யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
பாஸ்கா காலம் 5வது வாரம் புதன்கிழமை
2013-05-01

புனித யோசேப் (தொழிலாளர் தினம்)


முதல் வாசகம்

கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அவர்கள் அறிவித்தார்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்15:1-6

1 யூதேயாவிலிருந்து வந்த சிலர், நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்து கொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது" என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர். 2 அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே பெருங் கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்த சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர். 3 அங்கிருந்து திருச்சபையார் அவர்களை வழியனுப்பி வைத்தனர். அவர்கள் பெனிசியா, சமாரியா வழியாகச் சென்று பிற இனத்தவர் மனந்திரும்பிய செய்தியை எடுத்துரைத்தார்கள். இது சகோதரர் சகோதரிகள் அனைவரிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 4 அவர்கள் எருசலேம் வந்தபோது திருச்சபையாரும், திருத்தூதர்களும், மூப்பர்களும் அவர்களை வரவேற்றார்கள். அப்போது கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அவர்கள் அறிவித்தார்கள். 5 ஆனால் பரிசேயக் கட்சியினருள் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட சிலர் எழுந்து, "அவர்கள் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்; மோசேயினது சட்டத்தைக் கடைப்பிடிக்க அவர்களுக்குக் கட்டளையிட வேண்டும்" என்று கூறினர். 6 இதனை ஆய்ந்து பார்க்கத் திருத்தூதரும் மூப்பரும் ஒன்று கூடினர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

"ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம் ", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்
திருப்பாடல்கள்122:1-2 4-5

1 "ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம் ", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.பல்லவி

2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம்.பல்லவி

.4 ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.பல்லவி

5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர் என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15:1-8

1 "உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். 2 என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார். 3 நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். 4 நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது. 5 நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. 6 என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும். 7 நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். 8 நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார்... அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்'' (மத்தேயு 13:54,57)

மத்தேயு நற்செய்தியில் வருகின்ற ஓர் அடிப்படையான கருத்து இயேசுவை ஏற்றவர்கள் சிலர் அவரை ஏற்க மறுத்தவர்கள் சிலர் என்பதாகும். இயேசுவின் போதனையில் ''ஞானம்'' வெளிப்பட்டது; அவர் செய்த புதுமைகளில் கடவுளின் ''வல்லமை'' தோன்றியது. இதை இயேசுவின் சொந்த ஊராரான நாசரேத்து மக்கள் நன்றாகவே அறிந்திருந்தார்கள் (மத் 13:54). ஆயினும் அவர்களுக்கு இயேசுவின் பெற்றோர் யார் என்றும், அவருடைய உறவினர் யார் என்றும் தெரிந்திருந்ததால் இயேசுவும் ஒரு சாதாரண மனிதர் தானே என முடிவுசெய்துவிடுகிறார்கள். ஆக, இயேசுவைப் பற்றிய ''வியப்பு'' ஒருபுறம், அவரைப் பற்றித் தமக்கு எல்லாம் தெரியுமே என்னும் அலட்சியப் போக்கு மறுபுறம் - இவை நாசரேத்து மக்களின் கண்களை மறைத்துவிட்டன. இயேசு உண்மையிலேயே யார் என்பதை அவர்கள் காணத் தவறிவிட்டார்கள். அது மட்டுமல்ல, அவர்கள் தங்கள் கண்களை மறைத்த திரையை அகற்ற முன்வரவில்லை.

இயேசுவைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? அவருடைய போதனை நம் உள்ளத்தைத் தொட்டு அதை உருகவைக்கிறதா? அவர் மக்களின் நன்மைக்காகப் புரிந்த அரும் செயல்கள் நம்மில் ''நம்பிக்கை'' என்னும் தீபத்தை ஏற்றிவைக்கிறதா? இயேசுவின் போதனையையும் சாதனையையும் கண்டு வியப்போர் எல்லாம் அவரில் நம்பிக்கை கொள்வதில்லை. அந்த நம்பிக்கை நம்மில் எழ வேண்டும் என்றால் நம்மைப் பற்றிக்கொண்டிருக்கின்ற முற்சாய்வுகளை நாம் களைந்திட வேண்டும். நம் உள்ளம் கபடற்றதாக மாறிட வேண்டும். அப்போது நாம் கடவுளின் அருளை நம் உள்ளத்தில் ஏற்றிட முன்வருவோம். நம்பிக்கை என்னும் ஒளி நம்மில் கதிர்வீசத் தொடங்கும். இயேசுவின் சீடர்கள் ''நம்பிக்கை குன்றியவர்களாக'' இருந்தார்கள் (காண்க: மத் 6:30; 8:26; 14:31; 16:8). ஆனால் அவருடைய சொந்த ஊர் மக்களோ ''நம்பிக்கை இல்லாதவர்களாக'' மாறிவிட்டார்கள் (மத் 14:58). நம்பிக்கை நம்மில் எழும்போது கடவுளின் வல்ல செயல்கள் நம் வாழ்வில் நிகழ்வதை நாம் கண்டு உணர்வோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனில் நம்பிக்கை கொண்டு வாழ எங்களுக்கு அருள்தாரும்.