திருவழிப்பாட்டு ஆண்டு C (28-07-2013)

கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்: தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்: தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்./> கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்: தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்: தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்./> கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்: தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்: தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்./>


திருப்பலி முன்னுரை

எல்லாம் வல்ல இறைவனின் அன்பு மக்களுக்கு, இன்று பொதுக் காலம் பதினேழாம் ஞாயிறு. நாம் மன்றாடிய நாளில் நமக்குச் செவிசாய்த்து: நம் மனத்திற்கு வலிமை அளித்த நம் ஆண்டவரின் சந்நிதானத்தில் ஒன்று கூடியுள்ளோம்.

இன்றைய நற்செய்தியில், எப்படி விசுவாசத்தோடு, வேண்டுவது என்று யேசு நமக்கு சொல்லி கொடுக்கிறார். இயேசுவின் சீடர்கள் கொடுத்து வைத்தவர்கள். எங்களுக்கு இறைவேண்டல் கற்றுக்கொடும் என்று கேட்டவுடன், மிக அருமையான இறை வேண்டலை இயேசு அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். இந்த வேண்டுதலில் தந்தையைப் புகழ்தல், அவர் விருப்பத்துக்கு நம்மைக் கையளித்தல், நம் தேவைகளுக்காக மன்றாடல், மன்னிப்புக் கோருதல் என முழுமையான செபத்தின் அனைத்துக் கூறுகளும் அமைந்துள்ளன. இந்த செபத்தை மட்டும் செபிப்பதோடு, நிறுத்திவிடாமல், இந்த செபத்தில் உள்ள அனைத்துக் கூறுகளையும் நம் செபங்களில் இணைத்துக்கொள்வோம். நாள்தோறும் தந்தை இறைவனைப் புகழ்ந்து, அவரது விருப்பத்தை நம் வாழ்வில் நிறைவேற்ற அருள்கோருவோம். செபம் நம் வாழ்வில் எவ்வளவு முக்கியமானது என்பதையும், இயேசு கற்றுத்தந்த செபம் எவ்வளவு முக்கியமானது என்பதையும் உணர்ந்தவர்களாக, இத்திருப்பலியில் பங்கேற்று இறையாசீர் பெறுவோம்.



முதல் வாசகம்

"தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ?
தொடக்க நூலிலிருந்து வாசகம் 18;20-32

அந்நாட்களில் ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, "சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெருங்கண்டனக்குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது. என்னை வந்தடைந்த கண்டனக்குரலின்படி அவர்கள் நடந்து கொண்டார்களா இல்லையா என்று அறிந்து கொள்ள நான் இறங்கிச் சென்று பார்ப்பேன்" என்றார். அப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமோ ஆண்டவர் திருமுன் நின்று கொண்டிருந்தார். ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: "தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ? ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ? தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?" என்றார். அதற்கு ஆண்டவர், "நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்" என்றார். அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, "தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்துவிட்டேன்; ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் துறைவாயிருக்கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?" என்றார். அதற்கு அவர், "நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அழிக்க மாட்டேன்" என்றார். மீண்டும் அவர், உரையாடலைத் தொடர்ந்து, "ஒருவேளை அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்?" என்று கேட்க, ஆண்டவர், "நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிக்க மாட்டேன்" என்றார். அப்பொழுது ஆபிரகாம்; என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம். ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்? என, அவரும் "முப்பது பேர் அங்குக் காணப்பட்டால் அழிக்க மாட்டேன்" என்று பதிலளித்தார். அவர், "என் தலைவரே, உம்மோடு அடியேன் பேசத்துணிந்து விட்டேன். ஒருவேளை அங்கு இருபது பேரே காணப்பட்டால்?" என, அதற்கு அவர், "இருபது பேரை முன்னிட்டு நான் அழிக்க மாட்டேன்" என்றார். அதற்கு அவர், "என் தலைவரே, சினமடைய வேண்டாம்: இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒரு வேளை அங்குப் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?" என, அவர், "அந்தப் பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்" என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்!
திருப்பாடல்கள் 138:1-3,6-8

