யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
பொதுக்காலம் 9வது வாரம் சனிக்கிழமை
2013-06-08

அன்னை மரியின் அமலஇதயம்


முதல் வாசகம்

ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்;
எசாயா61;9-11

9 அவர்கள் வழிமரபினர் பிறஇனத்தாரிடையேயும், அவர்கள் வழித்தோன்றல்கள் மக்களினங்கள் நடுவிலும் புகழ் அடைவார்கள்; அவர்களை காண்பவர் யாவரும் அவர்களை ஆண்டவரின் ஆசிபெற்ற வழிமரபினர் என ஏற்றுக்கொள்வார்கள். 10 ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்; மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்; நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார். 11 நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது
1சாமுவேல்2;1,4-8

1 அப்பொழுது அன்னா மன்றாடிக் கூறியது; "ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது! என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது! ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன்.4 வலியோரின் வில்கள் உடைபடுகின்றன! தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்!பல்லவி

5 நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர். பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார் ஆகியுள்ளனர்! மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல புதல்வரைப் பெற்றவளோ தனியள் ஆகின்றாள்! பல்லவி

6 ஆண்டவர் கொல்கிறார்; உயிரும் தருகின்றார்; பாதாளத்தில் தள்ளுகிறார்; உயர்த்துகின்றார்பல்லவி;

7 ஆண்டவர் ஏழையாக்குகிறார்; செல்வராக்குகின்றார்; தாழ்த்துகின்றார்; மேன்மைப்படுத்துகின்றார்;பல்லவி

8 புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்; குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்; உயர்குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! மாண்புறு அரியணையை அவர்களுக்கு உரிமையாக்குகின்றார்! உலகின் அடித்தளங்கள் ஆண்டவருக்கு உரியவை! அவற்றின் மேல் அவர் உலகை நிறுவினார்!


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா 2;41-51

41 ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; 42 இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். 43 விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; 44 பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; 45 அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். 46 மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார். 47 அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். 48 அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, "மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே" என்றார். 49 அவர் அவர்களிடம் "நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்றார். 50 அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. 51 பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

தொங்கல் ஆடையா? ஒரு கொதிராந்தா?

மனிதனுக்கு விலாசம் தேவை. விளம்பரம் தேவையல்ல. விலை கொடுத்து விளம்பரப்படுத்தி பெறுவை பெயரும் புகழும். மாறாக தன்னை வருத்தி தயாகம் செய்வதால் தானா அவை வந்து சேர வேண்டும். விளம்பரம் தேடும் விவரம் தெறிந்த படித்த பெரிய மனிதர்களையும், கொடுத்துக்கொடுத்து தன்னையும் தன் வாழ்வையும் தன் முகவரியையும் கூட இழந்து போன ஒரு பெண்ணையும் இங்கே காண்கிறோம்.

இயேசு பெண்ணைப் பாராட்டுகிறார். பெரிய மனிதர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கச் சொல்கிறார். மறைநூல் அறிஞரின் தொங்கலாடை, ஆடம்பரம், செல்வாக்கு, பெருமை இவற்றின் வெளி அடையாளம். கைம்பெண்ணின் ஒரு வெள்ளிக்காசு மறைவான தியாகத்தின் உச்சநிலை. தியாகச்செயல் ஆண்டவருக்கே செய்யப்பட்டப் போதிலும் அது மறைவாக இருக்க வேண்டும். தன்னை வருத்துவதாய் இருக்க வேண்டும்.

நல்ல மனதோடு செய்கின்ற சிறிய தியாகமும் தர்மமும் ஆண்டவரின் ஆசீரை அள்ளிக் கொண்டு குவிக்கும் ஆற்றல் படைத்தது. அதே வேளையில் பெருமைக்காக, விளம்பரத்திற்காகச் செய்யும் பெரிய கொடைகள் பல வேளைகளில் நமக்கு உதவாமல் போய்விடும். ஏழைக் கைம்பெண்ணிடம் விளங்கிய மன நிலையோடு தான தர்மங்களைச் செய்வோம். அது நமக்கு முகவரியைப் பெற்றுத் தரும். முக மலர்ச்சியைக் கொடுக்கும். இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

மன்றாட்டு:

மன்னிப்பின் நாயகனே இறைவா, மனமாற்றம் என்னும் இனிய கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். ஒவ்வொரு முறையும் நான் பாவி என்று ஏற்று, உம்மிடம் திரும்பி வருகின்றபொழுது, வானகத் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாவதற்காக உம்மைப் போற்றுகிறேன். அந்த மன்னிப்பின், மனமாற்றத்தின் அனுபவத்தை எனக்க எப்போதும் தந்தருள்வீராக. ஆமென்.