யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
பாஸ்கா காலம் 7வது வாரம் புதன்கிழமை
2013-05-15


முதல் வாசகம்

உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 20;28-38

28 அக்காலத்தில் பவுல் எபேசு சபையின் முப்பர்களிடம் தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக் கொண்ட கடவுளின் திருச்சபையை மேய்ப்பதற்கு தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள். 29 உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். 30 உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர். 31 எனவே விழிப்பாயிருங்கள்; மூன்று ஆண்டு காலமாக அல்லும் பகலும் இடைவிடாது கண்ணீரோடு நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தி வந்ததை நீங்கள் நினைவிற் கொள்ளுங்கள். 32 இப்போதும் நான் உங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கிறேன்; அவரது அருள் வார்த்தைக்கும் கட்டுப்படுவீர்களாக! அவ்வார்த்தை வளர்ச்சியையும் தூயோர் அனைவருக்குமுரிய உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தரவல்லது. 33 எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை. 34 என்னுடைய தேவைகளுக்காகவும் என்னோடிருந்தவர்களுடைய தேவைகளுக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். 35 இவ்வாறு பாடுபட்டு உழைத்து நலிவுற்றோர்க்குத் துணை நிற்க வேண்டுமென்று அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன். அதோடு, பெற்றுக் கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவு கூருங்கள் என்றும் கூறினேன்." 36 இவற்றைச் சொன்னபின் அவர் முழந்தாள் படியிட்டு அவர்களெல்லாரோடும் சேர்ந்து இறைவனிடம் வேண்டினார். 37 பின் எல்லாரும் பவுலைக் கட்டித் தழுமவி முத்தமிட்டுக் கதறி அழுதனர். 38 "இனி மேல் நீங்கள் என் முகத்தைப் பார்க்கப் போவதில்லை" என்று அவர் கூறியது அவர்களுக்கு மிகுந்த வேதனை அளித்தது. பிறகு அவர்கள் கப்பல்வரைக்கும் சென்று அவரை வழியனுப்பி வைத்தனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்
திருப்பாடல்கள் 68;28-30,32-35

28 கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்; என் சார்பாகச் செயலாற்றிய கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்! 29 எருசலேமில் உமது கோவில் உள்ளது; எனவே, அங்கு அரசர் உமக்குக் காணிக்கை கொணர்வர்.பல்லவி

30 நாணலிடையே இருக்கும் விலங்கினைக் கண்டியும்; மக்களினங்களாகிய கன்றுகளோடு வருகிற காளைகளின் கூட்டத்தையும் கண்டியும்; வெள்ளியை நாடித் திரிவோரை உமது காலடியில் மிதித்துவிடும்; போர்வெறி கொண்டு மக்களினங்களைச் சிதறடியும்.பல்லவி

32 உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். ()33 வானங்களின்மேல், தொன்மைமிகு வானங்களின்மேல், ஏறிவரும் அவரைப் புகழுங்கள்; இதோ! அவர் தம் குரலில் தம் வலிமைமிகு குரலில் முழங்குகின்றார்.பல்லவி

34 கடவுளுக்கே ஆற்றலை உரித்தாக்குங்கள்; அவரது மாட்சி இஸ்ரயேல் மேலுள்ளது; அவரது வலிமை மேக மண்டலங்களில் உள்ளது. 35 கடவுள் தம் தூயகங்களில் அஞ்சுவதற்கு உரியவராய் விளங்குகின்றார்; இஸ்ரயேலின் கடவுள் தம் மக்களுக்கு வலிமையையும் ஊக்கத்தையும் அளிக்கின்றார்; கடவுள் போற்றி! போற்றி!


