யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 21வது வாரம் செவ்வாய்க்கிழமை
2013-08-27

புனித மொனிக்கா


முதல் வாசகம்

நாங்கள் தகுதி உடையவர்களெனக் கருதி, நற்செய்தியைக் கடவுளே எங்களிடம் ஒப்படைத்தார்
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்2;1-8

1 சகோதர சகோதரிகளே! நாங்கள் உங்களிடம் வந்த நோக்கம் வீணாகவில்லை என்பது உங்களுக்கே தெரியும். 2 உங்களிடம் வருமுன்பே பிலிப்பி நகரில் நாங்கள் துன்புற்றோம். இழிவாக நடத்தப்பட்டோம் என்பது உங்களுக்குத் தெரியும். இருப்பினும் பெரும் எதிர்ப்புக்கிடையில் கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்க நம் கடவுளிடமிருந்து துணிவு பெற்றோம். 3 எங்கள் அறிவுரைகள் தவற்றையோ, கெட்ட எண்ணத்தையோ, வஞ்சகத்தையோ அடிப்படையாகக் கொண்டவையல்ல. 4 நாங்கள் தகுதி உடையவர்களெனக் கருதி, நற்செய்தியைக் கடவுளே எங்களிடம் ஒப்படைத்தார். அதற்கேற்ப, நாங்கள் பேசுகிறோம். மனிதர்களுக்கு அல்ல, எங்கள் இதயங்களைச் சோதித்தறியும் கடவுளுக்கே உகந்தவர்களாயிருக்கப் பார்க்கிறோம். 5 நாங்கள் என்றும் போலியாக உங்களைப் புகழ்ந்ததேயில்லை. இது உங்களுக்குத் தெரிந்ததே. போதனை என்னும் போர்வையில் நாங்கள் பொருள் பறிக்கப் பார்க்கவில்லை. இதற்குக் கடவுளே சாட்சி. 6 கிறிஸ்துவின் திருத்தூதர்கள் என்னும் முறையில் நாங்கள் உங்களிடம் மிகுதியாக எதிர்பார்த்திருக்க முடியும். ஆனால் மனிதர் தரும் பெருமையை உங்களிடமிருந்தோ, மற்றவர்களிடமிருந்தோ நாங்கள் தேடவில்லை. 7 மாறாக, நாங்கள் உங்களிடையே இருந்தபொழுது, தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதுபோல், கனிவுடன் நடந்து கொண்டோம். 8 இவ்வாறு உங்கள் மீது ஏக்கமுள்ளவர்களாய், கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்றி, எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்; ஏனெனில் நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்
திருப்பாடல்கள் 139;1,3,4,6

1 ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்1 ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!பல்லவி

3 நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே.பல்லவி

4 ஆண்டவரே! என் வாயில் சொல் உருவாகு முன்பே, அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்.பல்லவி

6 என்னைப்பற்றிய உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது; அது உன்னதமானது; என் அறிவுக்கு எட்டாதது ப>ல்லவி.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 6 குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23;23-26

' வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டு விடுகிறீர்கள். இவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றையும் விட்டுவிடக்கூடாது.24 குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள்.25 ' வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள்.26 குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, (மத்தேயு 23:23-26)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல, வெளுத்ததெல்லாம் பாலல்ல என்பார்கள். கண்ணுக்கு அழகாகத் தோன்றுவது உண்மையிலேயே அதற்கு நேர்மாறாகக் கூட இருக்கலாம். இயேசு பரிசேயரையும் மறைநூல் அறிஞரையும் குறித்துப் பேசியது இதுதான். அவர்கள் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறார்கள்; ஆனால் உள்ளேயோ போலித்தனம் நிறைந்திருக்கிறார்கள். இதை விளக்க இயேசு ''வெள்ளையடித்த கல்லறை'' என்னும் உருவகத்தைப் பயன்படுத்துகிறார். பாலஸ்தீன நாட்டு வழக்கப்படி சாலையோரங்களில் கல்லறைகளை அமைப்பதுண்டு. அக்கல்லறைகளை அணுகிச்சென்றாலோ, தெரியாமல் தொட்டுவிட்டாலோ தீட்டு ஏற்பட்டுவிடும் என்று மக்கள் நம்பினார்கள். எனவே, அக்கல்லறைகளுக்கு அருகில் மக்கள் போய்விடாமல் இருக்க அவற்றின் மீது வெள்ளை பூசுவது வழக்கம். குறிப்பாக மக்கள் அதிகம் நடமாடுகின்ற காலமாகிய விழாக் காலங்களில் இவ்வாறு கல்லறைகள் வெள்ளையடிக்கப்படும். அப்போது சூரிய ஒளியில் அக்கல்லறைகள்மீது வீசும்போது அவை பளிச்சென்று தோற்றமளிக்கும். இதைப் பார்த்துப் பழகிய இயேசு பரியேரும் மறைநூல் அறிஞரும் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்கு ஒப்பாவர் என்றுரைத்தார். மக்களைத் தீட்டுப்படுத்துவது யாது? வெளியே மின்னிக்கொண்டும் உள்ளே அழுகியவற்றைத் தாங்கிக்கொண்டும் இருக்கின்ற கல்லறைபோல இயேசுவின் எதிரிகளும் உள்ளே அழுக்கு நிறைந்தவர்களாகவும் வெளியே மட்டும் கவர்ச்சியுடையவர்களாகவும் இருந்ததால் அவர்களது நிலை ஏற்கத்தகாகது என இயேசு கூறுகிறார். உண்மையாகவே நம்மைத் தீட்டுப்படுத்துபவை பேராசை, அழுக்காறு, சிற்றின்ப நாட்டம், ஆணவம் போன்றவையே. -- மக்களிடையே நிலவிய அநீதிகளைச் சுட்டிக்காட்டிய இறைவாக்கினர்களைப் பண்டைக்காலத்தில் கொன்றுபோட்டவர்களே அந்த இறைவாக்கினருக்கு அழகிய கல்லறைகளைக் கட்டிவைத்தார்கள் என்பத முரண்பாடான உண்மை. இயேசு எதிர்பார்க்கின்ற தூய்மை வெளித் தோற்றம் மட்டுமல்ல, மாறாக நம் உள்ளத்தில் நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக வாழ்ந்திட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் நாங்கள் தூய்மை உடையவர்களாகவும் வெளி நடத்தையில் நேர்மையுள்ளவர்களாகவும் வாழ்ந்திட அருள்தாரும்.