யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 24வது வாரம் சனிக்கிழமை
2013-09-21

புனித மத்தேயு


முதல் வாசகம்

நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-7, 11-13

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர். கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது. அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார். அதனால் நாம் எல்லாரும் இறைமகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சி அடைவோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன;
திருப்பாடல்கள் 19: 1-2. 3-4

1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது. பல்லவி

3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! `பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13

அக்காலத்தில் மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததை இயேசு கண்டார்; அவரிடம், ``என்னைப் பின்பற்றி வா'' என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்த போது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், ``உங்கள் போதகர் வரி தண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?'' என்று கேட்டனர். இயேசு இதைக் கேட்டவுடன், ``நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. `பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

உரிமையாளரின் கருத்தை மதிப்போம்

உங்கள் வாழ்வு வசந்தமாகும் கருத்து வேறுபாடுகள் களையப்பட்டால்;. ஒரே நிகழ்வை காணும் இருவர் இரு வேறு கருத்துக்கள் கொண்டால் பல்வேறு சிக்கல்கள் குடும்பத்திலும் சமுதாயத்திலும் பெருகுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அது குடும்பங்களின் மகிழ்ச்சியையும் தனி நபரின் நிம்மதியையும் கெடுத்துவிடுகிறது.

மத்தேயுவின் வீட்டில் இயேசுவும் அவரது சீடர்களும் விருந்து உண்கிறார்கள். பணத்திற்காக, பதவிக்காக எதையும் செய்யத் துணிந்த இக் கும்பலை யூதச் சமூகம் வெறுத்தது இயல்பு. அநியாயமாக, விதிகளுக்கு அப்பார்ப்பட்டு அதிக தொகையை பயமுறுத்தி, வன்முறையில் பிடுங்கிக்கொண்டார்கள். கூட இருந்தே குழி பறிக்கும் எட்டப்பனாக யூதரிடம் வரி வாங்கி உரோமையருக்குச் செலுத்தினர்.

இயேசு அவர்கள் செய்ததை நியாப்படுத்தவில்லை. தவறு என்றே சொல்லுகிறார். அவர்கள் நோயாளிகள்(மத் 9:12), பாவிகள்(மத் 9:13) என்று உறுதியாகச் சொல்லுகிறார். ஆயினும் மத்தேயு வீட்டில் விருந்துண்டதன் மூலமும் அவரைத் தன் பணிக்கென அழைத்ததன்மூலமும் தன் வேறுபட்ட தெய்வீக அணுகுமுறையையும் வித்தியாசமான இறை நோக்கத்தையும் முன்வைக்கிறார். "நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை" மத்9:13. "இரக்கத்தையே விரும்புகிறேன்"மத் 9:13 என்னும் வரிகள் இயேசுவின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகின்றன.

பரிசேயர்களோ, செயலின் உரிமையாளரின் நோக்கத்தை மதிக்காது, தங்கள் கருத்தை வலியுறுத்தியதால், மத்தேயுவின் வீட்டில் விருந்துண்ட செயல் பெரிய கண்டனத்துக்கு உள்ளாகிவிட்டது. இருவரிடையே உள்ள பகை வளர்வதற்கு வாய்ப்பாகிவிட்டது. உரிமையாளரின் எண்ணங்களை மதிப்போம். கருத்தொருமித்து வாழ்வோம். வாழ்வு வசந்தமாகும். இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவை நாங்கள் மன உறுதியோடு பின்சென்றிட அருள்தாரும்.