யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 13வது வாரம் சனிக்கிழமை
2013-07-06

புனித மரியகொறற்றி


முதல் வாசகம்

.ஈசாக்கு முதிர்ந்த வயதை அடைந்தபோது அவர் கண்களின் பார்வை மங்கிப்போயிற்று.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 27: 1-5, 15-29

ஈசாக்கு முதிர்ந்த வயதை அடைந்தபோது அவர் கண்களின் பார்வை மங்கிப்போயிற்று. அவர் தம் மூத்த மகன் ஏசாவை அழைத்து, `என் மகனே’ என்றார்; ஏசா, `இதோ வந்து விட்டேன்’ என்றான். அவர் அவனை நோக்கி, “இதோ பார்; எனக்கு வயதாகிவிட்டது. சாவு எந்நாள் வருமோ என்று அறியேன். இப்பொழுது உன் கருவிகளான வில்லையும் அம்புக் கூட்டையும் எடுத்துக்கொள். காட்டுக்குப் போ. வேட்டையாடி, எனக்கு வேட்டைக் கறி கொண்டுவா. நான் விரும்பும் முறையில் சுவையான உணவு வகைகளைச் சமைத்து என்னிடம் கொண்டு வா. நான் அவற்றை உண்பேன். நான் சாகுமுன், உனக்கு மனமார ஆசி வழங்குவேன்” என்றார். ஈசாக்கு தம் மகன் ஏசாவிடம் பேசியதை ரெபேக்கா கேட்டுக் கொண்டிருந்தார். வேட்டையாடி வேட்டைக்கறி கொண்டு வருமாறு ஏசா காட்டிற்குப் புறப்பட்டவுடன் ரெபேக்கா தம்முடன் வீட்டில் வைத்திருந்த தம் மூத்த மகன் ஏசாவின் உடைகளில் சிறந்தவற்றைத் தம் இளைய மகன் யாக்கோபுக்கு உடுத்துவித்தார். அவன் கைகளையும் மிருதுவான கழுத்தையும் வெள்ளாட்டுக் குட்டிகளின் தோலால் மூடினார். அவர் சுவையான உணவு வகைகளையும், தாம் சுட்ட அப்பங்களையும் தம் மகன் யாக்கோபின் கையில் கொடுத்தார். அவனும் அவற்றைத் தன் தந்தையிடம் எடுத்துச்சென்று, `அப்பா’ என்று அழைத்தான். அவரும் மறுமொழியாக, `ஆம் மகனே, நீ எந்த மகன்?’ என்று கேட்க, யாக்கோபு தன் தந்தையிடம், “நான்தான் உங்கள் தலைப்பேறான ஏசா. நீங்கள் சொன்னவாறு செய்திருக்கிறேன். எழுந்து உட்கார்ந்து என் வேட்டைப் பதார்த்தங்களை உண்டு மனமார எனக்கு ஆசி வழங்குங்கள்” என்றான். ஈசாக்கு தன் மகனை நோக்கி, “மகனே! இது உனக்கு இவ்வளவு விரைவில் எப்படி அகப்பட்டது?” என்று கேட்க, அவன், “உம் கடவுளாகிய ஆண்டவரால்தான் எனக்கு இது நிகழ்ந்தது,” என்றான். ஈசாக்கு யாக்கோபிடம், “மகனே, அருகில் வா, நீ உண்மையிலேயே என் மகன் ஏசாதானா என்று நான் உன்னைத் தடவிப் பார்த்துத் தெரிந்துகொள்வேன்” என்றார். யாக்கோபு தன் தந்தை அருகில் வந்தான். ஈசாக்கு அவனைத் தடவிப் பார்த்து, `குரல் யாக்கோபின் குரல்; ஆனால் கைகளோ ஏசாவின் கைகள்’ என்றார். அவன் கைகள் அவன் சகோதரன் ஏசாவின் கைகளைப் போல் உரோமம் அடர்ந்தவையாய் இருந்ததால், அவனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. எனவே அவனுக்கு ஆசி வழங்கினார். மீண்டும் அவர் `நீ உண்மையிலேயே என் மகன் ஏசாதானா?’ என்று வினவ, அவனும் `ஆம்’ என்றான். அப்பொழுது அவர், `மகனே, உண்பதற்கு வேட்டைப் பதார்த்தங்களைக் கொண்டு வா. மனமார நான் உனக்கு ஆசி வழங்குவேன்’ என்றார். அவ்வாறே யாக்கோபு கொண்டுவர, அவர் அதை உண்டார். பின், அவன் திராட்சை ரசம் கொண்டுவர, அவர் அதைக் குடித்தார். அப்பொழுது அவன் தந்தை ஈசாக்கு அவனை நோக்கி, `மகனே, அருகில் வந்து என்னை முத்தமிடு’ என்றார். அவனும் அருகில் போய் அவரை முத்தமிட, ஈசாக்கு அவன் அணிந்திருந்த ஆடைகளின் நறுமணத்தை முகர்ந்து ஆசி வழங்கி உரைத்தது இதுவே: “இதோ, என் மகனிடமிருந்து எழும்பும் நறுமணம்! ஆண்டவரின் ஆசிபெற்ற விளை நிலத்தின் வாசனையாம்! வானின் பனித் துளியும், மண்ணின் செழுமையும், மிகுந்த தானியமும், திராட்சை இரசமும் கடவுள் உனக்கு வழங்குவாராக! நாடுகள் உனக்குப் பணி புரிந்திடுக! மக்கள் உனக்குப் பணிந்திடுக! உன்றன் சோதரர்க்குத் தலைவன் நீ ஆகிடுவாய்! உன் அன்னையின் மைந்தர் உன்னடி பணிந்திடுவர்! உன்னைச் சபிப்பார் சாபம் பெறுக! உன்னை வாழ்த்துவார் வளமுற வாழ்க!” என்று ஆசி வழங்கினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரைப் புகழுங்கள்! ஏனெனில், அவர் நல்லவர்
திருப்பாடல்கள் :135; 1-2. 3-4. 5-6

