திருவழிப்பாட்டு ஆண்டு A (01-01-2014)

''தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு
குழந்தைக்கு இயேசு என்று பெயரிட்டார்கள்/> ''தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு
குழந்தைக்கு இயேசு என்று பெயரிட்டார்கள்/> ஆண்டவரின் தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, 
'உம் மனைவி மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார்.
அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். 
ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார்/> ஆண்டவரின் தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, 
'உம் மனைவி மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார்.
அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். 
ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார்/> ஆண்டவரின் தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, 
'உம் மனைவி மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார்.
அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். 
ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார்/>


திருப்பலி முன்னுரை

அன்பான இறைமக்களே இன்று நம் அனைவர்க்கும் மகிழ்ச்சியான நாள். ஏனெனில் கடந்த ஓர் ஆண்டாக எல்லா துன்பங்கள் மத்தியிலும் இறைவனுடைய அன்புகரம் நம்மை வழிநடத்தியது. அதற்காக நன்றி செலுத்த இந்த பலிபீடத்தை சுற்றி குழுமியிருக்கிறோம். இன்றைய திருவழிபாடானது அன்னைமரியாள் இறைவனின் தாய் என்கிற பெருவிழாவை சிறப்பிக்கின்றது. மனித வாழ்க்கையில் துன்பங்கள் போராட்டங்களும் நிச்சயம் உண்டு. ஆனால் கடவுளின் குழந்தைகளான நாம் நம்பிக்கையோடு அப்பா என்று அழைத்தவர்களாய் உரிமையோடு இறைவனை அணுகிச் செல்ல வேண்டும். அப்போது அவருடைய ஆசிரை வழங்கி நம்மை காப்பார். எனவே வருகின்ற நாட்களில் நம் அன்னை மரியாளைப் போல இறைவனின் அன்பையும் நன்மைத்தனத்தையும் மனதில் சிந்தித்தவர்களாய் வாழ முயற்சி எடுப்போம். அன்னையின் பரிந்துரையால் இறைபாலகனின் ஆசீர் பெற தொடரும் பெருவிழாவில் பங்கெடுப்போம்.

அல்லது

இறைத் திருமகன் இயேசுவின் இனிய நண்பர்களே சகோதரர்களே சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம் கூறி இன்று தொடங்கும் இந்தப் புதிய ஆண்டில் நலமும் வளமும் பெருகி இறை ஆசீரை நிறைவாகப்பெற்றுவாழ வாழ்த்துகிறேன். இந்த நல்லநாளில்; அன்னையாகிய திருச்சபை நாம் இறை ஆசீருடன் சீரும் சிறப்பும் பெற்று வாழ ஒரு சிறந்த கொடையை இறைவன் நம் அனைவருக்கும் தந்துள்ளதை நினைவுபடுத்தி அக்கொடையின் பயனால் இந்த ஆண்டு முழுவதும் நலமாய் நிறைவாய் வாழ நம்மைத் தூண்டுகிறது. அக்கொடைதான் இறைவனின் தாயாகிய தூய கன்னிமரியா. எனவே இன்று சிறப்பான வகையில் சாதாரண மானுடப் பெண்ணான மரியா இயேசுவின் தாயானதால் இறைவனின் தாயான மாண்பினை பெருமையுடன் நினைவு கூர்ந்து இன்று விழா கொண்டாடுகிறோம். நேற்று இருந்தார் இன்றில்லை எனும் பெருமையுடைத்து இவ்வுலகு என்னும் சொல்லின்படி கடந்த ஆண்டு நம்முடன் இருந்த பலர் இன்று நம்முடன் இல்லை. ஆனால் நம் இறைவன் நம்மை நினைவு கூர்ந்துள்ளார். இன்று இப் புதிய ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்க அருள்கூர்ந்துள்ளார். இறைவனுக்கு தாழ்மையுடன் தன்னை முழுதும் ஈகம் செய்து மாண்புற்ற தூய கன்னிமரியாவைப் பின்சென்று இறைவனின் மக்களாக வாழ தொடர்ந்து ஒரு புது ஆண்டைத் நமக்குத் தந்து வாழவைத்துள்ளார். இப் புதிய ஆண்டில்:

- புது உணர்வு கொள்வோம்.
- புது முயற்சிகள் மேற்கொள்வோம்
- புது உறவுகள் வளர்ப்போம்
- இறைவனுக்கு நன்றி உள்ளவராய் வாழ்வோம்
- நம்மைச் சுற்றியுள்ளவரை மனதார அன்புடன் வாழ்த்தி நலமாய் வாழ ஊக்கமூட்டுவோம்.
அன்னைக்கு ஏற்ற பிள்ளைகளாய் ஆண்டு முழுவதும் இறை அருளிலும் அமைதியிலும் நிறைவுடன் வாழ்ந்திட வரம்வேண்டி இப்புத்தாண்டுத் திருப்பலியில் இணைவோம்



முதல் வாசகம்

"ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!
எண்ணிக்கை ஆகமத்திலிருந்து வாசகம் 6:22-27

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்: நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! " இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்: நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
திருப்பாடல்67;1-2,,4-5.7

1 கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! )2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்;பல்லவி

பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். 4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! பல்லவி

ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர்.பல்லவி

()5 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாகபல்லவி

!7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக!பல்லவி

இரண்டாம் வாசகம்

இனி நீங்கள் அடிமைகளல்ல: பிள்ளைகள்தாம்: பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4:4-7

சகோதர சகோதரிகளே, காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்: அந்த ஆவி "அப்பா, தந்தையே" எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல: பிள்ளைகள்தாம்: பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.2:16-21

அக்காலத்தில் இடையர்கள் விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும்; கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது. குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை: நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

புதுமையின் பிறப்பிடமே எம் இறைவா எம்!

