யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 29வது வாரம் புதன்கிழமை
2013-10-23


முதல் வாசகம்

நீங்களோ உங்கள் உறுப்புகளைத் தீவினையின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புவிக்காதீர்கள்;
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 12-18

சகோதரர் சகோதரிகளே, உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம் சாவுக்குரிய உங்கள் உடலின்மீது ஆட்சி செலுத்த விடாதீர்கள். நீங்களோ உங்கள் உறுப்புகளைத் தீவினையின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புவிக்காதீர்கள்; மாறாக, இறந்தும் வாழ்வோராய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்; கடவுளுக்கு ஏற்புடையதைச் செய்வதற்குரிய கருவிகளாய் உங்கள் உறுப்புகளை அவரிடமே ஒப்படையுங்கள். பாவம் உங்கள்மீது ஆட்சி செலுத்தக் கூடாது; ஏனெனில் நீங்கள் இப்போது சட்டத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல; மாறாக, அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள். அதனால் என்ன? சட்டத்துக்கு உட்பட்டவர்களாய் இல்லாமல், அருளின் ஆட்சிக்கு உட்பட்டு இருப்பதால் நாம் பாவம் செய்யலாமா? ஒருபோதும் கூடாது. எதற்கு அடிமைகளாக உங்களை ஒப்புவித்துக் கீழ்ப்படிகிறீர்களோ அதற்கே நீங்கள் அடிமைகள் என்பது உங்களுக்குத் தெரியும் அன்றோ? அப்படியிருக்க, நீங்கள் பாவத்திற்கு உங்களையே அடிமையாக்கினால் சாவீர்கள்; நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவீர்கள். முன்பு பாவத்திற்கு அடிமைகளாய் இருந்த நீங்கள் பெற்றுக்கொண்ட போதனையில் அடங்கிய ஒழுக்க நெறியை உளமாரக் கடைப்பிடிக்கிறீர்கள். பாவத்தினின்று விடுதலை பெற்ற நீங்கள் கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கை நெறிக்கு அடிமைகளாய் இருக்கிறீர்கள். அதற்காகக் கடவுளுக்கு நன்றி.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் போற்றி! போற்றி! எதிரிகளின் பற்களுக்கு அவர் நம்மை இரையாக்கவில்லை.
திருப்பாடல்கள் 124: 1-3. 4-6. 7-8

1 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில் - இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக! 2 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது, 3 அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். -பல்லவி

4 அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெரு வெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்; 5 கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். 6 ஆண்டவர் போற்றி! போற்றி! எதிரிகளின் பற்களுக்கு அவர் நம்மை இரையாக்கவில்லை. -பல்லவி

7 வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம்; கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம். 8 ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 39-48

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.'' அப்பொழுது பேதுரு, ``ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?'' என்று கேட்டார். அதற்கு ஆண்டவர் கூறியது: ``தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந்தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும், ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான். ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல், அடிவாங்க வேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல், செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது''

கடவுளாட்சி பற்றிய நற்செய்தியை மக்களுக்கு எடுத்துரைத்த இயேசு அவர்களிடமிருந்து பொருத்தமான பதில்மொழி எதிர்பார்த்தார். தம்மையே நமக்கு அருள்கூர்ந்து வெளிப்படுத்துகின்ற கடவுளுக்கு நாம் என்ன பதில் தருவோம்? முதன்முதலில் நம் உள்ளத்தில் ஒரு மாற்றம் நிகழ வேண்டும். இதையே இயேசு ''மனம் திரும்புதல்'' எனக் கூறுகிறார் (மாற்கு 1:15). இந்த மன மாற்றத்திற்கு இரு பக்கங்கள் உண்டு. இவ்வுலக மாயைகளால் கவரப்பட்டு அலைமோதுகின்ற மனித உள்ளம் அந்த மாயைகளை விட்டுத் ''திரும்புவது'' முதல் படி. தொடர்ந்து நாம் கடவுளை நோக்கித் ''திரும்ப'' வேண்டும். இவ்வாறு திரும்பும்போது நம் உள்ளத்தில் வேரூயஅp;ன்றுகின்ற ஒரு நல்ல பண்புதான் ''விழித்திருத்தல்'' என்பதாகும். ''விழி'' என்றால் கண்; எனவே விழித்திருப்பது ''கண்துஞ்சாமல் காத்திருப்பது'' என்னும் பொருளைத் தரும். அதே நேரத்தில், விழித்திருப்பது நம் அகக் கண்களை அகலத் திறந்து, நம்முள்ளும் நம்மைச் சூழ்ந்தும் நிகழ்வனவற்றைச் சரியாக அறிந்து உணர்ந்துகொள்வதையும் உள்ளடக்கும். விழிப்பாயிருக்கும் மனிதர் தூக்கமயக்கத்தில் ஆழ்ந்துவிடாமல் ''எதிர்பார்ப்பு'' மனநிலையோடு வாழ்வார். அப்போது, அவரைத் தேடிவருகின்ற வீட்டுத் தலைவரான கடவுளை அவர் உடனடியாக எழுந்துசென்று வரவேற்று உபசரிப்பார்.

நாம் விழிப்பாயிருக்க வேண்டும் என இயேசு கேட்பது ஏதோ இவ்வுலகம் விரைவில் அழியப்போகின்றது, ஆகவே நாம் தயாராக இருக்கவேண்டும் என்னும் பொருளில் மட்டுமல்ல. நமது மண்ணக வாழ்வு எந்த நேரத்திலும் முடிவுக்கு வரலாம் என்பதால் நாம் ''விழித்திருக்க'' வேண்டும் என்னும் பொருளும் முழுமையான விளக்கம் அல்ல. மாறாக, நாம் விழிப்பாயிருக்கும்போது நம்மைத் தேடி ஒவ்வொரு நாளிலும் நொடியிலும் வருகின்ற கடவுளை நாம் அன்போடு ஏற்று, அவருடைய அன்பு வழிநடத்தலின்கீழ் பயணம் செல்வோம். எனவே, கடவுளின் உடனிருப்பு நம்மைவிட்டு ஒருபோதும் மறைவதில்லை என நாம் ஆழமாக உணரவேண்டும். நாம் வாழ்நாளின் ஒவ்வொரு நிகழ்விலும் கடவுளைக் கண்டுகொண்டு, அவரை முகமலர்ந்து வரவேற்றிட நாம் ஆயத்தமாய் இருக்க வேண்டும். ''ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்'' (மத்தேயு 24:44).

மன்றாட்டு:

இறைவா, உம் வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்க அருள்தாரும்.