யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 23வது வாரம் வியாழக்கிழமை
2013-09-12


முதல் வாசகம்

ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 12-17

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ளுங்கள். ஒருவரைப் பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவை அனைத்தையும் பிணைத்து நிறைவு பெறச் செய்யும். கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாய் இருங்கள். கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடி கொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப் பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள். எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

தூயகத்தில் இறைவனைப் போற்றுங்கள்! வலிமைமிகு விண்விரிவில் அவரைப் போற்றுங்கள்! 2
திருப்பாடல்கள் 150: 1-2. 3-4. 5-6

1 தூயகத்தில் இறைவனைப் போற்றுங்கள்! வலிமைமிகு விண்விரிவில் அவரைப் போற்றுங்கள்! 2 அவர்தம் வல்ல செயல்களுக்காய் அவரைப் போற்றுங்கள்! அவர்தம் எல்லையிலா மாண்பினைக் குறித்து அவரைப் போற்றுங்கள்! பல்லவி

3 எக்காளம் முழங்கியே அவரைப் போற்றுங்கள்! வீணையுடன் யாழிசைத்து அவரைப் போற்றுங்கள். 4 மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து அவரைப் போற்றுங்கள்! யாழினை மீட்டி, குழலினை ஊதி அவரைப் போற்றுங்கள்! பல்லவி

5 சிலம்பிடும் சதங்கையுடன் அவரைப் போற்றுங்கள்! `கலீர்' எனும் தாளத்துடன் அவரைப் போற்றுங்கள்! 6 அனைத்து உயிர்களே, ஆண்டவரைப் புகழ்ந்திடுக! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 27-38

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்: உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள். உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக்கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள். பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே. உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே. திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்னும் நோக்குடன் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே. நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில் அவர் நன்றிகெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார். உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'உங்கள் பகைவர்களிடம் அன்புகூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்வோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்' என்றார்'' (லூக்கா 6:27-28)

அன்பு என்றால் என்ன? இக்கேள்விக்கு இயேசு வழங்கும் பதில் புரட்சிகரமானது. அன்பு பற்றிய விளக்கங்களை நாம் திருக்குறளில் காணலாம்; பண்டைக்கால கிரேக்க, உரோமை இலக்கியங்களில் பார்க்கலாம். பொதுவாக அன்பை மூன்று வகையாகப் பிரிப்பார்கள். முதலில் குடும்ப உறவுகளின் அடிப்படையில் எழுகின்ற அன்பு. இதில் பெற்றோர்-பிள்ளைகள் அன்பு, சகோதரர் அன்பு போன்றவை அடங்கும். இரண்டாவது காதலர்கள் நடுவே நிலவும் அன்பு. இது பற்றித் திருக்குறள் காமத்துப் பால் விரிவாகப் பேசுகிறது. மூன்றாவது நண்பர்களுக்கிடையே நிலவும் அன்பு. இந்த அன்பின் வகைகளில் எல்லாம் தெரிகின்ற ஓர் அடிப்படையான அம்சம் ''அன்பு செய்வோர் ஒருவர் ஒருவருடைய நலனில் அக்கறை கொள்வார்கள்'' என்பதாகும். இயேசு அன்புக்கு வழங்கிய வரையறை மனித உறவுகளின் அடிப்படையையும் தாண்டிச் செல்கிறது. கடவுள் மனிதருக்குக் காட்டுகின்ற அன்புதான் மனிதர் ஒருவர் ஒருவர் மட்டில் காட்டுகின்ற அன்புக்கு அளவீடாகத் துலங்க வேண்டும் என இயேசு நமக்குக் கற்பிக்கிறார். எனவே, பகைவரையும் நாம் அன்பு செய்ய வேண்டும் என்னும் கட்டளையை இயேசு தருகிறார். இது சாதாரண மனித இயல்பைத் தாண்டிச் செல்லும் ஒரு கோரிக்கை. பிறர் நமக்குத் தீங்கிழைத்தால் அவர்களுக்கு அதே பாணியில் நாமும் தீங்கிழைப்பது சரியே என்பது ''உலகப் போக்கு''. ஆனால் கடவுளின் பார்வை வேறுபட்டது. அவருடைய அன்பு எல்லா மனிதருக்கும் வழங்கப்படுகின்றது. தம்மை ஏற்போரையும் மறுப்போரையும் அவர் அன்பு செய்கிறார். தம் கட்டளைகளை மீறி நடந்து, பிற மனிதருக்குத் தீங்கிழைக்கின்ற மனிதரையும் கடவுள் அன்புசெய்கிறார்.

அதே பாணியில் நம் அன்பு அமைய வேண்டும் என்பது இயேசுவின் போதனை. இங்கே மூன்று அம்சங்கள் உள்ளன, அன்பு என்பது நம் உள்ளத்திலிருந்து எழுகின்ற உணர்வு. இந்த அன்புணர்வு பகைவர் மட்டிலும் காண்பிக்கப்பட வேண்டும். உணர்விலிருந்து பிறப்பது நாம் பேசுகின்ற சொல். பகைவரை நாம் சபித்தல் ஆகாது; மாறாக அவர்கள் ''வாழ்க'' என நாம் ஆசி கூற வேண்டும். பகைவருக்கு எதிராக நாம் செயல்படாமல் அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். இறுதியாக, பகைவருக்காக நாம் இறைவனிடம் மன்றாட வேண்டும். இவ்வாறு இயேசு பகைவர் மட்டில் நாம் கொள்ள வேண்டிய அன்பை மிக ஆழமான விதத்தில் எடுத்துக் கூறுகிறார். உணர்விலும், சொல்லிலும், செயலிலும், இறைவேண்டலிலும் நாம் பகைவரை அன்பு செய்வது வெளிப்பட வேண்டும் (லூக் 6:27-28). அப்போது கடவுள் எல்லா மனிதரையும் வேறுபாடின்றி அன்புசெய்வது போல நாமும் அன்புடையவர்களாக மாறுவோம். இயேசு வழங்குகின்ற இந்தப் புரட்சிகரமான ''அன்புக் கட்டளை'' ஒரு பெரிய சவால் என்பதில் ஐயமில்லை.

மன்றாட்டு:

இறைவா, பகைவரையும் அன்புசெய்கின்ற இதயத்தை எங்களுக்குத் தந்தருளும்.