யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 14வது வாரம் வெள்ளிக்கிழமை
2013-07-12


முதல் வாசகம்

உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்!
தொடக்க நூலிலிருந்து வாசகம் 46: 1-7,28-30

அந்நாள்களில் இஸ்ரயேல் தமக்கிருந்த யாவற்றையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டு, பெயேர்செபாவைச் சென்றடைந்தார். அவ்விடத்தில் தம் தந்தை ஈசாக்கின் கடவுளுக்குப் பலிகளை ஒப்புக்கொடுத்தார். அன்றிரவு கடவுள் இஸ்ரயேலுக்குக் காட்சி அளித்து, `யாக்கோபு! யாக்கோபு!' என்று அழைத்தார். அவர், `இதோ அடியேன்' என்றார். கடவுள், ``உன் தந்தையின் கடவுளான இறைவன் நானே. எகிப்திற்குச் செல்ல நீ அஞ்சவேண்டாம். அங்கே உன்னைப் பெரிய இனமாக வளரச் செய்வேன். நானும் உன்னோடு எகிப்திற்கு வருவேன். உன்னை நான் அங்கிருந்து மீண்டும் அழைத்து வருவேன். யோசேப்பு தன் கையாலே உன் கண்களை மூடுவான்'' என்றார். யாக்கோபு பெயேர்செபாவை விட்டுப் புறப்பட்டார். இஸ்ரயேலின் புதல்வர்கள் தம் தந்தையாகிய யாக்கோபையும் தங்கள் பிள்ளைகளையும் மனைவியரையும் அவருக்குப் பார்வோன் அனுப்பியிருந்த வண்டிகளில் ஏற்றிக்கொண்டனர். கானான் நாட்டில் அவர்கள் சேர்த்திருந்த ஆடு மாடுகளையும் சொத்துகளையும் சேகரித்துக் கொண்டனர். இவ்வாறு யாக்கோபு தம் வழிமரபினர் அனைவரோடும் எகிப்திற்குப் போனார். தம் புதல்வரையும் அவர்கள் புதல்வரையும் தம் புதல்வியரையும் புதல்வரின் புதல்வியரையும் தம் வழிமரபினர் அனைவரையும் அவர் தம்மோடு எகிப்திற்கு அழைத்துக்கொண்டு சென்றார். கோசேன் பகுதியில் யோசேப்பு தம்மை வந்து சந்திக்குமாறு யாக்கோபு யூதாவைத் தமக்குமுன் அனுப்பியிருந்தார். அவர்கள் கோசேன் வந்து சேர்ந்தார்கள். யோசேப்பு தம் தேரைப் பூட்டிக்கொண்டு தம் தந்தை இஸ்ரயேலைச் சந்திக்கச் சென்றார். யோசேப்பு தம் தந்தையைக் கண்டவுடன் அவரை அரவணைத்து அவர் தோளில் சாய்ந்துகொண்டு வெகுநேரம் அழுதார். அப்பொழுது, இஸ்ரயேல் யோசேப்பிடம், ``இப்பொழுது நான் சாகத் தயார். நீ உயிரோடுதான் இருக்கிறாய்! உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்!'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது.
திருப்பாடல்கள் 37: 3-4. 18-19. 27-28. 39-40

3 ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ். 4 ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். பல்லவி

18 சான்றோரின் வாழ்நாள்களை ஆண்டவர் அறிவார்; அவர்கள் உரிமைச் சொத்து என்றும் நிலைத்திருக்கும். 19 கேடு காலத்தில் அவர்கள் இகழ்ச்சி அடைவதில்லை; பஞ்ச காலத்திலும் அவர்கள் நிறைவடைவார்கள். பல்லவி

27 தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய். 28 ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்; தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை; அவர்களை என்றும் பாதுகாப்பார். பொல்லாரின் மரபினரோ வேரறுக்கப்படுவர். பல்லவி

39 நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே. 40 ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 16-23

அக்காலத்தில் இயேசு தம் திருத்தூதர்களை நோக்கிக் கூறியது: ``இதோ! ஓநாய்கள் இடையே ஆடுகளை அனுப்புவதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாயும் புறாக்களைப் போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள். எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள். இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, `என்ன பேசுவது, எப்படிப் பேசுவது' என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார். சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர். அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்கு முன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்கமாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்

இறைபணியாளர்கள் பணிவாழ்வு எவ்வளவு கடினமானது என்தை இயேசு கூறுகிறார். ஆட்டுக்குட்டிகளுக்கிடையே ஓநாயை அனுப்பவது போல் அல்ல ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவது போல் என்கிறார். ஆட்டுக்குட்டிகள் என்ன பாடுபட வேண்டும்! கடித்துக் குதறி நார்நாராக்கிவிடும். ஆனால் எதைப்பற்றியும் கவலைகொள்ள வேண்டாம், எந்த துன்பம் வந்தாலும் கவலை கொள்ளத் தேவை இல்லை என்கிறார். தேவையானது எல்லாம் கடவுளால் அருளப்பபடும் என்ற மனஉறுதியையும் கொடுக்கிறார். ஒன்றே ஒன்றை இறைபணியாளர்களிடம் எதிர்பார்கின்றார். இறுதி வரை நிலைத்து நிற்கவேண்டும்.

இந்த இறைவாக்குகள் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு மட்டும் கொடுத்ததல்ல. கிறிஸ்தவர்களாகிய நம் அனைவருக்கும் கொடுத்த இறைவாக்குகள். உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழ்வெதென்பது மிகவும் கடினமான ஒன்றுதான். இந்த அறநெறியில் வாழ்வது ஓநாய்கிடையே ஆட்டுக்குட்டிகள் படும் பாடாகத்தான் இருக்கும். பலர் இந்த கடினமான கிறிஸ்தவ வாழ்கை நெறியில் பலம் இன்றி தத்தளிப்பதையும் நெறியில் தடம் மாறுவதையும், தவறிப்போவதையும் கண்கூடாகக் காண்கிறோம் அல்லது நாமே அவ்வகையில் வாழ்ந்தும் இருக்கிறோம். இறுதிவரை நிலைத்து நின்றால் நிச்சயம் வெற்றிவாகை சூடுவோம் என்பதில் ஐயமில்லை. பலசூழ்நிலைகளில் நாம் கிறஸ்தவ நன் நெறியில் வாழ்வதற்கு தொடர்து முயற்சிப்பதில்லை.

மன்றாட்டு:

அன்பு இறைவா, உண்மையான கிறிஸ்தவ நெறியில் நாங்கள் வாழ்வதற்கு போதிய வலிமையயையும் ஆற்றலையும் எங்களுக்குத் தந்தருளும். நாங்கள் எங்கள் பலகீனத்தால் தவறும் போது நீரே எம்மை கைதூக்கி நன்நெறியில் வழிநடத்தும். கிறிஸ்தவ வாழ்கை நெறியில் நாங்கள் மனவலிமையுடன் இறுதிவரை நிலைத்து நிற்க அருள்தாரும்.