசிய செய்தி நிறுவனம்.
உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம், FCRA எனப்படும், வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறைச் சட்டம், அவ்வமைப்பின் பதிவை இரத்து செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளதாக அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.
2016-இல் நிறுவப்பட்ட ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் (LRPF) என்றதொரு தன்னார்வத் தொண்டு நிறுவனம், மீண்டும் மதமாற்றம் என்ற பொய்யானதொரு காரணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இத்தகையதொரு பிரச்சாரத்தை நடத்தி வருகிறது என்றும் கூறுகிறது அச்செய்தி நிறுவனம். இது குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் கருத்துத் தெரிவித்துள்ள இந்திய காரித்தாஸ் அமைப்பின் தலைவரும் பாட்னாவின் பேராயருமான Sebastian Kallupura அவர்கள், இந்தக் குற்றச்சாட்டுக் குறித்தோ அல்லது இந்தக் குழுவைக் குறித்தோ எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியுள்ளார்.
இந்தப் புகார் குறித்துக் கூறிய இந்திய காரித்தாஸ் அமைப்பின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சகோ. Frederick D'Souza அவர்கள், இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், கரித்தாஸ் இந்தியா எந்த மதமாற்றத்தையும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அனைத்து மக்களுக்கும் சேவை செய்கிறது என்று கூறியுள்ளதுடன், இவ்வமைப்பு ஆயிரக்கணக்கான கிராமங்களில், குறிப்பாக தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு உதவி வருகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நிலையான விவசாய முறைகள் வழியாக, விவசாயிகளின் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது என்றும், இது நகர்ப்புறங்களுக்கு அவர்கள் இடம்பெயர்ந்து செல்வதைப் பெருமளவில் குறைத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள Frederick D'Souza அவர்கள், அச்சம் மற்றும் பாரபட்சத்தின் அடிப்படையில் மட்டுமே இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். [2024-04-04 23:44:44]


காரித்தாஸ் உரிமத்தை இரத்து செய்ய இந்து தேசியவாதிகள் கோரிக்கை!

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CBCI) அதிகாரப்பூர்வ தொண்டு நிறுவனமான கரித்தாஸ் இந்தியா, இந்து தேசியவாதிகளின் மதமாற்ற எதிர்ப்பு பிரச்சாரத்தில் சிக்கித்தவிப்பதாகக் கூறியுள்ளது ஆசிய செய்தி நிறுவனம். உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம், FCRA எனப்படும், வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறைச் சட்டம், அவ்வமைப்பின் பதிவை இரத்து செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளதாக அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.
2016-இல் நிறுவப்பட்ட ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் (LRPF) என்றதொரு தன்னார்வத் தொண்டு நிறுவனம், மீண்டும் மதமாற்றம் என்ற பொய்யானதொரு காரணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இத்தகையதொரு பிரச்சாரத்தை நடத்தி வருகிறது என்றும் கூறுகிறது அச்செய்தி நிறுவனம். இது குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் கருத்துத் தெரிவித்துள்ள இந்திய காரித்தாஸ் அமைப்பின் தலைவரும் பாட்னாவின் பேராயருமான Sebastian Kallupura அவர்கள், இந்தக் குற்றச்சாட்டுக் குறித்தோ அல்லது இந்தக் குழுவைக் குறித்தோ எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியுள்ளார்.
இந்தப் புகார் குறித்துக் கூறிய இந்திய காரித்தாஸ் அமைப்பின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சகோ. Frederick D'Souza அவர்கள், இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், கரித்தாஸ் இந்தியா எந்த மதமாற்றத்தையும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அனைத்து மக்களுக்கும் சேவை செய்கிறது என்று கூறியுள்ளதுடன், இவ்வமைப்பு ஆயிரக்கணக்கான கிராமங்களில், குறிப்பாக தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு உதவி வருகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நிலையான விவசாய முறைகள் வழியாக, விவசாயிகளின் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது என்றும், இது நகர்ப்புறங்களுக்கு அவர்கள் இடம்பெயர்ந்து செல்வதைப் பெருமளவில் குறைத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள Frederick D'Souza அவர்கள், அச்சம் மற்றும் பாரபட்சத்தின் அடிப்படையில் மட்டுமே இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். [2024-04-03 23:07:44]


யானைத் தாக்குதல்கள் குறித்து இந்தியத் தலத்திருஅவை கவலை!

