யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
பாஸ்கா காலம் 4வது வாரம் புதன்கிழமை
2013-04-24


முதல் வாசகம்

அவர்கள் நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 24 - 13: 5

அந்நாள்களில் கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவியது. பர்னபாவும் சவுலும் தங்கள் திருத்தொண்டை முடித்தபின், மாற்கு எனப்படும் யோவானைக் கூட்டிக்கொண்டு, எருசலேமிலிருந்து திரும்பிச் சென்றனர். அந்தியோக்கிய திருச்சபையில் பர்னபா, நீகர் எனப்படும் சிமியோன், சிரேன் ஊரானாகிய லூக்கியு, குறுநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினராகவும் போதகராகவும் இருந்தனர். அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடும்போது தூய ஆவியார் அவர்களிடம், ``பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்'' என்று கூறினார். அவர்கள் நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்; தங்கள் கைகளை அவ்விருவர்மீது வைத்துத் திருப்பணியிலமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள். இவ்வாறு தூய ஆவியாரால் அனுப்பப்பட்டவர்கள் செலூக்கியாவுக்குச் சென்றார்கள்; அங்கிருந்து சைப்பிரசுக்குக் கப்பலேறினார்கள். அவர்கள் சாலமி நகருக்கு வந்து அங்குள்ள யூதரின் தொழுகைக் கூடங்களில் கடவுளின் வார்த்தையை அறிவித்தார்கள்; யோவானைத் தங்கள் உதவியாளராகக் கொண்டிருந்தார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக
திருப்பாடல்கள் 67: 1-2. 4. 5,7

1 கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! 2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். பல்லவி
4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். பல்லவி
5 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! 7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 44-50

அக்காலத்தில் இயேசு உரத்த குரலில் கூறியது: ``என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார். என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கிறார். என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன். நான் கூறும் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைக் கடைப்பிடியாதவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குபவன் நானல்ல. ஏனெனில் நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன். என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவருக்குத் தீர்ப்பளிக்கும் ஒன்று உண்டு; என் வார்த்தையே அது. இறுதி நாளில் அவர்களுக்கு அது தண்டனைத் தீர்ப்பு அளிக்கும். ஏனெனில் நானாக எதையும் பேசவில்லை; என்னை அனுப்பிய தந்தையே நான் என்ன சொல்லவேண்டும், என்ன பேசவேண்டும் என்பதுபற்றி எனக்குக் கட்டளை கொடுத்துள்ளார். அவருடைய கட்டளை நிலைவாழ்வு தருகிறது என்பது எனக்குத் தெரியும். எனவே நான் சொல்பவற்றையெல்லாம் தந்தை என்னிடம் கூறியவாறே சொல்கிறேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு உரத்த குரலில் கூறியது: 'என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார்' என்றார்'' (யோவான் 12:44)

யோவான் நற்செய்தியின் கருப்பொருளாக அமைந்த செய்தியை இயேசு ''உரத்த குரலில் கூறினார்'' என நற்செய்தி நூலாசிரியர் எழுதுகிறார் (யோவா 12:44). உலக மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்று உண்மையிலேயே இயேசு குரல் எழுப்புவது இங்கே குறிக்கப்படுகிறது. மக்களுக்குக் கடவுளின் ஆட்சி பற்றிய செய்தியை அறிவித்த இயேசு அவர்களிடமிருந்து ''நம்பிக்கையை'' எதிர்பார்த்தார். அவர் கூறியவை உண்மையே என முழுமனத்தோம் இதய நெகிழ்ச்சியோடும் ஏற்றிட வேண்டும் என்பதே அவருடைய வேண்டுகோள். இவ்வாறு இயேசுவில் நம்பிக்கை கொள்கின்ற மனிதர் இயேசுவை உலகிற்கு அனுப்பிய கடவுள் மீது நம்பிக்கை கொள்கின்றார்கள் என்பது பொருள். இதை இயேசு தெளிவாக எடுத்துக் கூறுகிறார். இயேசு கடவுளிடமிருந்து வந்தார் என்பதை ஏற்க பல யூதர்கள், குறிப்பாக யூத சமயத் தலைவர்கள் தயங்கினார்கள். இயேசு இறந்து உயிர்த்தெழுந்த பிறகு இயேசுவின் சீடர்கள் ஒன்றுகூடி இயேசுவின் பெயரால் ஒரு புதிய சமூகமாக உருவாகிய நிலையிலும் அவர்களுக்கு யூதர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது. இயேசு உண்மையிலேயே கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை ஏற்கத் தயங்கியவர்களுக்கு எழுதப்பட்ட ஒரு செய்தியாக, சவாலாக யோவான் நற்செய்தியை நாம் பார்க்கலாம்.

இயேசுவிடம் நம்பிக்கை கொள்வதற்கு நாமும் அழைக்கப்படுகிறோம். இயேசுவை நம்புவோர் அவருடைய போதனைக்குச் செவிமடுப்பர். அவர் நல்லதென அறிவிப்பதை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்திட முன்வருவர். மனிதருக்கென்று கடவுள் வகுத்த திட்டத்தை இயேசு நமக்கு அறிவிப்பதால் இயேசுவை ஏற்போர் கடவுளை ஏற்கின்றனர். இதையே நம்பிக்கை என்கிறோம். இந்த நம்பிக்கை நம்மில் நாளும் ஆழப்படவேண்டும் என்றால் நாம் இருளிலிருந்து ஒளியை நோக்கிச் செல்ல வேண்டும். இயேசு கூறுகிறார்: ''என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்'' (யோவா 12:46). இயேசு என்னும் ஒளியை ஏற்று அக இருள் நீங்கப்பெற்றோர் நிலைவாழ்வு பெறுவர் என இயேசு நமக்கு வாக்களித்துள்ளார். அவருடைய வாக்கு பொய்க்காது.

மன்றாட்டு:

இறைவா, ஒளியாக வந்து இருளகற்றும் உம்மை நாங்கள் நம்பிக்கையோடு ஏற்றிட அருள்தாரும்.