திருச்சபையை வழிநடத்தும் எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள் குருக்கள் அனைவரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். இவர்கள் அனைவரும் உம் மந்தைகளாகிய எங்களை சிறப்புடன் வழிநடத்த வேண்டிய ஞானத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மீட்பு வழங்கும் நாயகனாம் இயேசுவே,

இப் புதிய ஆண்டிலே புதிய மனிதர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் இறையாட்சியின் மதீப்பிடுகளை உணர்ந்து அதன்படி அர்த்தமுள்ள புதுவாழ்வு வாழ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!

புதிய ஆண்டில் நாங்கள் செய்யும் தொழிலை ஆசீர்வதியும். எங்கள் குடும்பத்தில் சமாதானம் நிலவவும், எங்கள் செயல்கள் உமக்கு உகந்தவைகளாய் மாறவும், எங்கள் அருகில் வாழும் மக்களின் தேவைகள் நிறைவேறவும், தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும்: எமது பிள்ளைகள் இறையுறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் என் மகன் குணமடைவான்” தாயும் தந்தையுமானவரே!

உம் சந்நிதானத்தில் உம் பிள்ளைகளாகிய நாங்கள் பல்வேறு தேவைகள் நிறைவேற வேண்டி நிற்கிறோம் ஆண்டவரே. நாங்கள் எப்போதும் உம் அளவற்ற அன்பை சுவைக்கவும் அதனை பிறருக்கு அளிக்கவும் வேண்டிய தராள மனதை தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்பே உருவான இறைவா!

கடந்த ஆண்டிலே பல போரழிவுகளை சந்தித்த மக்களுக்காக மக்களாக மன்றாடுகிறோம். அவர்கள் இந்த ஆண்டிலே எந்தவொரு இடர்ப்பாடின்றி வாழ தம் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.




இன்றைய சிந்தனை

''இடையர்கள் விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்...ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்'' (லூக்கா 2:16,19)

பழையன கழிதலும் புதியன வருதலும் காலத்தில் வாழ்கின்ற நம் அனுபவம். ஓர் ஆண்டு கடந்து செல்லும் வேளையில் புதிதாகப் பிறக்கின்ற ஆண்டு என்ன கொணருமோ என ஆவலோடு எதிர்பார்ப்பது மனித இயல்பு. நல்லவை நடக்க வேண்டும், தீயவை ஒழிய வேண்டும் என நாம் விரும்புவதும் இயல்பு. கடவுள் நம்பிக்கை கொண்டோர் புதிதாகப் பிறக்கின்ற ஆண்டில் கடவுளின் ஆசி தங்களுக்கும் பிறருக்கும் நிறைவாகக் கிடைக்கும்படி வேண்டுதல் செய்வார்கள். புதிய ஆண்டு பிறக்கும் வேளையில் கிறிஸ்தவ மக்கள் இயேசுவின் தாய்க்குச் சிறப்பு விழாக் கொண்டாடுகிறார்கள். மரியா இயேசுவின் தாய். இயேசுவோ கடவுளின் மகன். எனவே மரியாவைக் ''கடவுளின் தாய்'' எனப் போற்றுவது திருச்சபை மரபு. இதனால் மரியா கடவுளுக்கு நிகரானவர் எனப் பொருளாகாது. ஆனால், கடவுளின் மீட்புத் திட்டத்தில் மரியாவுக்குச் சிறப்பிடம் உண்டு என்னும் உண்மை இதனால் அறிவிக்கப்படுகிறது.

மரியாவை இயேசுவின் தாயாகக் கொண்டாடும் வேளையில் அந்த அன்னை திருச்சபைக்கும் தாய் என்பதை நாம் மறத்தலாகாது. திருச்சபை என்பது கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டு வாழ்வோர் சமூகம். மரியா கடவுளிடமிருந்து தமக்கு அறிவிக்கப்பட்ட திட்டத்தை முழுமையாக ஏற்று, கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்தார். அவர் கடவுளின் வல்லமையால் தம் வாழ்வில் நடந்த ''நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்'' (லூக் 2:19). எனவே நம்பிக்கை கொண்டு வாழும் நமக்கு மரியா உண்மையிலேயே தாயாக, முன்மாதிரியாக இருக்கின்றார். மரியாவிடம் துலங்கிய நம்பிக்கை நம்மிடமும் விளங்க வேண்டும்.

ஆண்டவர் இயேசுவின் அருள் வாக்கு உங்கள் வாழ்வில் விளக்காக இருந்து வெளிச்சம் தந்து, செல்வங்கள் அனைத்தும் தந்து உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வதாக. உங்களுக்கு எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இயேசுவின் அன்பு, மகிழ்ச்சி, சமாதானம் என்றும் உங்களோடு இருப்பதாக.

மன்றாட்டு:

இறைவா, உம் வார்த்தையை நாங்கள் உள்ளத்தில் ஏற்று, வாழ்வில் செயல்படுத்த அருள்தாரும்.