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்: தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன்: பல்லவி

உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்: ஏனெனில், அனைத்திற் கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்: என் மனத்திற்கு வலிமை அளித்தீர். பல்லவி

ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்: எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்: ஆனால், செருக்குற்றோ ரைத் தொலையிலிருந்தே அறிந்து கொள்கின்றீர். பல்லவி

நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்: என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்: பல்லவி

உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்: ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு: உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும் பல்லவி

இரண்டாம் வாசகம்

சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்து விட்டார்.
தூய பவுல் கொலேசியருக்கு எழுதிய நிருபத்திலிருந்து வாசகம் 2;12-14

சகோதர சகோதரிகளே! நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள். உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்களாயும் குற்றங்கள் செய்பவர்களாயும் வாழ்ந்ததால் நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். கடவுள் உங்களை அவரோடு உயிர்பெறச் செய்தார். நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார். நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன்பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்து விட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி! 'அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

பலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 11:1-13

அக்காலத்தில் இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, ' ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும் ' என்றார். அவர் அவர்களிடம், ' நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்; தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். (தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்)' என்று கற்பித்தார். மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ' உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ' நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை ' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உள்ளே இருப்பவர், ' எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது ' என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ' மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி! '

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்: தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்: தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

“நம்பிக்கை அளிப்பவராம் இறைவா,

உம் திருச்சபையை வழிநடத்தும்; எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம் நற்கருணை பிரசன்னத்திலே, உம் வார்த்தையிலே இணைந்திருந்து உம் திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

செபிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியரான இயேசுவே,

நீர் கற்றுத் தந்ததுபோல நாள்தோறும் நாங்கள் செபிக்க எங்களுக்கு செப ஆர்வத்தைத் தந்தருளும். நாங்கள் நாள்தோறும் தந்தையைப் போற்றவும், உமக்கு நன்றி கூறவும், தூய ஆவியில் மகிழவும், அன்னை மரியாவை வாழ்த்தவும் எங்களுக்கு வரம்தந்தருள வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீர் வாக்களித்த அனைத்தையும் எமக்கெனச் செய்து முடிக்கும் ஆண்டவரே!

இப் மண்ணிலே புலம்பதித்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்களும், எங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவரும், உமது அன்பிலிருந்து எங்களைப் பிரிக்க முற்படும் எல்லாவித தீய சக்திகளையும் இனங்கண்டு அவற்றை முறியடித்து, உமக்கேற்றவர்களாக வாழ எமக்கு வேண்டிய ஞானத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உமது அன்பையும், இரக்கத்தையும் பெற்று மகிழும் நாங்கள் அனைவரும், ஒருவர் ஒருவரை மன்னித்து, மற்றவர்களோடு பகிர்ந்து உமது சாட்சிகளாய் வாழ எமக்கு அருள் தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வாழ்வளிககும் வார்த்தைகளைக் கொண்டுள்ள தந்தையே!

இறைவார்த்தைக்கு பிழையான விளக்கங்களைக் கொடுத்து பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும்,போட்டி மனநிலையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவர்மீதும் மனமிரங்கி அவர்கள் இறைவார்த்தையை சரியாக விளங்கிக்கொண்டு தாங்கள் பெற்றுக் கொண்ட அழைப்பிற்கேற்ப பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக்காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உமது அன்பையும், இரக்கத்தையும் பெற்று மகிழும் நாங்கள் அனைவரும் அவைகளை மற்றவர்களோடு பகிர்ந்து: எங்கள் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் எம் கடவுளாம் ஆண்டவர் உம்மிடம் அன்பு கொண்டு, எம்மீது அன்புகூர்வது போல் எமக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்ந்து ; உமது சாட்சிகளாய் வாழ எமக்கு அருள் தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களிடம், 'நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக!...' என்றார்'' (லூக்கா 11:2)

