யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 32வது வாரம் வெள்ளிக்கிழமை
2013-11-15


முதல் வாசகம்

கடவுளை அறியாத மனிதர் அனைவரும் இயல்பிலேயே அறிவிலிகள் ஆனார்கள்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 13: 1-9

கடவுளை அறியாத மனிதர் அனைவரும் இயல்பிலேயே அறிவிலிகள் ஆனார்கள். கண்ணுக்குப் புலப்படும் நல்லவற்றினின்று இருப்பவரைக் கண்டறிய முடியாதோர் ஆனார்கள். கைவினைகளைக் கருத்தாய் நோக்கியிருந்தும் கைவினைஞரை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மாறாக, தீயோ, காற்றோ, சூறாவளியோ, விண்மீன்களின் சுழற்சியோ, அலைமோதும் வெள்ளமோ, வானத்தின் சுடர்களோதாம் உலகை ஆளுகின்ற தெய்வங்கள் என்று அவர்கள் கருதினார்கள். அவற்றின் அழகில் மயங்கி அவற்றை அவர்கள் தெய்வங்களாகக் கொண்டார்கள் என்றால், அவற்றிற்கெல்லாம் ஆண்டவர் அவற்றினும் எத்துணை மேலானவர் என அறிந்துகொள்ளட்டும்; ஏனெனில் அழகின் தலையூற்றாகிய கடவுளே அவற்றை உண்டாக்கினார். அவற்றின் ஆற்றலையும் செயல்பாட்டையும் கண்டு அவர்கள் வியந்தார்கள் என்றால், அவற்றையெல்லாம் உருவாக்கியவர் அவற்றை விட எத்துணை வலிமையுள்ளவர் என்பதை அவற்றிலிருந்து அறிந்து கொள்ளட்டும். ஏனெனில் படைப்புகளின் பெருமையினின்றும் அழகினின்றும் அவற்றைப் படைத்தவரை ஒப்புநோக்கிக் கண்டுணரலாம். இருப்பினும், இம்மனிதர்கள் சிறிதளவே குற்றச்சாட்டுக்கு உரியவர்கள். ஏனெனில் கடவுளைத் தேடும்போதும் அவரைக் கண்டடைய விரும்பும்போதும் ஒருவேளை அவர்கள் தவறக்கூடும். அவருடைய வேலைப்பாடுகளின் நடுவே வாழும்பொழுது கடவுளை அவர்கள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். தாங்கள் காண்பதையே நம்பிவிடுகின்றார்கள்; ஏனெனில் அவை அழகாக உள்ளன. இருப்பினும், அவர்களுக்கும் மன்னிப்பே கிடையாது! உலகை ஆராய்ந்தறியும் அளவுக்கு ஆற்றல் அவர்களுக்கு இருந்தபோதிலும், இவற்றுக்கெல்லாம் ஆண்டவரை இன்னும் மிக விரைவில் அறியத் தவறியது ஏன்?

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்தும்.
திருப்பாடல்கள் 19: 1-2. 3-4

1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. -பல்லவி

3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நோவாவின் காலத்தில் நடந்தது போலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 26-37

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: நோவாவின் காலத்தில் நடந்தது போலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும். நோவா பேழைக்குள் சென்ற நாள் வரை எல்லாரும் திருமணம் செய்துகொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது. அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள், குடித்தார்கள் வாங்கினார்கள், விற்றார்கள் நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன. மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். அந்நாளில் வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம். லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள். தம் உயிரைக் காக்க வழி தேடுவோர் அதை இழந்துவிடுவர் தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர். நான் உங்களுக்குச் சொல்கிறேன் அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார் மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார் மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார் மற்றவர் விட்டுவிடப்படுவார். அவர்கள் இயேசுவைப் பார்த்து, ஆண்டவரே, இது எங்கே நிகழும்? என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும் வந்து கூடும் என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைத் காத்துக்கொள்வர்'' (லூக்கா 17:33)

