யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
பாஸ்கா காலம் 6வது வாரம் வெள்ளிக்கிழமை
2013-05-10


முதல் வாசகம்

ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி, "அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்18;9-18

9 இரவில் ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி, "அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே. 10 ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை. இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்" என்று சொன்னார். 11 அவர் அவர்களுக்கு ஓர் ஆண்டு ஆறு மாதம் இறைவார்த்தையைக் கற்பித்து அங்கேயே தங்கியிருந்தார். 12 கல்லியோ என்பவர் அக்காயா நாட்டின் ஆட்சியாளாராக இருந்த போது யூதர்கள் ஒருமித்து, பவுலைத் தாக்கி, அவரை நடுவர் மன்றத்துக்குக் கூட்டிக் கொண்டு வந்து, 13 "இவன் திருச்சட்டத்துக்கு எதிரான முறையில் கடவுளை வழிபடுமாறு மக்களைத் தூண்டிவிடுகிறான்" என்றார்கள். 14 பவுல் பேச வாயெடுத்த போது கல்லியோ அவர்களை நோக்கி, "யூதர்களே, ஏதாவது குற்றமோ பழிபாவமோ இருக்குமாயின் நான் பொறுமையுடன் உங்கள் வழக்கைக் கேட்டிருப்பேன். 15 ஆனால் இது சொற்களையும் பெயர்களையும் உங்கள் திருச்சட்டத்தையும் பற்றிய சிக்கலாய் இருப்பதால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்; இதில் நடுவராயிருக்க நான் விரும்பவில்லை" என்று கூறி, 16 அவர்களை நடுவர் மன்றத்திலிருந்து துரத்திவிட்டார். 17 உடனே அவர்கள் அனைவரும் தொழுகைக் கூடத்தலைவரான சொஸ்தேனைப் பிடித்து நடுவர் மன்றத்துக்கு முன்பாக அடித்தனர். ஆனால் கல்லியோ எதையும் பொருட்படுத்தவில்லை. 18 பவுல் பல நாள்கள் கொரிந்துவிலுள்ள சகோதரர் சகோதரிகளிடம் தங்கியிருந்தார். அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டுத் தம் நேர்த்திக் கடனை நிறைவேற்றக் கெங்கிரேயா நகரில் முடிவெட்டிக்கொண்டு, அக்கில்லா பிரிஸ்கில்லா ஆகியோருடன் சிரியாவுக்குக் கப்பலேறினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
திருப்பாடல்கள் 47;1-6

1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள் பல்லவி .

2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே;பல்லவி

3 வேற்று மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்; அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார்.பல்லவி

4 நம் உரிமைச் சொத்தை அவர் நமக்குத் தேர்ந்து அளித்தார்; அது அவர் அன்புகூரும் யாக்கோபின் பெருமை ஆகும். பல்லவி

5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.பல்லவி

6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! . நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16;20-23

அக்காலத்தில் யேசு சீடர்களை நோக்கி 20 உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும். 21 பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார். 22 இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள். ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது. 23 அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள். நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

துயரம் மகிழ்ச்சியாக மாறும் !

ஆண்டவர் இயேசுவின் வாக்குறுதிகள் அனைத்திலும் நமக்கு மிகுந்த ஆறுதல் தருவது இதுதான்: #8220;உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்”. இயேசு தம் சீடர்களுக்குப் போலியான வாக்குறுதிகளைத் தரவில்லை. ‘உங்களுக்குத் துயரமே வராது’ என்று சொல்லவில்லை. ‘நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள், துயருறுவீர்கள்’ என்றுதான் சொன்னார். ஆம், இயேசுவின் சீடராய் வாழ்வதில் பல இடையூறுகள் எழத்தான் செய்யும். ஆனால், துயரமே வாழ்வாகிவிடாது. துயரம் மகிழ்ச்சியாக மாறும். அதுதான், இயேசுவின் சொந்த அனுபவம்கூட. அவரது பாடுகள், துன்பங்கள், இறுதியில் சிலுவைச் சாவுரூhநடடip; அத்தோடு அவரது வாழ்வு தோல்வியாக முடிந்துவிடவில்லை. மாறாக, உயிர்ப்பில், வெற்றியில் நிறைவுபெற்றது. அதுபோலவே, நமது வாழ்விலும் இயேசுவின் மதிப்பீடுகளுக்காக நாம் துயரங்களைச் சந்திக்கும்போது, இறுதியில் அந்தத் துயரங்கள் நீங்கி, நமக்கு வெற்றியும், மகிழ்ச்சியும் நிச்சயம் கிட்டும். இந்த நம்பிக்கையோடு நாம் சீடராய் வாழ்வோம்.

மன்றாட்டு:

வாக்கு மாறாத இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் வாக்களித்தவாறே எங்கள் துயரங்கள் நீங்கி, எங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், துன்பங்கள் குறித்து, அழுது புலம்பாமல், துணிவுடன் வாழ அருள் தாரும்.