யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 23வது வாரம் புதன்கிழமை
2013-09-11


முதல் வாசகம்

ஒருவரோடு ஒருவர் பொய் பேசாதீர்கள்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-11

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சார்ந்தவைபற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்து விட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும்பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள். ஆகவே உலகப் போக்கிலான உங்கள் இயல்புக்குரிய பரத்தைமை, ஒழுக்கக் கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலை வழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள். இவையே கீழ்ப்படியா மக்கள்மீது கடவுளின் சினத்தை வரவழைக்கின்றன. இத்தகையவர்களோடு நீங்கள் வாழ்ந்தபோது நீங்களும் இவற்றில்தான் உழன்றீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் சினம், சீற்றம், தீமை ஆகிய அனைத்தையும் அகற்றிவிடுங்கள். பழிப்புரை, வெட்கக்கேடான பேச்சு ஆகிய எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது. ஒருவரோடு ஒருவர் பொய் பேசாதீர்கள். ஏனெனில் நீங்கள் பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு, புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். அவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு நீங்கள் கடவுளை முழுமையாய் அறிய முடியும். புதுப்பிக்கப்பட்ட நிலையில் கிரேக்கர் என்றும், யூதர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர் என்றும், விருத்தசேதனம் பெறாதவர் என்றும், நாகரிகம் அற்றோர் என்றும், சீத்தியர் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாய் இருப்பார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.
திருப்பாடல்கள் 145;2-3,10-13

2 நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். 3 ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. பல்லவி

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். 13யb உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 20-26

அக்காலத்தில் இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: ``ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்து வந்தனர். ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள். இப்போது உண்டு கொழுத்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள். மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே' என்றார்'' (லூக்கா 6:21)

மனிதர் தம் வாழ்வில் எதிர்கொள்கின்ற அனுபவங்களின் அடிப்படையில் மதிப்பீடுகளை உள்வாங்கிக் கொள்கிறார்கள். பிறர் வழியாகவும் சமூக நடைமுறை வழியாகவும் நாம் பெறுகின்ற மதிப்பீடுகளும் உண்டு. ஆனால் இவ்வாறு நாம் பெறுகின்ற மதிப்பீடுகளையெல்லாம் கடவுளின் பார்வையோடு நாம் அணுகவேண்டும். இயேசு லூக்கா நற்செய்தியில் வருகின்ற ''சமவெளிப் பொழிவின்'' போது ''ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்'' என்றார். வழக்கமாக, ஏழைகள் என்றால் பிறரால் இகழப்படுகிறவர்கள்; அவர்களைப் பிறர் மதிப்பதில்லை. இது உலகப் போக்கு. ஆனால் இயேசு அப்போக்கினை வேரோட்டமாக மாற்றியமைக்கிறார்; புரட்டிப் போடுகிறார். செல்வமும் வசதியும் சொத்தும் சுகமும் யாருக்கு இல்லையோ அவர்களுக்குக் கடவுளின் ஆசியில்லை என மக்கள் எண்ணிய காலத்தில் இயேசு அவர்களுடைய எண்ணத்தை மாற்றுகிறார்.

இன்றைய உலகில் ஏழை என்றால் பலர் ஏளனமாகத்தான் நினைக்கிறார்கள். ஏழைகளுக்குச் செல்வம் இல்லை என்பது மட்டுமல்ல, செல்வாக்கும் இருப்பதில்லை. அவர்களுடைய உரிமைகள் எளிதில் மறுக்கப்படுகின்றன; அவர்கள் மனித மாண்போடு நடத்தப்படுவதும் இல்லை. இது இயேசுவின் பார்வைக்கு முற்றிலும் முரணானது. இயேசு ஏழைகளுக்கு ''இறையாட்சி உரியது'' என மொழிகின்றார். கடவுள் தாம் படைத்த மக்களை ஏழை செல்வர் என்றோ தாழ்ந்தோர் உயர்ந்தோர் என்றோ வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அவர் முன்னிலையில் எல்லா மனிதருமே மாண்புடையவர்கள்தாம். குறிப்பாக, இவ்வுலகம் யாரை இகழ்வாகக் கருதுகிறதோ அவர்களைக் கடவுள் தனிப் பாசத்தோடு அரவணைக்கிறார். கடவுளின் பார்வை நமதாக வேண்டும். ஏழைகளோடு ஏழையாகத் தம்மையே மாற்றிய இயேசு நமக்கு விடுக்கும் சவாலை நாம் ஏற்போமா?

மன்றாட்டு:

இறைவா, அனைவரையும் அரவணைக்கும் உம் அன்பை நாங்கள் உணர்ந்து எங்கள் வாழ்வில் வெளிப்படுத்த அருள்தாரும்.