இயேசு தாம் அறிவித்த இறையாட்சியின் பொருட்டு சீடர்கள் தம் உயிரையும் இழக்கத் தயங்கலாகாது என்று போதித்தார். ஒன்றை நாம் அடைய விரும்பும்போது இன்னொன்றை இழக்க நேரிடுகிறது. வளரும் பருவத்தில் ஒரு சிறுகுழந்தை தன் குழந்தைப் பருவத்தைத் தாண்டிச் செல்ல தயாராக இல்லாமல் இருக்கலாம். ஆனால், முழு மனிதராக வளர வேண்டும் என்றால் குழந்தைப் பருவ நிலையிலேயே தேங்கிப் போய்விடலாகாது. அடுத்த பருவ வளர்ச்சியும் அப்படியே. இளமைப் பருவத்தைத் தாண்டி முதிர் பருவத்தை அடைய வேண்டும் என்றால் முன்னைய பருவத்தை இழக்க வேண்டும். ஆக, புதிய ஒரு நிலையை அடைய அரும்புவோர் பழைய நிலையைத் தாண்டிச் செல்ல வேண்டும். இது இயற்கை நியதி.

மனிதர் தம் உயிரின்மீது பற்றுக் கொண்டிருப்பது தவறு அல்ல. கடவுள் படைத்த படைப்புகள் அனைத்துமே கடவுள் தங்களுக்கு அளித்துள்ள கொடைகளுக்காகக் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும். மனித உயிர் என்பது கடவுள் நமக்கு வழங்குகின்ற அடிப்படையான கொடை. உயிர் இருந்தால்தான் இவ்வுலகில் நாம் நம்மைக் கவனித்துப் பேணி, நலமான வாழ்வு வாழ இயலும். ஆகவே தம் உயிரை எப்படியாவது காக்க வேண்டும் என்னும் விருப்பம் எல்லா மனிதருக்கும் உண்டு.உலக சமயங்களும் இவ்வாறே மனித வாழ்க்கையின் நிலையாத் தன்மை பற்றிச் சிந்தித்துள்ளன. நம் உயிர் நமக்குக் கடவுள் தந்த ஒப்புயர்வற்ற, அடிப்படையான கொடை. ஆனால் ஒரு நாள் நம் உயிர் நம்மைவிட்டுப் பிரிந்துபோகும். இது மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஒன்று. இருந்தாலும், பிறப்பு ஒரு மறைபொருள் என்றால் இறப்பு அதைவிடவும் புரியாத புதிராகவே உள்ளது. ஆனால் இயேசு நம் உயிரின் உண்மையான மதிப்பை நமக்கு உணர்த்துகிறார். உலக வாழ்க்கை மனிதருக்கு அறுதியான வாழ்க்கையல்ல, மாறாக, இவ்வுலக வாழ்க்கையைத் தாண்டி நிலைகொள்கின்ற அழியா வாழ்வு ஒன்று உள்ளது. இவ்வுண்மையை நாம் உணர்ந்தால் மனித உயிரை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்கிற கவலை நம்மை ஆட்டிப்படைக்க இயலாது. மாறாக, நாம் கொடையாகப் பெற்றுக்கொண்ட உயிர் என்னும் கருவூலத்தைக் கடவுளுக்கே காணிக்கையாக்கிட நாம் அழைக்கப்படுகிறோம். இக்காணிக்கையின் பொருள் என்ன? சிலர் தம் வாழ்க்கையால் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வர்; வேறு சிலர் தம் சாவால் கிறிஸ்துவை அறிவிப்பார்கள். எவ்வாறு சான்றுபகர்ந்தாலும் சரி, நம் வாழ்க்கையின் முதன்மைகள் முறையாக இருக்கவேண்டும். கடவுளுக்கு முதலிடம் அளித்தால் நம் உயிர் கடவுளிடமிருந்து வந்து, கடவுளில் நிலைகொண்டு, கடவுளை நோக்கியே சென்றிட படைக்கப்பட்டது என நாம் உணர்ந்துகொள்வோம். அப்போது கடவுளுக்காக நம் உயிரை இழப்பது அதை மீண்டும் கண்டுபிடிப்பதற்குச் சமமாகும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்கு நீர் அளிக்கின்ற கொடைகளை நன்றியோடு ஏற்று வாழ்ந்திட அருள்தாரும்.