யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் புதன்கிழமை
2013-09-25


முதல் வாசகம்

`கடவுளே! உம்மை நோக்கி என் முகத்தைத் திருப்ப வெட்கி நாணுகிறேன். ஏனெனில், எங்கள் பாவங்கள் எங்கள் தலைக்குமேல் பெருகிவிட்டன.
எஸ்ரா நூலிலிருந்து வாசகம் 9: 5-9

மாலைப் பலி நேரத்தில் நோன்பை முடித்துக் கிழிந்த ஆடையோடும் மேலுடையோடும் முழந்தாளிட்டு என் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி கைகளை விரித்து, எஸ்ராவாகிய நான் கூறியது: ``கடவுளே! உம்மை நோக்கி என் முகத்தைத் திருப்ப வெட்கி நாணுகிறேன். ஏனெனில், எங்கள் பாவங்கள் எங்கள் தலைக்குமேல் பெருகிவிட்டன. எங்கள் குற்றங்கள் விண்ணைத் தொட்டுவிட்டன. எம் முன்னோர் காலமுதல் இதுவரை நாங்கள் பெரும் பாவம் செய்துள்ளோம். எங்கள் பாவங்களினால், நாங்களும் எங்கள் அரசர்களும், குருக்களும் வேற்று நாட்டு மன்னர்களின் கைக்கும், வாளுக்கும், அடிமைத்தனத்திற்கும், கொள்ளைக்கும், வெட்கக் கேட்டுக்கும் இதுவரை ஒப்புவிக்கப்பட்டோம். ஆனால், தற்பொழுது சிறிது காலமாய் எம் கடவுளும் ஆண்டவருமாகிய உமது கருணை துலங்கியுள்ளது; எங்களுள் சிலரை எஞ்சியோராக விட்டுவைத்தீர்; உமது புனித இடத்தில் எங்களுக்குச் சிறிது இடம் தந்தீர்; எம் கடவுளாகிய நீர் எம் கண்களுக்கு ஒளி தந்தீர்; எமது அடிமைத்தனத்திலிருந்து சற்று விடுதலை அளித்தீர். நாங்கள் அடிமைகளாக இருந்தும், எம் கடவுளாகிய நீர் எங்களை அடிமைத்தனத்திற்குக் கையளிக்கவில்லை. மாறாக நாங்கள் உயிர் பிழைக்கவும், எங்கள் கடவுளின் கோவிலை எழுப்பவும், பாழடைந்ததைப் பழுது பார்க்கவும் யூதேயாவிலும் எருசலேமிலும் பாதுகாப்பு அளிக்கவும் பாரசீக மன்னர்களின் முன் எமக்கு உமது தயை கிடைக்கவும் செய்தருளினீர்!''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நீதியின் ஆண்டவரைப் போற்றுங்கள்;
தோபி 13: 2,3. 6,7. 8.

2 அவர் தண்டிக்கிறார்; இரக்கமும் காட்டுகிறார். பாதாளத்தின் ஆழத்திற்கே தள்ளுகிறார்; பேரழிவிலிருந்து மேலே தூக்குகிறார். அவரது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை. பல்லவி

3 இஸ்ரயேல் மக்களே, வேற்றினத்தார்முன் அவரது புகழை அறிக்கையிடுங்கள். ஏனெனில் அவர் அவர்களிடையே உங்களைச் சிதறடித்துள்ளார். பல்லவி

6 நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் அவர்பால் திரும்பி அவர் திருமுன் உண்மையுடன் ஒழுகினால் அவர் உங்கள்பால் திரும்புவார்; பல்லவி

தமது முகத்தை உங்களிடமிருந்து என்றுமே திருப்பிக் கொள்ளார். 7 உங்களுக்கு அவர் செய்துள்ளவற்றை இப்பொழுது எண்ணிப் பாருங்கள்; பல்லவி நீதியின் ஆண்டவரைப் போற்றுங்கள்; வாயார அவரை அறிக்கையிடுங்கள். என்றுமுள மன்னரை ஏத்திப் போற்றுங்கள். பல்லவி

8 நான் அடிமையாய் வாழும் நாட்டில் அவரைப் போற்றுவேன்; அவருடைய ஆற்றலையும் மேன்மையையும் பாவ நாட்டமுள்ள இனத்தார்முன் அறிக்கையிடுவேன் பல்லவி

. பாவிகளே மனந்திரும்புங்கள்; அவர் திருமுன் நேர்மையுடன் ஒழுகுங்கள். ஒருவேளை அவர் உங்கள்மீது அருள்கூர்வார்; உங்களுக்கு இரக்கங்காட்டுவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-6

அக்காலத்தில் இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார். இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார். அப்போது அவர்களை நோக்கி, ``பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள். உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய நகரை விட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்'' என்றார். அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, ... இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணிதீர்க்கவும் அவர்களை அனுப்பினார்'' (லூக்கா 9:1-2)

