யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 2வது வாரம் சனிக்கிழமை
2013-04-13


முதல் வாசகம்

கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக் கொண்டே சென்றது.
திருத்தூதர்பணி நூலிலிருந்து வாசகம் 6:1-7

1 அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர். 2 எனவே பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, "நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல. 3 ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம். 4 நாங்களோ இறை வேண்டலிலும், இறை வார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்" என்று கூறினர். 5 திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கோலா, தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிர்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து 6 அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர். 7 கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக் கொண்டே சென்றது. குருக்களுள் பெருங் கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
திருப்பாடல்கள் 33:1-2, 4-5, 18-19

1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. 2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு கடல்மீது நடந்து வருவதைச் சீடர்கள் கண்டனர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 16-21

மாலை வேளையானதும் இயேசுவின் சீடர்கள் கடற்கரைக்கு வந்து, படகேறி மறுகரையிலுள்ள கப்பர்நாகுமுக்குப் புறப்பட்டார்கள், ஏற்கெனவே இருட்டிவிட்டது. இயேசுவும் அவர்களிடம் அதுவரை வந்து சேரவில்லை. அப்போது பெருங்காற்று வீசிற்று; கடல் பொங்கி எழுந்தது. அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் தொலை படகு ஓட்டியபின் இயேசு கடல்மீது நடந்து படகருகில் வருவதைக் கண்டு அஞ்சினார்கள்.
இயேசு அவர்களிடம், ``நான்தான், அஞ்சாதீர்கள்'' என்றார். அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் படகு உடனே அவர்கள் சேரவேண்டிய இடம் போய்ச் சேர்ந்துவிட்டது

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"நான்தான், அஞ்சாதீர்கள்"

என்ன சலித்து சோர்ந்து விட்டிPர்களா? எப்ப பார்த்தாலும் துன்பமாக இருக்கிறதா? எதற்கெடுத்தாலும் சிக்கலாக தோன்றுகிறதா? சூழ்நிலைகள் பாதகமாக தென்படுகிறதா? பயப்படாதீர்கள்.சோர்ந்து போகாதீர்கள்.அஞ்ச வேண்டாம். கலங்க வேண்டாம். உங்களுக்கு வாழ்வு தரும் தேவன் இவற்றின் மத்தியில் உள்ளார். இந்தத் துன்ப திறைகளின்; பின் உறுதியாக அவர் உள்ளார். உங்கள் கண்களுக்கும் மனதுக்கும் மறைவாக இருக்கலாம். ஆனால் அவர் நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களின் மத்தியில் உங்களோடு போராடிக்கொண்டிருக்கிறார். கடலில் பயணம் செய்த சீடர்களும் உங்களைப் போன்ற நிலையில்தான் இருந்தனர். நேரமோ நான்காம் சாமம். இடமோ கடல். காலமோ இரவு. சூழ்நிலையோ பெருங்காற்று அதிலும் எதிர்காற்று வேறு. கடலில் கொந்தளிப்பு. இரவு முழுவதும் இச்சூழலில் தண்டுவலித்த களைப்பு உடலில். மனதில் பயம். அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் போல அங்கு நடந்துவந்த ஆண்டவனைக் கூட அவர்களால் காணமுடியவில்லை. இத்துன்ப வேளையில் தங்களோடு தங்களைத் தேடிவரும் தெய்வத்தைக் காண முடியவில்லை. அடையாளம் கண்ட நிமிடமே கவலையும் கண்ணீரும் கறைந்தோடுகிறது. கரை சேர்ந்துவிடுகின்றனர். துன்ப வேளையில் உன்னை விட்டுத் தூர ஒதுங்கும் தேவன் உன் தெய்வம் அல்ல. உன்னோடு வாழும் தெய்வம் அவர். "உன்னைவிட்டு விலகுவதில்லை. உன்னைக் கைவிடுவதுமில்லை" வாழ்க்கைப் போராட்டத்தில், அதன் வேதனையின் வெப்பத்தில், கண்கள் மறைந்து, மனம் மங்கிவிடுவதால், நம்பிக்கை குறைந்து வாழ்கையே பேதலித்துவிடுகிறது. இத்தகைய வேளைகளில் கண்களையும் சிறப்பாக விசுவாசக் கண்களை அகலத் திறப்போம். அருகில் இருக்கும் ஆண்டவனைப் பார்ப்போம்;. பயணம் இனிதாகும். கரை சேர்வோம்.

மன்றாட்டு:

இறைவா, மக்களின் பசியை ஆற்றிட நீர் வழங்கும் கொடைகளை நாங்கள் வீணடிக்காமல் பயன்படுத்த அருள்தாரும்.