யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் வெள்ளிக்கிழமை
2013-09-27

புனித வின்சன் டிபோல்


முதல் வாசகம்

`இன்னும் சிறிது காலத்தில் நான் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும் பாலை நிலத்தையும் நடுக்கமுறச் செய்வேன்
இறைவாக்கினர் ஆகாய் நூலிலிருந்து வாசகம் 2: 1-9

தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஏழாம் மாதத்தின் இருபத்தோராம் நாளன்று, ஆண்டவரின் வாக்கு இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக அருளப்பட்டது: ``யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமாகிய செருபாபேலிடமும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவிடமும் மக்களுள் எஞ்சியிருப்போர் அனைவரிடமும் இப்பொழுது நீ போய் இவ்வாறு சொல்: `இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைக் கண்டவர் எவராகிலும் உங்களிடையே இன்னும் இருக்கின்றனரா? இப்போது இது உங்களுக்கு எக்கோலத்தில் தோன்றுகிறது? இது உங்கள் பார்வையில் ஒன்றும் இல்லாதது போல் தோன்றுகிறது அல்லவா? ஆயினும் செருபாபேலே! மன உறுதியோடு இரு,' என்கிறார் ஆண்டவர். `தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவே! மன உறுதியோடு இரு; நாட்டிலுள்ள அனைத்து மக்களே, ஊக்கம் கொள்ளுங்கள்; பணியைத் தொடருங்கள்; ஏனெனில் நான் உங்களோடு இருக்கிறேன்' என்கிறார் படைகளின் ஆண்டவர்.'' ``நீங்கள் எகிப்தினின்று புறப்பட்டு வந்த போது உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதியின்படி, உங்கள் நடுவில் எனது ஆவி நிலைகொண்டிருக்கிறது; அஞ்சாதீர்கள். ஏனெனில் படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: `இன்னும் சிறிது காலத்தில் நான் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும் பாலை நிலத்தையும் நடுக்கமுறச் செய்வேன். வேற்றினத்தார் அனைவரையும் நிலைகுலையச் செய்வேன். அப்போது வேற்றினத்தார் அனைவரின் விருப்பத்திற்குரியவைகளும் இங்கு வந்து சேரும்; இந்தக் கோவிலை நான் மாட்சியால் நிரப்புவேன்' என்கிறார் படைகளின் ஆண்டவர். ` வெள்ளி எனக்கு உரியது, பொன்னும் எனக்கு உரியது', என்கிறார் படைகளின் ஆண்டவர். `இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியை விடப் பின்னைய மாட்சி மிகுதியாய் இருக்கும்', என்கிறார் படைகளின் ஆண்டவர். `இந்த இடத்தில் நான் நலம் நல்குவேன்' என்கிறார் படைகளின் ஆண்டவர்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளே, என் நேர்மையை நிலைநாட்டும்;
திருப்பாடல்கள் 43: 1. 2. 3. 4

1 கடவுளே, என் நேர்மையை நிலைநாட்டும்; இறைப் பற்றில்லா இனத்தோடு என் வழக்குக்காக வாதிடும்; வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த மனிதர் கையினின்று என்னை விடுவித்தருளும். - பல்லவி

2 கடவுளே! நீரே என் ஆற்றல்; ஏன் என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துயருடன் நடமாட வேண்டும்? - பல்லவி

3 உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும். அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். - பல்லவி

4 அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ``ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-22

அக்காலத்தில் இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம் ``நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' என்று அவர் கேட்டார். அவர்கள் மறு மொழியாக, ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்'' என்றார்கள். ``ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, ``நீர் கடவுளின் மெசியா'' என்று உரைத்தார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். மேலும் இயேசு, ``மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்'' என்று சொன்னார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், 'நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?' என்று அவர் கேட்டார்'' (லூக்கா 9:18)