இந்தியாவின் கேராளாவில் யானைத் தாக்குதல்கள் அதிகரித்துவரும் வேளை, சிலர் மனிதர்களை விட காட்டு விலங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று பேராயர் Raphael Thattil அவர்கள் கருத்துத் தெரிவித்ததாகக் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம். மார்ச் 24, இஞ்ஞாயிறன்று, கேரளாவின் வயநாடு மாவட்டத்தை உள்ளடக்கிய மானந்தவாடி மறைமாவட்டத்தில் நடைபெற்ற குருத்து ஞாயிறு திருப்பலிக்குத் தலைமை தாங்கிய சீரோ மலபார் வழிபாட்டு முறை பேராயர் Raphael Thattil அவர்கள் இவ்வாறு கூறியதாக அச்செய்தி நிறுவனம் உரைத்துள்ளது.
மேலும் புலம்பெயர்ந்த குடும்பத்தினர் யாவரும் வன வளங்களைக் கொள்ளையடிப்பவர்கள் அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ள பேராயர் Thattil அவர்கள், அம்மக்கள் கடினமாக உழைத்து உணவை உற்பத்தி செய்பவர்கள் என்றும், அவர்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவர்கள் என்றும் குறிப்பிட்டதாக எடுத்துரைக்கிறது அச்செய்தி நிறுவனம். வனவிலங்குகளைப் பாதுகாக்க நம்மிடையே கடுமையான சட்டங்கள் உள்ளன, ஆனாலும், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே மோதல் எழும் சூழலில், ​​​​மனிதர்கள் குறைந்தளவே பாதுகாக்கப்படுகிறார்கள் என்றும் தனது கவலையை வெளிப்படுத்தினார் பேராயர் Thattil என்றும் குறிப்பிடுகிறது அச்செய்தி.
மேலும் மிருகங்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதையடுத்து, காடுகளை ஒட்டிய மலைகளின் சுற்றுப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க, கம்யூனிஸ்ட் தலைமையிலான மாநில அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென, தலத்திருஅவைத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது. பிப்ரவரியில் தொடங்கி நான்கு மாதங்கள் நீடிக்கும் கோடை காலத்தில், வன வளங்கள் வறண்டு போவதால், வன விலங்குகள், அதிலும் குறிப்பாக, யானைகள் தண்ணீர் மற்றும் உணவைத் தேடி மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதால் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வதாக அறிக்கைகள் கூறுகின்றன என்றும் அச்செய்திக் குறிப்பு எடுத்துக்காட்டுகிறது.
இந்த வடக்கு மாவட்டத்திலுள்ள 10 இலட்சம் மக்களில் ஏறத்தாழ 22 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள் என்றும், இவர்கள் பெரும்பாலும் கிழக்கு வழிபாட்டு முறையான சீரோ-மலபார் தலத்திருஅவையின் உறுப்பினர்கள் என்றும் கூறும் அச்செய்திக் குறிப்பு, அவர்கள் மத்திய கேரளாவிலிருந்து 70 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்கள் என்றும் எடுத்துக்காட்டுகிறது.
2022-23-ஆம் ஆண்டிற்கான அறிக்கை ஒன்றில் கேரள மாநிலத்தில் 8,873 காட்டு விலங்குகளின் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன என்றும், இதில் 98 கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறும் அச்செய்திக் குறிப்பு, இந்த 98 பேரில் யானைகள் தாக்கிக் கொல்லப்பட்டவர்கள் மட்டும் 27 பேர் என்றும் சுட்டிக்காட்டுகிறது. (UCAN) [2024-03-27 23:46:51]


இந்தியாவில் 11 மாநிலங்களில் கிறிஸ்தவம் பெரிதும் துயருறுகிறது!

அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பெரும்பான்மையான இந்திய மாநிலங்கள் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாகச் செயல்படுகின்றன என்று தெற்காசிய நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் துன்புறுத்தல்கள் குறித்த அண்மைய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம்.
மார்ச் 21, இவ்வியாழனன்று வெளியிட்டப்பட்ட அறிக்கையொன்றில் இவ்வாறு கூறியுள்ள புதுதில்லையை தளமாகக் கொண்டு செயல்படும் UCF எனப்படும் ஒருங்கிணைந்த கிறிஸ்தவ அமைப்பு, மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 19 மாநிலங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கையை கடைப்பிடிப்பதற்காக உயிருக்கு அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றனர் என்று அவ்வறிக்கை சுட்டிக்காட்டுவதாக உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.
இந்த ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி வரை, ஏறத்தாழ 122 கிறிஸ்தவர்கள் மத மாற்றம் செய்ததாகப் பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அதே காலகட்டத்தில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான 161 வன்முறைச் சம்பவங்கள் அதன் உதவிமைய எண்களில் பதிவாகியுள்ளதாக UCF தெரிவித்துள்ளது என்றும் கூறுகிறது அச்செய்திக் குறிப்பு.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள UCF அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் A.C. மைக்கேல் அவர்கள், நாட்டிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு இது அதிகம் கவலைதரும் ஒரு விடயம் என்றும், பிஜேபி ஆட்சி செய்யும் 11 மாநிலங்களிலும் மதமாற்றத் தடைச்சட்டம் அமலில் உள்ளதுடன், இது தவறாகப் பயன்படுத்தப்பட்டு கிறிஸ்தவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்துவதற்கான ஆளும் கட்சியின் கருத்தியல், சிறுபான்மை சமூகங்கள் பாதுகாப்பற்றதாக உணரும் இந்தச் சூழ்நிலையை கொண்டு வந்ததாக தெரிகிறது என்று மைக்கேல் அவர்கள் மார்ச் 21, இவ்வியாழனன்று, யூகான் செய்திக்குத் தெரிவித்ததாகவும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. [2024-03-24 00:08:30]


தூய பேதுரு இறையியல் இணையவழிக்கல்வி பட்டமளிப்பு விழா

பொதுநிலையினர் மற்றும் துறவறத்தார், இறைநம்பிக்கையில் ஆழப்படும் விதமாகவும் கிறிஸ்தவ நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்தும் விதமாகவும் ஸ்பாட் எனப்படும் தூய பேதுரு இணையவழி இறையியல் கல்வி திகழ்கின்றது என ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார் அருள்முனைவர் ஜெயபிரதீப். அண்மையில் பெங்களூரு தூய பேதுரு திருப்பீட நிறுவனத்தாரால் இணையவழியில் மறைநூல் மற்றும் இறையியல் பற்றிய பட்டயப்படிப்புக்களுக்கான முதலாமாண்டு பட்டமளிப்பு விழாவானது பெங்களூரு தூய பேதுரு திருப்பீட நிறுவனத்தில் நடைபெற்றது. அவ்விழா குறித்த செய்தி அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் ஸ்பாட் (St. Peter’s Online Theology) நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள்முனைவர் ஜெயபிரதீப்.
பட்டமளிப்பு விழாவில் பெல்லாரி மறைமாவட்ட ஆயர் முனைவர் ஹென்றி டிசோஷா, பெங்களூரு தூய பேதுரு திருப்பீட நிறுவனத்தின் தலைவர் அருள்முனைவர் அந்தோணி இலாரன்ஸ் மற்றும் நிறுவனப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். நம்பிக்கை மற்றும் அறிவாற்றலுக்கான கொண்டாட்டமாக சிறப்பிக்கப்பட்ட இந்த முதலாமாண்டு பட்டமளிப்பு விழாவில் 516 மாணவர்கள் பட்டம் பெற்றனர். 364 மாணவர்கள் இறைப்பணியியல், மறைநூல், திருஅவை சட்டங்கள் போன்றவற்றில் பட்டயப்படிப்பிற்கான பட்டத்தைப் பெற்றனர். மறைநூல்கள் மற்றும் இறையியல் படிப்புக்களுக்கான இணையவழிக் கல்வியானது கல்வி மற்றும் நம்பிக்கை செறிவூட்டல் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையைப் பெற்றுள்ளதாகவும், கிறிஸ்தவ நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள் பற்றிய ஆழமான புரிதலை வளர்ப்பதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பைக் காட்டுவதாகவும் இருக்கின்றது எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SPOT நிறுவனத்தின் தாக்கமானது எல்லைகடந்து நீண்டு, தொலைதூர கிராமங்களில் பணியாற்றும் நபர்களையும் சென்றடைந்துள்ளது எனவும், அருள்சகோதரிகள் மற்றும் பொதுமக்கள், திருப்பலி மறையுரைகளில் மட்டுமே கேட்டு வந்த விவிலிய விளக்கங்களை ஸ்பாட் நிறுவனம் வழங்கும் கல்வி வழியாக இன்னும் அதிகமதிகமாகப் பெற்று தெளிவடைய முடிந்தது எனவும் எடுத்துரைத்துள்ளார். வெறும் சான்றிதழ் படிப்புக்களாக மட்டும் இருந்துவிடாமல் தனி நபர்கள் மற்றும் சமூகங்கள் விவிலியம் பற்றிய அதிக புரிதல் மற்றும் இரக்கத்துடன் மக்களுக்குப் பணியாற்றவும், அதிகாரம் அளிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கற்றல் மற்றும் கண்டுபிடிப்பு, வாழ்க்கையை வளப்படுத்தும் வழியில் உள்ள ஆன்மாக்களை வளர்ப்பது போன்ற புதிய எல்லைகளை எதிர்காலத்தில் செய்யத் தயாராக உள்ளது என்றும், முதல் பட்டமளிப்பு விழா வெறும் கல்வி சாதனைக்கான கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல் தூயபேதுரு திருப்பீட நிறுவனத்தின் அறிவு மற்றும் நம்பிக்கையின் நீடித்த விருப்பத்திற்கான சான்றாகவும் இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். [2024-03-11 23:12:51]


