திருவழிப்பாட்டு ஆண்டு C (17-11-2013)

கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். 
கவின் மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் 
அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக்கொண்டிருந்தனர்/> கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். 
கவின் மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் 
அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக்கொண்டிருந்தனர்/> கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். 
கவின் மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் 
அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக்கொண்டிருந்தனர்/>


திருப்பலி முன்னுரை

ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் வாரத்தில் இறை வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் இறைமக்கள் அனைவருக்கும் என் எளிமையான வாழ்த்தைப் பகிர்ந்துகொள்கிறேன். வழிபாட்டு ஆண்டின் இறுதி நாட்களை நெறுங்கிக் கொண்டிருக்கிறோம். மீட்பும், விடுதலையும் தரும் இயேசுவின் பிரசன்னத்தில் விசுவாசத்தோடும், வேண்டுதல்களோடும் ஒன்று கூடியுள்ளோம். நம் மீட்பராக மண்ணகம் வந்து நம்மை மீட்கும் பணியை முழுமையாக்கிச் சென்றவர் மீண்டும் வருவேன் என்றதை இந்த நாளில் திருச்சபை நினைவுகூர்கின்றது. அவர் வர இருக்கிறார். எனவே அணியமாகிக்கொள்க எனும் அழைப்பும் நினைவூட்டலும் இன்று நமக்கு விடுக்கப்படுகிறது. இன்றைய நற்செய்தியில், இயேசு, "ஒரு நாள் வரும், அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்" என்று கூறி இவ்வுலகில் உள்ளதெல்லாம் தற்காலிகமானது தான். நமக்குஅறிவுறுத்துகிறார்.

ஆண்டவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார் என்றும்: அவர் பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார் என்றும்: மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார் என்றும் இன்றைய இறைவார்த்தைகள் வழியாக நமக்குக் கூறப்படுவதோடு, நம்மைத் தலைநிமிர்ந்து நிற்கும்படியும் ஏனெனில் நமது மீட்பு நெருங்கி வருகின்றது என்னும் எச்சரிக்கையும் விடுக்கப்படுகின்றது. நாம் வாழ்வு பெற ஆண்டவர் நமக்கு வழங்கும் இந்த நல்ல செய்திக்காகவும், தீமையிலிருந்து நம்மைக் காக்க கொண்டிருக்கும் கரிசனைக்காகவும் இவ்வேளையில் அவருக்கு நன்றி சொல்லுவோம். ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுவோம். ஆண்டவரைப் புகழ்தேத்துவோம், அவரை வாழ்த்திப் பாடுவோம். இறையருள் கேட்டுத் தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான்
இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 4: 1-2

``இதோ! சூளையைப் போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்; வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது; முற்றிலும் சுட்டெரித்துவிடும்'' என்கிறார் படைகளின் ஆண்டவர். ``ஆனால் என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: மக்களினங்களை ஆண்டவர் நேர்மையுடன் ஆட்சி செய்வார்.
திருப்பாடல்கள் 98: 5-6. 7-8. 9

5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். 6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். -பல்லவி

7 கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! 8 ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். -பல்லவி

9 ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். -பல்லவி

இரண்டாம் வாசகம்

உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம்.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-12

சகோதரர் சகோதரிகளே, எங்களைப் போல் ஒழுகுவது எப்படி என்பது உங்களுக்கே தெரியும். ஏனெனில், உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித் திரியவில்லை. எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம். எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல, மாறாக, நீங்களும் எங்களைப் போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டவே இவ்வாறு செய்தோம். `உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது' என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம். உங்களுள் சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம். இத்தகையோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்'அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-19

அக்காலத்தில் கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக்கொண்டிருந்தனர். இயேசு, ``இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்'' என்றார். அவர்கள் இயேசுவிடம், ``போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், ``நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, `நானே அவர்' என்றும், `காலம் நெருங்கி வந்துவிட்டது' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது'' என்றார். மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: ``நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும். இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்: சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது. ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

கைம்மாறு அளிப்பவரே இறைவா,

உமது பணிக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ள எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது முன் தாழ்ச்சி உள்ளவர்களாக வாழ்ந்து, மக்களுக்கு பெருந்தன்மையுடன் தொண்டாற்றும் வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

நிறைவாழ்வு தரும் ஊற்றான இயேசுவே,

உம்மைப் போற்றுகிறேன். வியத்தகு செயல்களை வான்வெளியிலும், இயற்கையிலும் காணும நான், உம்மை வியப்புக்குரியவர் எனப்போற்றுகிறேன். அருங்குறிகளைத் தேடி ஓடாமல், ஏமாறாதபடி விழிப்பாயிருக்கும் அருளை எனக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!

எமது விசுவாச வாழ்விற்கெதிராக பல சக்திகள் எம்மைக் குழப்பும் இந்நாட்களில், நாங்கள் ஏமாறாதவாறு எங்கள் விசவாச வாழ்வைக் காத்துக் கொள்ளவும், போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதிருக்கவும்: மன உறுதியோடு இருந்து எங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளவும். வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

எமது இளைஞர்கள் அனைவரும் உமது அன்பையும், கரிசனையையும் ஆழமாக உணர்ந்து, உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“நீர் இன்றே என்னோடு பேரின்ப வான் வீட்டில் இருப்பீர்” அன்பு தந்தையே!