இயேசு பல அதிசயங்களைச் செய்கிறார் எனக் கேள்விப்பட்ட குறுநில மன்னன் ஏரோது அந்திப்பா இயேசுவைச் சந்திக்க விருப்பம் கொண்டான். ''இவர் யாரோ?'' என்னும் கேள்வியையும் எழுப்பினான் (காண்க: லூக் 9:9). அதன் பிறகு இயேசு ஐயாயிரம் பேருக்கு அதிசயமான விதத்தில் உணவளிக்கும் நிகழ்ச்சியை லூக்கா பதிவுசெய்துள்ளார் (லூக் 9:10-17). வயிறார உண்ட மக்கள் இயேசுவை ஓர் இறைவாக்கினராகப் பார்த்திருப்பார்கள். முற்காலத்தில் புதுமைகள் புரிந்து மக்களுக்கு உணவளித்த எலியா போன்றவர் இயேசு என நினைத்திருப்பார்கள் (காண்க: 1 அர 17:8-14). ஆனால் இயேசு ''தனித்து இறைவனிடம் வேண்டச் செல்கின்றார்'' (காண்க: லூக் 9:18). முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு முன்னர் இயேசு இறை வேண்டல் செய்தார் என லூக்கா பல இடங்களில் குறிப்பிடுகிறார். அதுபோலவே இங்கும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடக்கவிருந்தது. இயேசு சீடர்களிடம் ஒரு கேள்வி கேட்கிறார். அக்கேள்விக்கு அவர்கள் அளித்த பதில் சரியே என இயேசு ஏற்றுக்கொண்டாலும் அதில் ஒரு திருத்தம் கொணர்கிறார்.

''நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' - இவ்வாறு இயேசு கேட்ட கேள்விக்கு சீடர்கள் தந்த பதில் சரியானதுதான். மக்கள் இயேசுவை ஓர் இறைவாக்கினராகப் பார்த்தார்கள். ''ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?'' என்று இயேசு கேட்ட கேள்விக்கு சீடர்களின் பெயரால் பேதுரு அளித்த பதில் ''நீர் கடவுளின் மெசியா'' என்பது (லூக் 9:20). இங்கே லூக்கா நற்செய்தியாளர் இயேசு தம்மைப் படிப்படியாகத் தம் சீடர்களுக்கு வெளிப்படுத்தியதைக் குறிப்பிடுகிறார். இயேசு உண்மையிலேயே கடவுளால் ''திருப்பொழிவு பெற்றவர்'' (மெசியா). ஆயினும் உலகப் பாணியில் அதிகாரம் செலுத்தவோ, ஆட்சியில் அமர்ந்து இஸ்ரயேலை ஒரு வலிமை மிக்க சுதந்திர நாடாக மாற்றிடவோ அவர் வரவில்லை. இயேசு துன்பங்கள் அனுபவிக்க வேண்டும், கொலைசெய்யப்பட வேண்டும் என்பது கடவுளின் திட்டமாக இருந்தது. ஆனால் அவர் சாவையும் முறியடித்து, புதியதொரு வாழ்வுக்கு உயிர்பெற்றெழுவார் (காண்க: லூக் 9:22). ''நான் யார்?'' என இயேசு இன்று நம்மைப் பார்த்துக் கேட்கின்றார். மக்களுக்கு அதியமான விதத்தில் உணவளித்த அதே இயேசு கடவுளை நோக்கி வேண்டுவதில் நேரம் செலவிட்டார். மக்களின் உடல் பசியைப் போக்குவது மட்டுமே அவருடைய நோக்கமாக இருக்கவில்லை. கடவுளோடு ஆழ்ந்த உறவில் நிலைப்பதும் அவருடைய இயல்பாக இருந்தது. கடவுளோடும் மனிதரோடும் இயேசு கொண்டிருந்த உறவு நம்மிலும் துலங்க வேண்டும். ஆக, இயேசுவை நாம் சரியாக அடையாளம் காண வேண்டும் என்றால் அவர் நம் வாழ்வின் மூச்சாக மாற வேண்டும். அவரே நம் உள்ளத்திலிருந்து நம்மை வழிநடத்த நாம் முழுமையாக அவருடைய கைகளில் நம்மை ஒப்படைக்க வேண்டும். அப்போது ''துன்புறும் மெசியா''வாக வந்த இயேசு துன்பங்களின் நடுவிலும் நமக்குத் தோன்றுவார்; நம்மைத் தேற்றி நமக்குத் தம் புது வாழ்வில் பங்களிப்பார். நம்மைக் கடவுளோடும் மனிதரோடும் நல்லுறவில் இணைக்கின்ற பாலமாக விளங்குவார்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவை நாங்கள் ஆழமாக அறிந்திட அருள்தாரும்.