யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 3வது வாரம் திங்கட்கிழமை
2013-12-16


முதல் வாசகம்

யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்.
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 24: 2-7,15-17

அந்நாள்களில் பிலயாம் ஏறிட்டுப் பார்க்கவே, குலம் குலமாகப் பாளையம் இறங்கிய இஸ்ரயேலைக் கண்டார். அப்போது கடவுளின் ஆவி அவர்மேல் இறங்கியது. அவர் திருஉரையாகக் கூறியது: �பெகோர் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி! கடவுளின் வார்த்தைகளைக் கேட்கிறவனின், பேராற்றல் வாய்ந்தவரின் காட்சியைக் கண்டு கீழே விழுந்தும் கண் மூடாதவனின் திருமொழி! யாக்கோபே! உன் கூடாரங்களும், இஸ்ரயேலே! உன் இருப்பிடங்களும் எத்துணை அழகு வாய்ந்தவை! அவை விரிந்து கிடக்கும் பள்ளத்தாக்குகள் போன்றவை; ஆண்டவர் நட்ட அகில் மரங்கள் போன்றவை; நீர் அருகிலுள்ள கேதுரு மரங்கள் போன்றவை. அவனுடைய நீர்க்கால்களிலிருந்து தண்ணீர் ஓடும்; அவனது விதை நீர்த்திரளின்மேல் இருக்கும்; அவனுடைய அரசன் ஆகாகைவிடப் பெரியவன்; அவனது அரசு உயர்த்தப்படும்.'' பிலயாம் திருஉரையாகக் கூறியது: �பெகோரின் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி! கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதர் அளித்த அறிவைப் பெற்று பேராற்றல் உடையவரின் காட்சி கண்டு கீழே வீழ்ந்தும் கண் மூடப்படாதவனின் திருமொழி! நான் அவரைக் காண்பேன்; ஆனால் இப்போதன்று; நான் அவரைப் பார்ப்பேன்; ஆனால் அண்மையிலன்று; யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்! இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்!''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
திருப்பாடல் 25: 4-5. 6,7. 8-9

4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; 5யb உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். பல்லவி

6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. 7bஉ உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 23-27

அக்காலத்தில் இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, �எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?'' என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, �நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன். யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா?'' என்று அவர் கேட்டார். அவர்கள், � `விண்ணகத்திலிருந்து வந்தது' என்போமானால், `பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை' எனக் கேட்பார். `மனிதரிடமிருந்து' என்போமானால், மக்கள் கூட்டத்தினருக்கு அஞ்சவேண்டியிருக்கிறது. ஏனெனில் அனைவரும் யோவானை இறைவாக்கினராகக் கருதுகின்றனர்'' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். எனவே அவர்கள் இயேசுவிடம், �எங்களுக்குத் தெரியாது'' என்று பதிலுரைத்தார்கள். அவரும் அவர்களிடம், �எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா?' என்று இயேசு கேட்டார்...அவர்கள் இயேசுவிடம் 'எங்களுக்குத் தெரியாது' என்று பதிலுரைத்தார்கள்'' (மத்தேயு 21:25,27)

திருமுழுக்கு யோவானைப் பற்றி இயேசு பல முறை குறிப்பிட்டார். அவர் ஒரு தலைசிறந்த மனிதர் என இயேசு சுட்டிக்காட்டினார். கடவுளின் பெயரால் மக்களுக்குச் செய்தி அறிவித்த யோவானை மக்கள் ஏற்கவில்லை. குறிப்பாக, யூத சமயத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்றிருந்தோர் யோவானைப் புறக்கணித்தனர். யோவானைப் போலவே இயேசுவும் கடவுளாட்சி பற்றிப் பேசினார். மக்கள் மனம் மாற வேண்டும் என அழைப்பு விடுத்தார். அதுவும் யூத சமயத் தலைமைக் குருக்களுக்கும் மக்களின் மூப்பர்களுக்கும் எரிச்சலை மூட்டியது (காண்க: மத் 21:23). குறிப்பாக, யூதர்களின் மைய இடமாகிய எருசலேம் கோவிலுக்குச் சென்ற இயேசு அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களை விரட்டியடித்ததும், கோவிலில் போதித்துக் கொண்டிருந்ததும் யூத தலைவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. அவர்கள் திருமுழுக்கு யோவான் பற்றி என்ன நினைத்தார்கள் என இயேசு கேட்டார். அவர்களோ ''எங்களுக்குத் தெரியாது'' என்று பதில் கூறித் தப்பிவிடலாம் என நினைக்கிறார்கள். இது உண்மையான அறியாமையா?

அறியாமை என்பது இருவகைப்படும். ஒன்று குற்றமற்ற அறியாமை மற்றது குற்றமுள்ள அறியாமை. குற்றமற்ற அறியாமை என்பது நாம் ஒரு பொருள் பற்றித் தெரிந்திராத தகவல் சாதாரணமாக நம்மால் தெரிந்துகொள்ள முடியாததாக இருப்பதால் எழுகிறது. ஆனால் குற்றமுள்ள அறியாமை என்பது நாம் வேண்டுமென்றே ஒரு பொருள்பற்றி அறிய முன்வராமலிருப்பதைக் குறிக்கும். இந்த இரண்டாம் வகை அறியாமையைத்தான் நாம் தலைமைக் குருக்களிடமும் மக்களின் மூப்பர்களிடமும் காண்கிறோம். அவர்கள் திறந்த மனத்தோடு கடவுளின் செய்திக்குச் செவிகொடுத்திருந்தால் யோவான் யாரென்று அறிந்திருப்பார்கள்; இயேசு யார் என்றும் அடையாளம் கண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் உள்ளம் திறந்திருக்கவில்லை. அவர்களது இதயம் ஒருவிதத்தில் மழுங்கிப்போய் இருந்தது. இயேசுவையும் அவருடைய போதனையையும் நாம் அறிய வேண்டும் என்றால் நம் உள்ளத்தில் நேர்மை வேண்டும். நம் இதயத்தில் அன்பு வேண்டும். குற்றம் காண்கின்ற மனப்பான்மையோடு மட்டுமே நாம் வாழ்ந்தால் கடவுளின் குரல் நம் உள்ளத்தில் எதிரொலிப்பதைக் கேட்க நாம் தவறிவிடுவோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்கு உண்மையான அறிவைத் தந்தருளும்.