இதோ இந்த தருணத்தில் இறந்துபோன ஒவ்வொரு ஆன்மாவிற்காகவும் அதிலும் குறிப்பாக யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக உம்மிடம் வேண்டுகிறோம். இவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்து உம் வான்வீட்டில் உம்மை முகமுகமாக தரிசிக்கும் வரத்தை பொழிந்தருள இறைவா உம்மை பார்த்து மன்றாடுகிறோம்.

ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுளே இறைவா!

உம் மக்களாகிய நாம் அனைவரும் விசுவாச வாழ்வில் உறுதியாகவும், பிரமாணிக்கமாகவும் இருந்து செயற்படவும், இறைவார்த்தையின் ஒளியில் நிறை வாழ்வை நோக்கிப் பயணிக்கவும் வேண்டிய சக்தியையும், அருளையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

“ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் என் மகன் குணமடைவான்” தாயும் தந்தையுமானவரே!

உம் சந்நிதானத்தில் உம் பிள்ளைகளாகிய நாங்கள் பல்வேறு தேவைகள் நிறைவேற வேண்டி நிற்கிறோம் ஆண்டவரே. நாங்கள் எப்போதும் உம் அளவற்ற அன்பை சுவைக்கவும் அதனை பிறருக்கு அளிக்கவும் வேண்டிய தராள மனதை தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.




இன்றைய சிந்தனை

''நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்'' (லூக்கா 21:8)

எருசலேம் கோவில் அழகுமிக்க ஒரு கட்டடம். புகழ்பெற்ற மன்னர் சாலமோன் கட்டிய கோவில் அழிந்துபட்ட பிறகு புதிய கோவில் கட்டப்பட்டது. அதை மீண்டும் விரிவுபடுத்தி, கலையுணர்வோடு மாற்றியமைத்த பெருமை பெரிய ஏரோதுவைச் சாரும். இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட கோவில்தான் இயேசுவின் காலத்தில் வானளாவ எழுந்து நின்ற எழில்மிகு கட்டடம். இயேசுவின் சீடர்கள் கோவிலின் அழகுபற்றி விமர்சிக்கிறார்கள். அப்போது இயேசு எருசலேமும் அதன் மையமாகிய கோவிலும் ஒருநாள் அழிந்துபோகும் என முன்னறிவிக்கிறார். உண்மையிலேயே கி.பி. 70ஆம் ஆண்டு உரோமைப் படை எருசலேமை அழித்தது. அந்நிகழ்ச்சிக்குப் பின்னரே நற்செய்தி நூல்கள் தொகுக்கப்பட்டு இன்றைய வடிவம் பெற்றன. எனவே, இயேசு எருசலேமின் அழிவுபற்றி உரைத்த கூற்றுக்களோடு உலக முடிவு பற்றிய கூற்றும் இணைந்த விதத்தில் இன்று நற்செய்தி உள்ளது. இறுதிக்காலத்தில் பலர் மக்களைத் திசைதிருப்பப் பார்ப்பார்கள் என்றும் அப்போது நாம் ''ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்'' (காண்க: லூக் 21:8) என்றும் இயேசு கூறுகின்ற சொற்கள் பொருள்செறிவுள்ளன.

மனிதர் எளிதில் ஏமாந்துபோவதுண்டு. ஏமாற்றுபவர்கள் இருக்கும்வரை ஏமாறுபவர்களும் ஏமாற்றங்களும் இருக்கும். ஆனால் இயேசு தருகின்ற எச்சரிக்கையில் ஓர் ஆழ்ந்த பொருள் உள்ளது. கடவுளைப் பற்றியும் கடவுளின் பண்புகள் பற்றியும் நமக்குத் தெரியும் என நாம் நினைத்து, கவலையற்றிருந்தால் நாம் ஏமாந்துவிட்டோம் என்றுதான் பொருள். அதுபோலவே, கடவுள் பற்றிய எல்லாம் எனக்குத் தெரியும்; எனவே நான் கூறுவதைக் கேட்டு நான் கேட்டதைச் செய்யுங்கள் என்று பிறரிடம் கோருவதும் ஏமாற்றத்திற்கு வழியே. நம் உள்ளத்தைக் கடவுளிடமிருந்து திருப்பி, நம் மனம் போன போக்கில் செல்வதற்கு நமக்கு சோhதனைகள் எழுவதுண்டு. அத்தகைய ஏமாற்றத்திற்கு ஆளாகாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏமாற்றங்கள் ஏற்படுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் நம் எதிர்பார்ப்புக்கள் முறையின்றி அமைவதும், நம் சொந்த சக்தியால் எதையும் சாதித்துவிடலாம் என்று நாம் நினைத்துச் செயல்படுவதுமே. இந்த மனநிலை மாற வேண்டும். இயேசுவின் வருகை நிகழப்போகின்ற நேரத்தைத் துல்லியமாக அறிந்துகொள்ள நம்மால் இயலாது. இயேசுவும் தம் வருகை பற்றிய காலத்தையும் நேரத்தையும் பற்றிப் பேச மறுத்துவிட்டார். அவருடைய வருகையை ஆவலோடு எதிர்பார்ப்போருக்கு ஏமாற்றம் இராது. நாம் விழிப்போடு செயல்பட வேண்டும் என்பதே இயேசுவின் கோரிக்கை.

மன்றாட்டு:

இறைவா, உம் வார்த்தையை முழுமையாக நம்பிட எங்களுக்கு அருள்தாரும்.