யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 3வது வாரம் செவ்வாய்க்கிழமை
2013-12-17


முதல் வாசகம்

யூதாவை விட்டுச் செங்கோல் நீங்காது.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 49: 1-2, 8-10

யாக்கோபு தம் புதல்வர்களை வரவழைத்துக் கூறியது: என்னைச் சுற்றி நில்லுங்கள். வரவிருக்கும் நாள்களில் உங்களுக்கு நிகழ இருப்பதை நான் அறிவிக்கப்போகிறேன். கூடிவந்து உற்றுக்கேளுங்கள்; யாக்கோபின் புதல்வர்களே! உங்கள் தந்தையாகிய இஸ்ரயேலுக்குச் செவிகொடுங்கள். யூதா! உன் உடன்பிறந்தோர் உன்னைப் புகழ்வர். உன் கை உன் எதிரிகளின் கழுத்தில் இருக்கும். உன் தந்தையின் புதல்வர் உன்னை வணங்குவர். யூதா! நீ ஒரு சிங்கக்குட்டி, என் மகனே, இரை கவர்ந்து வந்துள்ளாய்! ஆண் சிங்கமென, பெண் சிங்கமென அவன் கால் மடக்கிப் படுப்பான்; அவன் துயில் கலைக்கத் துணிந்தவன் எவன்? அரசுரிமை உடையவர் வரும்வரையில், மக்களினங்கள் அவருக்குப் பணிந்திடும் வரையில், யூதாவைவிட்டுச் செங்கோல் நீங்காது; அவன் மரபைவிட்டுக் கொற்றம் மறையாது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருடைய சமாதானம் என்றென்றும் நிலவுவதாக.
திருப்பாடல் 72: 1-2. 3-4. 7-8. 17

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி

3 மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்; குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும். 4யb எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக. பல்லவி

7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி

17 அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர் மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணை. � அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-17

தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன். சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது அரசர். தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா. உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா. எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள். பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு. ஆக மொத்தம் ஆபிரகாம் முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்'' (மத்தேயு 1:1)

எபிரேய மக்கள் தங்கள் மூதாதையர் பட்டியலைத் தயாரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். பொதுவாகவே மனிதர் தங்கள் குடும்ப வரலாற்றைப் பற்றி அறிவதில் அக்கறை காட்டுவார்கள். ஆனால் அந்த வரலாறு பல முறையும் எழுத்தில் அமைந்த பதிவுகளாக இருப்பதில்லை. மாறாக, வாய்மொழி வழியாகத் தலைமுறை தலைமுறையாக அந்த வரலாறு பாதுகாக்கப்படும். இஸ்ரயேல் மக்களிடையேயும் இந்த வழக்கம் நிலவியது. தங்கள் மூதாதையர் யார் என்பது பற்றி அவர்கள் பதிவு செய்த குறிப்புகள் பல நூற்றாண்டுகளாக வாய்மொழி வடிவில் இருந்து பின்னர் எழுத்து வடிவம் பெற்றன. மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின் வரலாற்றை எழுதப் புகுந்த போது இயேசு தாவீதின் வழி வந்தவர் என்றும், ஆபிரகாமின் வழி வந்தவர் என்றும் முதல் வரியிலேயே குறிப்பிடுகிறார். ஏன் தாவீது, ஏன் ஆபிரகாம் என்னும் கேள்வி எழுகிறது. தாவீது என்பவர் இஸ்ரயேல் என்னும் வட நாட்டையும் யூதா என்னும் தென் நாட்டையும் ஒன்றிணைத்து ஒரு பெரிய அரசாக மாற்றி ஆட்சி செய்தவர். அவருடைய பெருமை விவிலியத்தில் பல இடங்களில் போற்றப்படுகிறது. ஆனால் தாவீது குற்றம் குறைகள் நிறைந்த மனிதரே. அவருடைய ஆட்சியில் விளங்கிய சிறப்பைவிட அதிகச் சிறப்பைக் கொணர வல்ல ஒருவர் பிறப்பார் என்றும், அவர் தாவீதின் வழி வந்து, கடவுளால் திருப்பொழிவு பெற்றவராக (''மெசியா'') மக்களை நீதி நேர்மையோடு ஆட்சி செய்வார் என்றும் இறைவாக்கினர் முன்னுரைத்தனர். மத்தேயு நற்செய்தியாளர் தம் நூலின் தொடக்கத்திலேயே இயேசு தாவீதின் வழி வந்தவர் என்பதைக் குறிப்பிடுகிறார். தாவீதின் வழி வந்ததால் இயேசு உண்மையான ''மெசியா'' என்பதையும் மத்தேயு குறிப்பாய் உணர்த்துகிறார்.

மேலும், இயேசு ஆபிரகாமின் வழி வந்தவர் என்பதையும் மத்தேயு தெரிவிக்கிறார். ஆபிரகாம் என்பவர் இஸ்ரயேல் மற்றும் யூத குல மக்களுக்குத் தந்தை என அழைக்கப்படுகிறார். ஆபிரகாம் தாம் வாழ்ந்துவந்த நாட்டை விட்டு, கடவுள் அவருக்குக் காட்டிய நாட்டுக்குச் சென்றார். கடவுளுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து, தம் சொந்த மகனாகிய ஈசாக்கைக் கடவுளுக்குப் பலியாக்கிடவும் முன்வந்தார். எனவே, கடவுள் மீது ஆபிரகாம் கொண்ட நம்பிக்கை மிக ஆழமானதாக இருந்தது. மத்தேயு நற்செய்தியில் இயேசு ''ஆபிரகாமின் மகன்'' எனக் குறிக்கப்படுகிறார் (மத் 1:1). இயேசு புதியதொரு மக்கள் குலத்திற்குத் தலைவராக ஏற்படுத்தப்படுகிறார் என்னும் உண்மையை இங்கே காண்கிறோம். மேலும் கடவுள்மீது இயேசு முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தார். தம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, அவருடைய திட்டத்தை இவ்வுலகில் செயல்படுத்துவதே இயேசுவின் வாழ்க்கைக் குறிக்கோளாக இருந்தது. அவர் ஆபிரகாமின் மகன் என்னும் முறையில் நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார். தாவீதுக்கும் ஆபிரகாமுக்கும் மகனாகப் பிறந்தவர் இயேசு என்பதிலிருந்து நாம் இயேசுவின் மனிதப் பண்பை அறிகிறோம். கடவுளிடமிருந்து புறப்பட்டு வந்து, கடவுளின் மகனாக வரலாற்றில் நம்மிடையே தோன்றிய இயேசு உண்மையிலேயே மனிதராகவும் இருந்தார். மனித வாழ்வு எவ்வாறு அமைய வேண்டும் என நமக்கு வழி காட்டித் தந்தார். அவரை நம் வாழ்வின் மையமாகக் கொண்டு செயல்பட நாம் அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவைப் போல நாங்கள் உம்மையே முழுமையாக நம்பி வாழ அருள்தாரும்.