யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
பொதுக்காலம் 8வது வாரம் செவ்வாய்க்கிழமை
2013-05-28


முதல் வாசகம்

உன்னத இறைவன் உனக்குக் கொடுத்திருப்பதற்கு ஏற்ப நீயும் அவருக்குக் கொடு
சீராக் ஆகமம் 35;1-12

1 திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பது பல காணிக்கைகளைக் கொடுப்பதற்கு ஈடாகும். கட்டளைகளைக் கருத்தில் கொள்வது நல்லுறவுப் பலி செலுத்துவதற்கு ஒப்பாகும். 2 அன்புக்குக் கைம்மாறு செய்வது மாவுப் படையல் அளிப்பதற்கு இணையாகும். தருமம் செய்வது நன்றிப்பலி செலுத்துவதாகும். 3 தீச்செயலை விட்டுவிடுதல் ஆண்டவருக்கு விருப்பமானது; அநீதியைக் கைவிடுதல் பாவக் கழுவாய்ப் பலியாகும். 4 ஆண்டவர் திருமுன் வெறுங்கையோடு வராதே; கட்டளையை நிறைவேற்றவே பலிகளையெல்லாம் செலுத்து. 5 நீதிமான்கள் காணிக்கைகளைச் செலுத்தும்போது பலிபீடத்தில் கொழுப்பு வழிந்தோட, உன்னத இறைவன் திருமுன் நறுமணம் எழுகிறது. 6 நீதிமான்களின் பலி ஏற்றுக்கொள்ளத்தக்கது; அதன் நினைவு என்றும் நீங்காது. 7 ஆண்டவரைத் தாராளமாய் மாட்சிமைப்படுத்து; உன் உழைப்பின் முதற்கனிகளைக் கொடுப்பதில் கணக்குப் பார்க்காதே. 8 கொடை வழங்கும்போதெல்லாம் முகமலர்ச்சியோடு கொடு; பத்திலொரு பங்கை மகிழ்ச்சியோடு கடவுளுக்கு உரித்தாக்கு. 9 உன்னத இறைவன் உனக்குக் கொடுத்திருப்பதற்கு ஏற்ப நீயும் அவருக்குக் கொடு; உன்னால் முடிந்த அளவுக்குத் தாராளமாய்க் கொடு. 10 ஆண்டவரே கைம்மாறு செய்பவர்; ஏழு மடங்கு உனக்குத் திருப்பித் தருபவர். 11 ஆண்டவருக்குக் கையூட்டுக் கொடுக்க எண்ணாதே; அவர் அதை ஏற்கமாட்டார். அநீத பலியில் நம்பிக்கை வைக்காதே. 12 ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்; அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே கிடையாது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளுக்கு நன்றிப்பலி செலுத்துங்கள்; உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள்
திருப்பாடல்கள் 50;5-8,14-23

5 'பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்று கூட்டுங்கள்.6 வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்!பல்லவி )

7 என் மக்களே, கேளுங்கள்; நான் பேசுகின்றேன்; இஸ்ரயேலே! உனக்கு எதிராய்ச் சான்றுகூறப் போகின்றேன்; கடவுளாகிய நானே உன் இறைவன்;பல்லவி

8 நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன.பல்லவி

14 கடவுளுக்கு நன்றிப்பலி செலுத்துங்கள்; உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள்.15 துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்; உங்களைக் காத்திடுவேன்; அப்போது, நீங்கள் என்னை மேன்மைப்படுத்துவீர்கள்.பல்லவி

16 ஆனால், கடவுள் பொல்லாரைப் பார்த்து இவ்வாறு கூறுகின்றார்; "என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?பல்லவி

17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள்.18 திருடர்களைக் கண்டால் அவர்களோடு விருப்புடன் சேர்ந்து கொள்கின்றீர்கள்; கற்பு நெறி தவறியவர்களோடும் உங்களுக்கு உறவு உண்டு.பல்லவி

19 உங்கள் வாய் உரைப்பது தீமையே; உங்கள் நா புனைவதும் பொய்ம்மையே.20 உங்கள் சகோதரரைப் பற்றி இழிவாகப் பேசுகின்றீர்கள்; உங்கள் தாயின் மக்களைப்பற்றி அவதூறு பேசுகின்றீர்கள்.பல்லவி

21 இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்; ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன்.பல்லவி

22 கடவுளை மறந்தோரே! இதைக் கண்டுணருங்கள்; இல்லையேல், நான் உங்களைப் பீறிப் போடுவேன்; உங்களை விடுவிக்க யாரும் இரார்.பல்லவி

23 நன்றிப்பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்" அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு 10;28-31

28 அப்போது பேதுரு அவரிடம், "பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே" என்று சொன்னார். 29 அதற்கு இயேசு, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் 30 இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். 31 முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

கடைசியானோர் முதன்மை ஆவர்

இழப்பு என்பதற்கு நம் கிறிஸ்தவம் புதிய ஒரு பொருள் கொடுப்பதைக் காண்கிறோம். பொதுவாக, விட்டுவிடுதல், இழத்தல் என்பது நம்மில் ஒரு வெற்றிடம் ஏற்படுத்துவதாக பொருள் கொள்கிறோம். ஆனால் கிறிஸ்துவின் போதனையின்படி, இவை உணர்த்துவதெல்லாம் முற்றிலும் வித்தியாசமானவை. இழத்தல் அல்லது விட்டுவிடுதல் நமக்கு மேலும் பல வேறுபட்ட செல்வத்தைக் கொண்டுவரும் என்ற கருத்தைப் பல இடங்களில் அறிய வருகிறோம்.

விட்டுக்கொடுத்தவர் எவரும் கெட்டதும் இல்லை; கெட்டவர் எவரும் விட்டுக் கொடுத்ததும் இல்லை. விட்டு விட்ட எவரும் "நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்" என்பது கிறிஸ்தவம் தரும் செய்தி. " கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.( யோவா12 :24 )

எனவே நண்பர்களே, கிறிஸ்துவின் பணிக்காக அல்லது அவரின் சாயலாகப் படைக்கப்பட்ட அவரைச் சார்ந்து வாழும் மனிதனுக்காக நீங்கள் செய்யும் தான தர்மங்களால் நீங்கள் இழக்கும் அனைத்திற்கும் பல் வேறு விதங்களில் பல நன்மைகளை இவ்வுலகிலும் மறு உலகிலும் பெறுவீர்கள். எதையும் இழந்து போவதில்லை.பேதுருவின் சந்தேகத்திற்கு இயேசு இந்த விளக்கத்தைக் கொடுத்ததன் மூலம் கிறிஸ்தவத்தின் இத் தனித்தன்மையை உறுதிசெய்கிறார். எனவே நாம் இழப்போம், கொடுப்போம், விட்டு விடுவோம். நமக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். இவ்வாறு இனிது வாழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, நிலைவாழ்வை நோக்கி நாங்கள் பயணம் சென்றிட எங்களுக்கு அருள்தாரும்.