''கர்த்தர் கற்பித்த செபம்'' எனவும் ''இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல்'' எனவும் அழைக்கப்படுகின்ற மன்றாட்டு மத்தேயு நற்செய்தியிலும் லூக்கா நற்செய்தியிலும் சிறிது மாறுபட்ட வடிவத்தில் உள்ளன (காண்க: மத் 6:9-15; லூக் 11:2-4). கடவுளை நாம் ''தந்தை'' என அழைக்கும்படி இயேசு கேட்கின்றார். இயேசுவே கடவுளைத் ''தந்தை'' எனவும் ''என் தந்தை'' எனவும் பட தருணங்களில் அழைக்கிறார். மிக நெருக்கமான உறவை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்த இச்சொல் ''அப்பா'' என்னும் பொருள் தருவது. இயேசு பேசிய அரேமிய மொழிச் சொல்லும் ''அப்பா'' என்னும் வடிவம் கொண்டதே. கடவுளைத் தந்தை என அழைப்பதன் பொருள் மூன்று விதங்களில் வெளிப்படுகிறது: அதாவது, கடவுள் அனைத்தையும் படைத்தவர், அனைத்தையும் ஆள்பவர், அனைத்தையும் பேணிக்காப்பவர். இவ்வாறு மனிதருக்கு அனைத்து நலன்களையும் அளித்து, அவர்களைக் காப்பவர் என்பதால் கடவுளைத் தந்தை என அழைப்பது பொருத்தமே. உரோமை மன்னர்களும் ''நாட்டுத் தந்தை'' என அழைக்கப்பட்டார்கள். ஆனால், ஆண்வழி சமுதாயத்தில் ஆணாதிக்கம் நிலவிய பின்னணியில் கடவுளைத் தந்தை என அழைத்து, அதிலிருந்து ஆண்கள் பெண்களை அடக்கி ஆள்பவர்கள் என நாம் பொருள்கொண்டு, கடவுளை அப்பாணியில் ஓர் ஆணாகவும் தந்தையாகவும் உருவகிப்பது தவறாகும். ஏனென்றால் விவிலியம் காட்டுகின்ற கடவுள் இத்தகைய ஆணாதிக்கக் கடவுள் அல்ல.

கடவுள் நம் தந்தை என்பதன் உண்மைப் பொருள் அவர் நமக்கு ஊற்றாகவும் தோற்றுவாயாகவும் இருக்கிறார் என்பதும், நம்மை அன்போடு பராமரித்துக் காக்கிறார் என்பதும் ஆகும். இப்பண்புகளை நாம் பெண்மைக்கும் ஏற்றி உரைக்கலாம். எனவே கடவுள் நமக்குத் தந்தையும் தாயுமாக இருக்கிறார் என நாம் கூற முடியும். அது மட்டுமல்ல, கடவுள் தம் ஆட்சியில் நாம் பங்கேற்க வேண்டும் என்றால் ஒரு சிறு குழந்தைபோல நாம் மாற வேண்டும் எனக் கேட்கின்றார். எனவே, ஆட்சி அதிகாரமும் அடக்குமுறையும் கடவுளின் பண்பல்ல, மாறாக, அன்போடு அனைவரையும் அரவணைத்து, சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டோரையும் உரிமை மறுக்கப்பட்டோரையும் மதித்து ஏற்கும் பண்பே கடவுளின் உள்ளார்ந்த இயல்பு. இவ்வாறு நாம் கடவுளை உருவகித்து, அவரை அணுகும்போது நம் உள்ளத்தில் பிள்ளைக்குரிய பாசமும் பணிவும் தோன்றும். கடவுளின் பாதுகாப்பு நமக்கு எப்போதும் உண்டு என்னும் உணர்வும் நம்மில் ஆழமாக வெளிப்படும்.

மன்றாட்டு:

இறைவா, உம்மை நம்பிக்கையோடு அணுகி வந்து, பிள்ளைகளுக்குரிய பாசத்தோடு உம்மை அன்பு செய்திட அருள்தாரும்.