பட்டினியால் வாடும் இந்திய பூர்வகுடி கிறிஸ்தவர்கள்!

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பூர்வகுடி மக்களின் தலைவர்கள் ஏறத்தாழ 17,000 பேரை பட்டினியில் இருந்து காப்பாற்ற கூட்டாட்சி தலையீட்டை நாடியுள்ளனர் என்றும், இன வன்முறையால் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அரசின் நிவாரண முகாம்களுக்கு உணவு வழங்குவதை அதிகாரிகள் நிறுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது ஆசிய செய்தி நிறுவனம்.
சுராசந்த்பூர் மாவட்டத்தின் துணை ஆணையர், பிப்ரவரி 16 முதல் நிவாரண முகாம்களுக்கு உணவு தானியங்களை வழங்க மறுத்துவிட்டார் என்றும், இது ஆயிரக்கணக்கானோரை பட்டினியில் தள்ளியுள்ளது என்றும், பூர்வகுடி மக்களின் தலைவர்கள் அமைப்பு (ITLF) பிப்ரவரி 26 அன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் புகார் அளித்துள்ளது என்றும் கூறியுள்ளது அச்செய்தி நிறுவனம்.
ஒன்றிய அரசு அவசரமாகத் தலையிட்டு உணவு விநியோகத்தை விரைவில் தொடங்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று உள்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள புகாரில் கூறப்பட்டுள்ளது என்று உரைக்கும் அச்செய்திக் குறிப்பு, பூர்வ குக்கி இன மக்கள், பெரும்பாலும் கிறிஸ்தவர்கள், சுராசந்த்பூர் மாவட்டத்தில் அவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்றும், முகாம்களுக்கு இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும் தெரிவிக்கிறது.
இந்து பெரும்பான்மையான மெய்தி இனச் சமூகத்திற்கும் குக்கி இனப் பூர்வகுடி சமூகத்திற்கும் இடையிலான இன வன்முறையைத் தொடர்ந்து, மணிப்பூரில் ஏறத்தாழ 50,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த வன்முறையில் கொல்லப்பட்ட ஏறக்குறைய 200 பேரும், பெரும்பாலும் பூர்வகுடிகளான குக்கி இனக் கிறிஸ்தவர்கள். மேலும் இச்சம்பவத்தின்போது, ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ இல்லங்கள், ஏறத்தாழ 350 வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகள் உட்பட கிறிஸ்தவ நிறுவனங்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. (ASIAN) [2024-02-29 23:26:20]