யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 21வது வாரம் வியாழக்கிழமை
2013-08-29

திருமுழுக்கு யோவானின் பாடுகள்


முதல் வாசகம்

உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்'' என்கிறார் ஆண்டவர்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1: 17-19

அந்நாள்களில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. ``நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன். இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன். அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன் மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்'' என்கிறார் ஆண்டவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும்.
திருப்பாடல்கள் 71: 1-2. 3-4. 5-6. 15-,17

1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும். 2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும். பல்லவி

3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர். 4ய என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். பல்லவி

5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை. 6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். பல்லவி

15யb என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்; உம் அருட்செயல்களை என்னால் கணிக்க இயலாது. 17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனி வரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! யோவான் ஏரோதிடம், ``உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல'' எனச் சொல்லி வந்தார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 17-29

அக்காலத்தில் ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆள் அனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் ஏரோதிடம், ``உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல'' எனச் சொல்லி வந்தார். அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை. ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்துவந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், ``உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்'' என்றான். ``நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்'' என்றும் ஆணையிட்டுக் கூறினான். அவள் வெளியே சென்று, ``நான் என்ன கேட்கலாம்?'' என்று தன் தாயை வினவினாள். அவள், ``திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்'' என்றாள். உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, ``திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்'' என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர் முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டு வருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டு வந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர்' என்றார்'' (மத்தேயு 24:45)

கடவுள் நமக்குப் பல பொறுப்புக்களைத் தந்துள்ளார். குடும்பத்தில் பெற்றோர் பிள்ளைகளை வளர்த்து நல்ல மனிதர்களாக அவர்களை உருவாக்கும் பொறுப்பைப் பெற்றுள்ளனர். திருச்சபையில் தலைவர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களை நல்வழியில் நடத்திச் செல்லும் பொறுப்பைப் பெற்றுள்ளனர். அதுபோலவே பரந்த உலக சமூகத்திலும் அரசியல், கல்வி, மருத்துவம், பொருளாதாரம் போன்ற பல துறைகளிலும் தலைவர்களாய் இருப்போர் பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளனர். இவர்கள் எல்லாரும் தங்கள் பொறுப்பைச் செயல்படுத்துவதில் தன்னலம் துறந்து பிறர் நலம் நாட வேண்டும் என்பது தெளிவு. இயேசு இத்தகைய பொறுப்பை ஒரு கதை வழி விளக்குகின்றார். ''நம்பிக்கைக்குரிய பணியாளர்'' என்னும் அக்கதையில் ஆழமான பல கருத்துக்கள் உள்ளன (மத் 24:45-51). தொடக்க காலத் திருச்சபையின் வாழ்வு இக்கதையில் துலங்குகிறது என்பர் அறிஞர். ''வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாற'' அமர்த்தப்படுகிறார் ஒரு பணியாளர்; அவர் ''நம்பிக்கைக்கு உரியவர், அறிவாளி'' (காண்க: மத் மத் 24:45). தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையாள்களுக்குத் தேவையான உணவு அளித்து, அவர்களைப் பாதுகாத்துப் பேணும் செயலை அவர் பொறுப்போடு ஆற்ற வேண்டும். தொடக்க காலத் திருச்சபையில் யூத-கிறிஸ்தவர்களும் பிற இனக் கிறிஸ்தவர்களும் இருந்தனர். யூதர்கள் பிற இனத்தாரோடு சேர்ந்து உணவருந்துவதைத் தவிர்த்தனர். ஆனால் எல்லா மனிதரும் கடவுள்முன் சமமே என்னும் இயேசுவின் போதனையைக் கிறிஸ்தவர்கள் துணிச்சலோடு நடைமுறைப்படுத்தவில்லை. இயேசுவின் சீடர்களில் முதல்வராக விளங்கிய பேதுரு கூட இதில் நல்ல முன்னுதாரணமாகச் செயல்படவில்லை என பவுல் அவரைக் கடிந்துகொண்டார் (காண்க: கலா 2:11-14). மேலும், சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் நிலவும்போது ''உயர்ந்தோர்'' ''தாழ்ந்தவர்களோடு'' (''தாழ்த்தப்பட்டர்களோடு'') கூடி இருந்து உணவருந்த மறுத்தனர். ஆனால் இயேசுவோ மனிதரிடையே ஏற்றத் தாழ்வுகள் கற்பிப்பதைக் கடிகின்றார். இது இயேசு கூறிய ''திருமண விருந்து உவமை''யிலிருந்து தெளிவாகிறது. அங்கே ''அழைக்கப்பட்ட'' விருந்தினரோடு தெருக்களிலிருந்து கூட்டிவரப்பட்ட ஏழைகளும் சம நிலையில் அமர்த்தப்பட்டு விருந்தில் பங்கேற்கின்றனர். ஆக, தொடக்க காலத் திருச்சபை சமத்துவ உணர்வை வளர்த்தது.

எல்லாருக்கும் ''வேளாவேளை உணவு பரிமாறுவது'' (மத் 24:45) இன்னொரு பொருளிலும் புரிந்துகொள்ளப்படலாம். அதாவது, கடவுளாட்சி பற்றி இயேசு நமக்கு வழங்கிய போதனை உண்மையான ''உணவு''. அந்த உணவு எல்லா மக்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். அந்த உணவை அனைவருக்கும் வழங்குகின்ற பொறுப்பு நமக்கு உண்டு (காண்க: 1 கொரி 3:2; யோவா 6:25-33). கடவுள் மனித குலத்திற்குப் பகிர்ந்தளிக்க நம்மிடம் ஒப்படைத்த உணவையும் பிற வளங்களையும் அவர்களோடு பகிர்ந்துகொள்ளாமல் நாம் பாழடித்தால் நாம் தண்டனைக்கு உள்ளாவோம் (காண்க: மத் 24:48-51). நம்பிக்கைக்கு உரிய பணியாளர்களாகச் செயல்படவும், அறிவோடு நடக்கவும் கடவுள் நம்மை அழைக்கின்றார். அவரிடமிருந்து பெற்ற இம்மாபெரும் பொறுப்பை நாம் நன்முறையில் நிறைவேற்றினால் அவரே நமக்குக் கைம்மாறு வழங்குவார். அதுவும் கடவுளின் கொடையே (மத் 24:45-47).

மன்றாட்டு:

இறைவா, நம்பிக்கைக்கு உரிய பணியார்களாக நாங்கள் செயல்பட அருள்தாரும்.