யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
பொதுக்காலம் 12வது வாரம் செவ்வாய்க்கிழமை
2013-06-25


முதல் வாசகம்

எனக்கும் உனக்கும் இடையே பூசல் வேண்டாம்; ஏனெனில் நாம் உறவினர்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 13: 2,5-18

அந்நாள்களில் ஆபிராம் கால்நடைகளும் வெள்ளியும் தங்கமும் கொண்ட பெரிய செல்வராக இருந்தார். ஆபிராமுடன் சென்ற லோத்துக்கும் ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் கூடாரங்களும் இருந்தன. அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு இடம் போதவில்லை. அவர்களுக்கு மிகுதியான உடைமைகள் இருந்ததால், அவர்களால் சேர்ந்து வாழ முடியவில்லை. ஆபிராமின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் லோத்தின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்பொழுது கானானியரும் பெரிசியரும் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர். ஆபிராம் லோத்தை நோக்கி, ``எனக்கும் உனக்கும் என் ஆள்களுக்கும் உன் ஆள்களுக்கும் இடையே பூசல் ஏற்பட வேண்டாம். ஏனெனில் நாம் உறவினர். நாடு முழுவதும் உன் கண்முன் இருக்கின்றது அல்லவா? என்னிடமிருந்து பிரிந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். நீ இடப்பக்கம் சென்றால் நான் வலப்பக்கம் செல்வேன்; நீ வலப்பக்கம் சென்றால் நான் இடப்பக்கம் செல்வேன்'' என்றார். லோத்து கண்களை உயர்த்தி, எங்கும் நீர்வளம் சிறந்திருந்த யோர்தானின் சுற்றுப்பகுதியைக் கண்டார். சோகார் வரை அப்பகுதி ஆண்டவரது தோட்டம் போலும் எகிப்து நாட்டைப் போலும் இருந்தது. சோதோம், கொமோராவை ஆண்டவர் அழிப்பதற்கு முன் அது அவ்வாறு இருந்தது. லோத்து யோர்தான் சுற்றுப் பகுதி முழுவதையும் தேர்ந்து கொண்டு கிழக்குப் பக்கமாகப் பயணமானார். இவ்வாறு ஒருவர் ஒருவரிடமிருந்து பிரிந்தனர். ஆபிராம் கானான் நாட்டில் வாழ்ந்து வந்தார். லோத்து யோர்தான் சுற்றுப் பகுதியிலிருந்த நகரங்களில் வாழ்ந்து வந்தார். இறுதியில் சோதோமுக்கு அருகில் கூடாரம் அமைத்துக் கொண்டார். ஆனால் சோதோமின் மக்கள் ஆண்டவருக்கு எதிரான மிகக் கொடிய பாவிகளாக இருந்தனர். லோத்து ஆபிராமிடமிருந்து பிரிந்தபின், ஆண்டவர் ஆபிராமை நோக்கி, ``நீ இருக்கும் இடத்திலிருந்து உன் கண்களை உயர்த்தி வடக்கே, தெற்கே, கிழக்கே, மேற்கே பார். ஏனெனில் நீ காணும் இந்த நாடு முழுவதையும் உனக்கும் உன் வழிமரபினருக்கும் என்றென்றும் கொடுக்கப் போகிறேன். உன் வழிமரபினரைப் பூவுலகின் மண்ணைப் போலப் பெருகச் செய்வேன். ஆகவே பூவுலகின் மணலை ஒருவன் எண்ண முடியுமானால், உன் வழிமரபினரையும் எண்ணலாம். நீ எழுந்து, இந்நாட்டின் நெடுகிலும், குறுக்கிலும் நடந்து பார். ஏனெனில் இதை நான் உனக்குக் கொடுக்கப் போகிறேன்'' என்றார். ஆகவே ஆபிராம் தம் கூடாரத்தைப் பிரித்துக் கொண்டு எபிரோனில் இருந்த மம்ரே என்ற கருவாலி மரத்தோப்பு அருகில் வந்து வாழ்ந்தார். அங்கே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?
திருப்பாடல்கள் 15;2-5

2 மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்; 3 தம் நாவினால் புறங்கூறார். பல்லவி

3 தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். 4 நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். பல்லவி

5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; - இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பிறர் உங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென விரும்புகிறீர்களோ அவற்றை மற்றவர்களுக்குச் செய்யுங்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 6,12-14

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும். ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே. இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும்' என்றார்'' (மத்தேயு 7:6)

