யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 26வது வாரம் சனிக்கிழமை
2013-10-05

புனித மரிய பவுஸ்தீனா


முதல் வாசகம்

நீங்கள் கடவுளுக்குச் சினமூட்டியதால்தான் பகைவரிடம் ஒப்படைக்கப் பட்டீர்கள்.
இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 4: 5-12, 27-29

இஸ்ரயேலின் புகழை நிலைநாட்டும் என் மக்களே, வீறுகொள்வீர். நீங்கள் வேற்றினத்தாரிடம் விற்கப்பட்டது உங்கள் அழிவிற்காக அன்று; நீங்கள் கடவுளுக்குச் சினமூட்டியதால்தான் பகைவரிடம் ஒப்படைக்கப் பட்டீர்கள். கடவுளை விடுத்துப் பேய்களுக்குப் பலியிட்டதால் உங்களைப் படைத்தவருக்குச் சினமூட்டினீர்கள். உங்களைப் பேணிக் காத்துவந்த என்றுமுள கடவுளை மறந்தீர்கள். உங்களை ஊட்டி வளர்த்த எருசலேமை வருத்தினீர்கள். கடவுளின் சினம் உங்கள் மீது வரக் கண்டு எருசலேம் கூறியது: ``சீயோனின் அண்டை நாட்டவரே, கேளுங்கள். கடவுள் எனக்குப் பெருந்துயர் அனுப்பியுள்ளார். ஏனெனில் என்றுமுள்ளவர் என் புதல்வர், புதல்வியர் மீது சுமத்திய அடிமைத்தனத்தை நான் கண்டேன். மகிழ்ச்சியோடு நான் அவர்களைப் பேணி வளர்த்தேன்; ஆனால் அழுகையோடும் துயரத்தோடும் அனுப்பி வைத்தேன். நானோ கைம்பெண்; எல்லாராலும் கைவிடப்பட்டவள். என் பொருட்டு யாரும் மகிழ வேண்டாம்; என் மக்களின் பாவங்களை முன்னிட்டு நான் தனிமையில் விடப்பட்டுள்ளேன். ஏனெனில் அவர்கள் கடவுளின் சட்டத்தை விட்டு விலகிச் சென்றார்கள். என் மக்களே வீறு கொள்வீர்; கடவுளை நோக்கிக் கூக்குரலிடுவீர். இத்துயரங்களை உங்கள் மீது அனுப்பி வைத்தவர் உங்களை நினைவு கூர்வார். கடவுளை விட்டு அகன்று செல்வதில் முன்பு நீங்கள் முனைந்து நின்றீர்கள். அதை விடப் பன்மடங்கு ஆர்வத்துடன் அவரைத் தேடும் பொருட்டு இப்பொழுது அவரிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில், இக்கேடுகளை உங்கள் மீது வரச் செய்தவரே உங்களுக்கு முடிவில்லா மகிழ்ச்சியையும் மீட்பையும் அருள்வார்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்
திருப்பாடல்கள் 69: 32-34. 35-36

32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. -பல்லவி

33 ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. -பல்லவி

34 வானமும் வையமும் கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும். -பல்லவி

35 கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள் -பல்லவி .

36 ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! `தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-24

அக்காலத்தில் அனுப்பப்பட்ட எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பி வந்து, ``ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன'' என்றனர். அதற்கு அவர், ``வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப் பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்'' என்றார். அந்நேரத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகை அடைந்து, ``தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்'' என்றார். ``என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்'' என்று கூறினார். பின்பு அவர் தம் சீடர் பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக, ``நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர். ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள்; ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பிவந்து, 'ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள்கூட எங்களுக்கு அடிபணிகின்றன' என்றனர்'' (லூக்கா 10:17)

இயேசுவின் பணியைத் தொடர்ந்து ஆற்ற வேண்டிய பொறுப்பு அவருடைய சீடர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இயேசு அனுப்பிய எழுபத்திரண்டு சீடரும் நற்செய்தி அறிவித்து, மக்களுக்கு நலம் கொணரும் பணியைத் தொடர்ந்தனர் (லூக் 10:9). அவர்கள் ஆற்றிய பணி வெற்றி கொணர்ந்தது. எனவே அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். அந்த மகிழ்ச்சியோடு இயேசுவை அணுகி, அவரிடம் தாங்கள் புரிந்த சாதனைகள் பற்றி அவர்கள் பெருமை பாராட்டிக்கொண்டார்கள். ''உமது பெயரைச் சொன்னால் பேய்கள்கூட எங்களுக்கு அடிபணிகின்றன'' என்று அவர்கள் இயேசுவிடம் கூறினார்கள் (லூக் 10:17). மக்களுக்கு ஏற்படுகின்ற நோய்கள் பேய்களின் செயலே என மக்கள் நம்பிய காலம் அது. எனவே, சீடர்கள் மக்களின் நோய்களைப் போக்கியது பேய்களை முறியடித்ததற்குச் சமம். ஆகவேதான் அவர்கள் இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டி மக்களுக்கு நமலமளித்தார்கள். ஆனால் அவர்கள் பெருமை பாராட்ட ஒன்றுமில்லை என இயேசு அவர்களுக்குப் புரியவைக்கிறார். தீய ஆவிகள் சீடர்களுக்குக் கீழ்ப்படிந்தால் அது இயேசுவின் வல்லமையில் காரணமாகவே. அந்த வல்லமை விளங்குவதற்குச் சீடர்கள் கருவிகளாக மாறுகிறார்கள்.

இதை மறந்துவிட்டு, தங்கள் சொந்த சக்தியால் பேய்களைத் துரத்த முடியும் என சீடர்கள் நினைத்துவிடலாகாது என இயேசு அவர்களுக்குக் கற்பிக்கிறார். கடவுளின் செயல் அதிசயமான விதத்தில் சீடர்கள் வழியாகச் செயல்படுகிறது. தாங்கள் பெற்றுக்கொண்ட கொடையை நன்றியோடு அவர்கள் ஏற்கவேண்டும். அக்கொடையைப் பயன்படுத்திப் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும். கடவுள் அளிக்கும் கொடையை ஏற்றுச் செருக்குறாமல் தாழ்ச்சியோடு அதை ஏற்றிட வேண்டும். இவ்வாறு சீடர்கள் செயல்படும்போது உண்மையிலேயே கடவுளின் மகிழ்ச்சி அவர்கள் உள்ளத்தை நிரப்பும். தீய ஆவிகளை ஓட்டுவது பற்றி மகிழாமல் தங்கள் ''பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே அவர்கள் மகிழ வேண்டும்'' (காண்க: லூக் 10:20). அக்காலத்தில் நகரங்களில் வாழ்ந்த மக்களின் பெயர்களை ஒரு பட்டியலில் எழுதிவைப்பது வழக்கம். இயேசுவை நம்புவோர் விண்ணக நகரத்தின் மக்கள் என்பதால் அவர்களுடைய பெயர்களும் விண்ணகப் பட்டியலில் இடம்பெறும் என இயேசு கூறுகிறார். இயேசு நம்பி ஏற்கின்ற மக்கள் குழுவாகிய திருச்சபை இன்றைய உலகில் நிலவுகின்ற தீமைகளை முறியடித்திட உழைக்க வேண்டும். கடவுளின் அருளோடு அப்பணியை நாம் தொடர முடியும்; தொடரவும் வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் பணியை ஆற்றுவதில் மகிழ்ச்சியோடு செயல்பட எங்களுக்கு அருள்தாரும்.