1 ஆண்டவரின் பெயரைப் புகழுங்கள்; ஆண்டவரின் ஊழியரே! அவரைப் புகழுங்கள். பல்லவி

2 ஆண்டவரின் கோவிலுள் நிற்பவர்களே! நம் கடவுளின் கோவில் முற்றங்களில் உள்ளவர்களே! பல்லவி

3 ஆண்டவரைப் புகழுங்கள்! ஏனெனில், அவர் நல்லவர்; அவரது பெயரைப் போற்றிப் பாடுங்கள்; ஏனெனில், அவர் இனியவர் பல்லவி .

4 ஆண்டவர் யாக்கோபைத் தமக்கென்று தேர்ந்துகொண்டார்; இஸ்ரயேலைத் தமக்குரிய தனிச் சொத்தாகத் தெரிந்தெடுத்தார். பல்லவி

5 ஆண்டவர் மேன்மைமிக்கவர் என்பதை அறிவேன்; நம் ஆண்டவர் எல்லாத் தெய்வங்களுக்கும் மேலானவர் என்பதும் எனக்குத் தெரியும் பல்லவி .

6 விண்ணிலும் மண்ணிலும் கடல்களிலும் எல்லா ஆழ்பகுதிகளிலும், ஆண்டவர் தமக்கு விருப்பமான யாவற்றையும் செய்கின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை? அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-17

அக்காலத்தில் யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்தற்றனர். அகு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்பொழுது அவர்களும் நோன்பு இருப்பார்கள். மேலும் எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. ஏனெனில் அந்த ஒட்டு ஆடையைக் கிழித்துவிடும்; கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் தோற்பைகள் வெடிக்கும்; மதுவும் சிந்திப்போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் வீணாய்ப் போகா” என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை' என்றார்'' (மத்தேயு 9:16)

இயேசு மனித வரலாற்றில் ஒரு மாபெரும் புதுமை கொணர்ந்தார். பழைய முறைகள் மறைந்துபோக புதிய முறைகள் உதயம் ஆயின. கடவுளை வழிபடுவதில் நோன்பு ஒரு முக்கிய இடம் வகித்தது. ஆனால் இயேசுவோ விருந்துகளில் மனமுவந்து பங்கேற்றார். யூத சமய வழக்குகளைப் பின்பற்றாத மக்களைப் ''பாவிகள்'' என அழைத்தனர் அக்காலத்துப் பரிசேயர்கள். ஆனால் இயேசு அந்தப் ''பாவிகளோடு'' சேர்ந்து உணவருந்தினார்; தீட்டுப்பட்டோர் எனக் கருதப்பட்ட மக்களோடு உறவாடிப் பழகினார். இவ்வாறு புதுமைகள் பல கொணர்ந்த இயேசு தம்மை மணமகனுக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். திருமண விழாவின்போது சிறப்பான விதத்தில் விருந்து கொண்டாடுவர். அங்கே நோன்புக்கு இடமில்லை. எனவே, இயேசு மக்கள் நடுவே மகிழ்ச்சி கொணர்ந்தார்; அவர்கள் நட்புறவில் நிலைத்துநின்று அன்புப் பிணைப்புகளால் இணைந்திட வழிவகுத்தார்.

பழையதையும் புதியதையும் ஒன்றுசேர்த்தால் குழப்பம்தான் உருவாகும் என இயேசு இரு உவமைகள் வழியாக எடுத்துரைக்கிறார். பழைய ஆடையில் ஒட்டுப்போட புதிய துணியைப் பயன்படுத்துவதில்லை எனவும், புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோற்பையில் ஊற்றலாகாது எனவும் இயேசு கற்பிக்கிறார். இயேசுவின் வருகையோடு புதியதொரு யுகம் பிறந்துவிட்டது. எனவே, மக்கள் தம் வாழ்க்கையைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். புதிய பார்வையோடு கடவுளை அணுக வேண்டும். புதிய உறவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இயேசு கொணர்ந்த புதுமை எதில் அடங்கும்? அடிப்படையில் இயேசு கடவுளை நாம் ஒரு புதிய ஒளியில் பார்க்க வழிவகுத்தார். கடவுள் மனிதரைவிட்டு அகன்று இருப்பவர் அல்ல. அவர் மனித இனத்தோடு தம்மை முழுமையாக ஒன்றித்துக் கொண்டு விட்டார். இது ஒரு புதுமையான நிலையே. மேலும், கடவுள் மனிதரை உயர்ந்தோர் தாழ்ந்தோர் என வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அவருடைய பார்வையில் எல்லா மனிதரும் சமமே. ஏனென்றால் உலக மனிதர் அனைவரும் அவருடைய பிள்ளைகளே. இவ்வாறு கடவுள் பற்றி ஒரு புதிய பார்வையை இயேசு நமக்கு வழங்குகிறார். புதுப் பார்வை பெற்ற நாம் புது முறையில் வாழ்ந்திட அழைக்கப்படுகிறோம். இயேசுவிடம் துலங்கிய மனநிலையும் அவருடைய பார்வையும் நமதாக மாறினால் நாம் புது மனிதராக வாழ்ந்திடுவோம்.

மன்றாட்டு:

இறைவா, ஊறிப்போன பழைய சிந்தனையைக் கைவிட்டு, புதிய பார்வை பெற்று வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.