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 3 "இப்போது உம்மிடம் வருகிறேன். என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக இருக்கும்படி நான் உலகில் இருக்கும்போதே இதைச் சொல்கிறேன் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17;11-19

யேசு வானத்தை அண்ணார்ந்து பார்த்து . தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும். 12 நான் அவர்களோடு இருந்தபோது நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்து வந்தேன்; நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும் அழிவுறவில்லை. மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறும் வண்ணம் அழிவுக்குரியவன் மட்டுமே அழிவுற்றான். 13 "இப்போது உம்மிடம் வருகிறேன். என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக இருக்கும்படி நான் உலகில் இருக்கும்போதே இதைச் சொல்கிறேன். 14 உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது. 15 அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன். 16 நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. 17 உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை. 18 நீர் என்னை உலகிற்கு அனுப்பியது போல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன். 19 அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'தந்தையே, இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன்' என்றார்'' (யோவான் 17:11)

தந்தையிடம் திரும்பிச் செல்கின்ற இயேசு தாம் ''உலகில் இருக்கப்போவதில்லை'' என்கிறார். அதாவது, தம் சீடர்களோடு நடமாடிப் பழகி, அவர்களுக்குக் கடவுளின் ஆட்சி பற்றி அறிவித்த நாள்கள் முடிவுக்கு வந்துவிட்டன என இயேசு அறிவிக்கிறார். தாம் துன்பங்கள் அனுபவித்து, இறக்கப் போவதையும் அவர் சீடர்களுக்குத் தெரிவிக்கிறார். அதே நேரத்தில் இயேசு உலகை விட்டு மறைந்துபோகவில்லை. ஏனென்றால் அவர் சாவை வென்று, உயிர்பெற்றெழுந்தார். புதியதொரு முறையில் அவர் இந்த உலகில் நம்மோடு இருந்துவருகிறார். எனவே, தந்தையிடம் இயேசு சென்றார் என்றதும் அவர் நம்மை மறந்துவிட்டதாகவோ நம்மிடமிருந்து மறைந்துவிட்டதாகவோ நாம் எண்ணலாகாது. மாறாக, தந்தையிடம் சென்ற இயேசு தம் சீடர்களின் வாழ்வில் இன்னும் சிறப்பான விதத்தில் பங்கேற்கிறார்.

தந்தைக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவு தனித்தன்மை வாய்ந்தது. தந்தை தம் மகனாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார். அந்த மகிமையில் நமக்கும் பங்கு வழங்கப்படுகிறது. இயேசு நம்மோடு உயிர்பெற்றெழுந்த ஆண்டவராக இருந்து நம்மை வழிநடத்துகிறார். எனவே நாம் தந்தையோடு உறவாட இயலுகிறது. தந்தையை நமக்கு இயேசு வெளிப்படுத்துகிறார். எனவே நாம் கடவுளின் உடனிருப்பை நம் வாழ்வில் உணர முடிகிறது. இது நமக்கு வழங்கப்படுகின்ற தூய ஆவியின் சக்தியால் நிகழ்கிறது. கடவுளிடம் சென்ற இயேசு நமக்காகப் பரிந்துபேசுகிறார் என்பது இன்னொரு ஆழமான உண்மை. நாம் கடவுளை அணுகிச் சென்று நம் தேவைகளை அவரிடம் எடுத்துரைக்கும்போது நமக்காகத் தந்தையிடம் மன்றாட இயேசு இருக்கின்றார். ஏனென்றால் இயேசு நம்மைப் போல மனிதராக வாழ்ந்ததால் மனித நிலை அவருக்கு அன்னியம் அல்ல. நம் தேவைகளை அவர் அறிவார். நமக்குக் கடவுளின்; அன்பையும் அருளையும் பெற்றுத் தருவார். ஆக, உலகில் இருக்கப்போவதில்லை எனக் கூறுகின்ற இயேசு புதிய முறையில் நம்மோடு இருக்கிறார் என்பதும் நம்மைத் தந்தையிடம் இட்டுச் செல்கிறார் என்பதும் நம் நம்பிக்கை.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் காட்டுகின்ற வழியில் நாங்கள் நடந்து சென்று உம்மைக் கண்டடைய அருள்தாரும்.