யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 29வது வாரம் சனிக்கிழமை
2013-10-26


முதல் வாசகம்

உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 1-11

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது. ஏனெனில், கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு வாழ்வு தரும் தூய ஆவியின் சட்டம் பாவம், சாவு என்பவற்றுக்கு உள்ளாக்கும் சட்டத்தினின்று என்னை விடுவித்துவிட்டது. ஊனியல்பின் காரணமாய் வலுவற்றிருந்த திருச்சட்டம் செய்ய முடியாத ஒன்றைக் கடவுள் செய்தார். அதாவது, ஊனியல்பு கொண்ட மனிதரைப் போன்றவராய்த் தம் சொந்த மகனை அனுப்பி மனிதரிடமுள்ள பாவத்திற்கு முடிவு கட்டினார். ஊனியல்புக்கேற்ப நடவாமல், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப நடக்கும் நாம் திருச்சட்டத்தின் நெறிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவ்வாறு செய்தார். ஏனெனில், ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோரின் நாட்டமெல்லாம் அந்த இயல்புக்கு உரியவற்றின் மீதே இருக்கும்; ஆனால் ஆவிக்குரிய இயல்புக்கு ஏற்ப வாழ்வோரின் நாட்டம் ஆவிக்கு உரியவற்றின் மீதே இருக்கும். ஊனியல் மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே; ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும். ஏனெனில் ஊனியல் மனநிலை கடவுளுக்குப் பகையானது; அது கடவுளின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருப்பதில்லை, இருக்கவும் முடியாது. ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுள் முகத்தைத் தேடுவோரின் தலைமுறையினர் இவர்களே.
திருப்பாடல்கள் 24: 1-2. 3-4. 5-6

1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. -பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? 4 கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். -பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்'' அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9

அக்காலத்தில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, ``இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும் விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்'' என்றார். மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: ``ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், `பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்திமரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?' என்றார். தொழிலாளர் மறுமொழியாக, `ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்' என்று அவரிடம் கூறினார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''சிலர் இயேசுவிடம் வந்து, 'பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். இயேசு அவர்களிடம் மறுமொழியாக, 'இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரை விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா' என்று கேட்டார்'' (லூக்கா 13:1-2).

குற்றம் செய்வோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை ஒரு பொதுத் தத்துவமாகக் கொண்டிருப்போர் பலர். அதுபோலவே, பாவம் செய்தால் அதற்குத் தண்டனையைக் கடவுள் கொடுப்பார் என்பது கடவுள் நம்பிக்கை கொண்டோர் பலரின் கருத்து. நில நடுக்கம், சூறாவளிக் காற்று, நிலச் சரிவு, சுனாமி போன்ற இயற்கை நிகழ்வுகளால் பாதிக்கப்படுகின்ற மக்கள் பாவம் செய்ததால் தண்டிக்கப்படுகிறார்களா? சிலர் அப்படித்தான் நினைக்கிறார்கள். இயேசு வாழ்ந்த காலத்திலும் இத்தகைய நம்பிக்கை இருந்தது. பிறவியிலேயே பார்வை இழந்து பிறந்த ஒருவருக்கு இயேசு மீண்டும் பார்வை வழங்கியபோது அவரிடமும் இக்கேள்விதான் கேட்கப்பட்டது. ''ரபி, அவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?'' என்று கேட்டவர்களுக்கு இயேசு அம்மனிதர் பார்வையற்றவராகப் பிறக்க யார் பாவமும் காரணமாக இருக்கவில்லை என்ற பதிலளித்தார் (காண்க: யோவா 9:1-3). அதே கருத்தை விளக்குகின்ற இன்னொரு நிகழ்ச்சியை லூக்கா பதிவு செய்துள்ளார். பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்னும் செய்தியைக் கேட்ட இயேசு, அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் மற்ற கலிலேயரை விடப் பாவிகள் எனக் கூறுவது சரியல்ல என்று கற்பிக்கிறார் (காண்க: லூக் 13:1-2). பிலாத்து கலிலேயரைக் கொன்ற நிகழ்ச்சி வேறு எந்த வரலாற்று ஆதாரத்திலும் காணப்படவில்லை. என்றாலும் அவன் உண்மையிலேயே கொடியவன் என்பதற்கு வேறு பல நிகழ்ச்சிகள் ஆதாரமாக உள்ளன.

பிறருக்குத் துன்பங்கள் ஏற்படும்போது அவர்கள் பாவம் செய்ததால்தான் அவ்வாறு துன்புறுகின்றனர் என நாம் முடிவு செய்வது சரியல்ல என்பது இயேசுவின் போதனை. இதனால் பாவத்தின் விளைவாக யாதொரு துன்பமும் ஏற்படாது என நாம் முடிவுசெய்துவிடலாகாது. சில வேளைகளில் நாம் செய்கின்ற தவறான செயல்களின் விளைவாக நமக்கோ பிறருக்கோ துன்பம் ஏற்படுவது இயல்பு. எனவே தவறான நடத்தையை நாம் விலக்க வேண்டும் என்னும் முடிவுக்கு நாம் வந்தால் அது சரியானதே. ஆனால் பிறருக்கு ஏற்படும் துன்பங்கள் அவர்கள் பாவம் செய்ததின் விளைவே என நாம் முடிவுசெய்வதோ, அந்த முடிவின் அடிப்படையில் அவர்களை இழிவாக நோக்குவதே கிறிஸ்தவ மனப்பான்மைக்கு எதிரான ஒன்று. துன்பம் ஏன் வருகிறது என்பதற்கு நம்மால் முழுமையான பதில் காண்பது இயலாது. ஆனால் குற்றமற்றவராக இருந்த இயேசுவே நமக்காத் துன்பங்களை ஏற்றார் என்பது நமக்கு ஆறுதலாக அமைய வேண்டும். இயேசுவைப் போல நாமும் துன்பங்கள் வழியாக நன்மை நிகழ வழியாக மாறிட வேண்டும். பிறருடைய துன்பங்களைக் கண்டு அவர்களுக்கு ஆறுதலளிப்பதற்கு மாறாக, அவர்கள் மேல் குற்றம் சாட்டுகின்ற மனப்பான்மை நம்மிலிருந்து மறைய வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்புப் பெருக்கு எங்களைக் காக்கிறது என நாங்கள் உணர்ந்திட அருள்தாரும்.