நாய்கள் மற்றும் பன்றிகள் பற்றிய இக்கூற்று மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணப்படுகிறது. இக்கூற்றின் பொருள் என்ன? ''தூய்மையானது'' என இயேசு குறிப்பிடுவது கடவுளின் பெயர் (காண்க: மத் 6:9 - ''தந்தையே...உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக!''). இயேசு குறிப்பிடுகின்ற ''முத்து'' கடவுளின் ஆட்சிக்கு உருவகம் (மத் 13:45-46இல் வருகின்ற ''முத்து உவமை'' காண்க). ''நாய்கள்'' என இயேசு குறிப்பிடுவது இஸ்ரயேல் குலத்தைச் சாராத ''பிற இனத்தாரை''. இஸ்ரயேலுக்குப் புறம்பே இருந்த தீர், சீதோன் பகுதிகளில் வாழ்ந்த கானானியப் பெண் இயேசுவிடம் வந்து தன் மகளைக் குணமாக்கக் கேட்டபோது இயேசு, ''பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல'' என்று கூறியதை இவண் கருதலாம் (காண்க: மத் 15:26). மேலும் யூதர்கள் நாய்களை வளர்ப்புப் பிராணிகளாக வீட்டில் வைத்திருப்பதில்லை.''பன்றிகள்'' யூதர்களின் கலாச்சாரத்தால் அசுத்தமான மிருகங்களாகக் கருதப்பட்டன. மேற்கூறிய பின்னணியில் பார்க்கும்போது இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தாருக்கு, அதாவது இஸ்ரயேல் அல்லாத பிற இனத்தையோ மதத்தையோ சார்ந்த மக்களுக்கு அறிவிக்க வேண்டாம் எனக் கூறியது தெரிகிறது. இயேசு நற்செய்தியை அறிவிக்க வந்தது இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமே. அதுபோலவே, சீடர்களும் இஸ்ரயேலரிடையே நற்செய்தி அறிவிப்பதில் முழுமையாகக் கவனம் செலுத்த வேண்டும் என இயேசு கேட்டார். ''பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம்'' என இயேசு திருத்தூதர்களுக்குக் கூறியதையும் நாம் கருதலாம் (காண்க: மத் 10:5-6). இஸ்ரயேல் மக்களே நற்செய்தி அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்றால் (காண்க: மத் 5:10; 10:16-36), பிற இனத்தார் அதைவிடவும் அதிக எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என இயேசு கூறியதாக நாம் பொருள் கொள்ளலாம்.

அதே நேரத்தில், மத்தேயு நற்செய்தியில் பிற இனத்தாருக்கும் கடவுளின் மீட்புத் திட்டத்தில் பங்குண்டு என்னும் செய்தியும் தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இயேசு பிறந்ததும் பிற இனத்தாராகிய ''கீழ்த்திசை ஞானிகள்'' அவரைத் தேடி வணங்க வந்ததாக மத்தேயு குறிப்பிடுகிறார் (மத் 2:1-12). பிற இனத்தைச் சார்ந்த கானானியப் பெண் இயேசுவிடம் சென்று, பேய் பிடித்த தன் மகளுக்கு அவர் நலமளிக்க வேண்டும் என்று கேட்டபோது, அவர் முதலில் மறுத்தாலும் பின்னர் அப்பெண்ணின் நம்பிக்கையைப் போற்றியதோடு அவரின் மகளையும் குணமாக்கியதையும் நாம் கருதலாம் (காண்க: மத் 15:21-28). இறுதியாக, உயிர்த்தெழுந்த இயேசு தம் சீடரை அழைத்து அவர்களுக்குப் பணிப் பொறுப்புக் கொடுத்து, ''நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்'' என்று கட்டளை கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது (காண்க: மத் 28:19). ஆக, கடவுளின் திட்டத்தில் இஸ்ரயேலுக்கு ஒரு சிறப்பிடம் இருப்பது தெளிவு. அதே நேரத்தில் கடவுள் வழங்குகின்ற மீட்பும் இயேசு அறிவித்த மீட்பு நற்செய்தியும் உலகிலுள்ள எல்லா மக்களினத்தாருக்கும் கடவுளின் கொடையாக அளிக்கப்படுகிறது என்பதும் உறுதி. இயேசுவின் நற்செய்திப் பணியை நாம் தொடர்ந்து ஆற்றிட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, நற்செய்தி அறிவிப்பதில் நாங்கள் உறுதியாகச் செயல்பட எங்களுக்கு அருள்தாரும்.