யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 1வது வாரம் வெள்ளிக்கிழமை
2013-12-06

புனித நீக்கலெஸ்


முதல் வாசகம்

ஆண்டவருக்குரிய நாளில், பார்வையற்றோரின் கண்கள் பார்வை பெறும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 29: 17-24

இறைவனாகிய ஆண்டவர் கூறுவது: இன்னும் சிறிது காலத்தில் லெபனோன் வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ? வளம்மிகு நிலம் காடாக ஆகிவிடுமன்றோ? அந்நாளில் காது கேளாதோர் ஏட்டுச் சுருளின் வார்த்தைகளைக் கேட்பர்; பார்வையற்றோரின் கண்கள் காரிருளில் இருந்தும் மையிருளில் இருந்தும் விடுதலையாகிப் பார்வை பெறும். ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்; மானிடரில் வறியவர் இஸ்ரயேலின் தூயவரில் அகமகிழ்வர். கொடியோர் இல்லாதொழிவர்; இகழ்வோர் இல்லாமற் போவர்; தீமையில் நாட்டம் கொள்வோர் அழிந்து போவர். அவர்கள் ஒருவர்மேல் பொய்க் குற்றம் சாட்டி, நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை இடறச் செய்கின்றனர்; பொய் புனைந்து நேர்மையாளரின் வழக்கைப் புரட்டுகின்றனர். ஆதலால் ஆபிரகாமை மீட்ட ஆண்டவர் யாக்கோபு வீட்டாரைப்பற்றிக் கூறுவது: இனி யாக்கோபு மானக்கேடு அடைவதில்லை; அவன் முகம் இனி வெளிறிப் போவதுமில்லை. அவன் பிள்ளைகள் என் பெயரைத் தூயதெனப் போற்றுவர்; நான் செய்யவிருக்கும் என் கைவேலைப் பாடுகளைக் காணும்போது யாக்கோபின் தூயவரைத் தூயவராகப் போற்றுவர்; இஸ்ரயேலின் கடவுள்முன் அஞ்சி நிற்பர். தவறிழைக்கும் சிந்தைகொண்டோர் உணர்வடைவர்; முறுமுறுப்போர் அறிவுரையை ஏற்றுக்கொள்வர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
திருப்பாடல்27: 1. 4. 13-14

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி

4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித்தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காணவேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசுவை நம்பி, பார்வையற்ற இருவர் பார்வை பெறுகின்றனர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 27-31

அக்காலத்தில் இயேசு தம் சொந்த ஊரை விட்டு வெளியே சென்றபோது பார்வையற்றோர் இருவர், �தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்'' என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, �நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், �ஆம், ஐயா'' என்றார்கள். பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, �நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்'' என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி, �யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார். ஆனால் அவர்கள் வெளியே போய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

நம்பியபடி நிகழட்டும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே, இயேசு செய்த அருங்குறிகள் பலவற்றுக்கும் அடிப்படை நலம் பெற்றவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை. பல நேரங்களில் நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும் என்று சொல்கிறார் இயேசு. எனவே, யாரிடம் நம்பிக்கை இருக்கிறதோ, அவர்களிடையே மட்டுமே அவர் அற்புதங்கள் செய்தார். அதுமட்டுமல்ல, மாற்கு நற்செய்தியிலே நம்பிக்கை பற்றிய செய்தி ஒன்று அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இயேசுவின் சொந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்தபோது, அவர்கள் அவரை மெசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை, அவர்மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு இயேசு வியப்புற்றார். அது மட்டுமல்ல, அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை (மாற் 6:5) என்னும் விசித்திரமான, கொஞ்சம் துணிச்சலான செய்தியைப் பார்க்கிறோம். எனவே, நம்பிக்கை இருக்கிறர்களுக்கு மட்டுமே வியப்புக்குரிய செயல்களை இறைவன் செய்கிறார். எனவே, நாமும் நமது நம்பிக்கையை வளர்த்துக்கொள்வோம். இறை நம்பி;க்கையை மட்டுமல்ல, நமது தன்னம்பி;க்கையையும்கூட. நம்மீது, நமது ஆற்றல்கள்மீது நமக்கு நம்பிக்கை இருந்தால், நாம் நம்பியபடி நமக்கு நிகழும்.

மன்றாட்டு:

நம்பிக்கையின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்களிடமுள்ள நம்பிக்கைக் குறைவை மன்னித்து, எங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்த உம்மை இறைஞ்சுகிறோம். உம்மால் அனைத்தும் முடியும் என்று நம்பி, உம்மை நோக்கி மன்றாட அருள்தாரும். எங்கள் தன்னம்பிக்கைக் குறைவைப் போக்கி, எங்களை வலிமைப்படுத்தியருளும். ஆமென்.