இயேசு தம் பணியைத் தொடர்வதற்காகப் பன்னிரு திருத்தூதர்களை அனுப்பிய செய்தியையும், எழுபத்திரண்டு சீடர்களை அனுப்பிய செய்தியையும் லூக்கா பதிவுசெய்துள்ளார் (காண்க: லூக் 9:1-6; 10:1-12). இந்த இரண்டு பதிவுகளும் ஒரே நிகழ்வின் இரு வடிவங்களாக இருக்கலாம் என அறிஞர் கருதுகின்றனர். எவ்வாறாயினும், இயேசுவின் பணியைத் தொடர்வதற்காக அனுப்பப்பட்ட சீடர்களின் வரலாற்றில் தொடக்க காலத் திருச்சபையின் அனுபவம் பிரதிபலிப்பதை நாம் காணலாம். இயேசு தம் சீடர்களை அனுப்புவது இரண்டு முக்கிய குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக. அவர்கள் ''இறையாட்சி பற்றிப் பறைசாற்ற வேண்டும்''; ''நற்செய்தியை அறிவிக்க வேண்டும்'' (லூக் 9:2,6). இவ்வாறு பணியாற்றும்போது சீடர்கள் ''உடல் நலம் குன்றியோரின் பிணிகளையும் போக்குவார்கள்'' (காண்க: லூக் 9:2). அன்று சீடர்களுக்கு அளித்த பணியை இன்றைய திருச்சபையும் தொடர வேண்டும். இறையாட்சி நம்மிடையே வந்துள்ளது என்னும் நல்ல செய்தியை அறிவிக்கின்ற அதே நேரத்தில் திருச்சபை மக்களின் பிணிகளையும் போக்க வேண்டும். இந்த பிணிகள் பல வகை: உடல், உளம், ஆன்மா சார்ந்த எல்லாவித ஊனங்களும் குறைபாடுகளும் ''பிணிகள்'' எனலாம். கொடிய வறுமையில் வாடுவோர், சமுதாயத்தால் ஒடுக்கப்படுவோர், மனித உரிமைகள் மறுக்கப்பட்டு சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டோர் ஆகிய எல்லா மக்களுமே ஒருவிதத்தில் ''பிணி''களால் அவதிப்படுகிறவர்களே. இவர்களுக்கு இயேசுவின் சீடர்கள் அறிவிக்கும் நற்செய்தி என்ன? எல்லாவித அநீதிகளிலிருந்தும் மக்களை விடுவிக்க இயேசு வந்தார் என்னும் நற்செய்தியை அறிவிக்காமல் திருச்சபை இயேசுவின் நற்செய்திப் பணியைத் தொடர்ந்து ஆற்ற இயலாது.

மேலும் இயேசு ''பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போக வேண்டாம்'' என்றார் (லூக் 9:3). இந்த அறிவுரை இன்றைய வாழ்க்கைச் சூழமைவுகளுக்குப் பொருந்திப் போகாது என நாம் நினைக்கலாம். ஆனால் இயேசு வழங்கிய அறிவுரையின் உட்பொருளை நாம் மறந்துவிடலாகாது. இயேசுவின் பணியைத் தொடர்வோர் உலகப் பார்வையில் செயல்படாமல் கடவுளிடத்தில் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும் என இயேசு அறிவுறுத்துகிறார். அக்காலத்தில் பயணம் சென்றவர்கள் கைத்தடி வைத்துக்கொண்டார்கள். நடக்கும்போது ஊன்றிக்கொள்வதற்கும், வழிப்பறிக்காரர்களிடமிருந்தும் காட்டு விலங்குகளிடமிருந்தும் தங்களைக் காத்துக்கொள்வதற்கும் அது பயன்பட்டது. பையில் உணவுப் பொருள் மற்றும் பணம் போன்றவற்றை வைத்திருந்தார்கள். மாற்று உடையாக ஓர் உள்ளாடையும் பயன்பட்டது. ஆனால் இயேசுவின் சீடர்கள் மற்ற வழிப்போக்கர்கள் போலத் தங்களைக் கருதாமல் தங்கள் தேவைகளை நிறைவேற்ற கடவுளையே நம்பியிருக்க வேண்டும். அதுபோல, வீடுவீடாகச் சென்று உதவி கேட்காமல் பிறர் கொடுப்பதைப் பெற்று நிறைவடைய வேண்டும். ஆக, பற்றற்றான் பற்றினைப் பற்றிக் கொண்டவர்கள் பிற பற்றுகளிலிருந்து விடுதலை பெறும்போதுதான் கடவுளின் பணியை நன்முறையில் ஆற்ற இயலும் என்பது இன்று வாழும் நமக்கு விடப்படுகின்ற சவால்.

மன்றாட்டு:

இறைவா, உம் பணியை ஆற்றுவதில் மன உறுதியோடு நாங்கள் செயல்பட அருள்தாரும்.