யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)
திருவழிப்பாட்டு ஆண்டு A (05-01-2014)திருப்பலி முன்னுரை
இறைமகன் இயேசுவில் அன்புள்ள அருட்தந்தை, சகோதரர்களே சகோதரிகளே,
இன்று அன்னையாம் திருச்சபை ஆண்டவரின் திருக்காட்சி விழாவினைக் கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கின்றது.
ஆகவே, அனைவருக்கும் திருக்க்காட்சிப் பெருவிழாவின் வாழ்த்துக்களைக்கூறி மகிழ்கிறேன்.
உலக மக்களை மீட்க இறைமகன் இயேசு மனிதனாகப் பிறந்து வந்ததை உலக மக்களுக்கு அறிவிக்க இறைவன் ஓர் அருமையான ஏற்பாட்டை ஏற்படுத்தியிருந்தார்.
அதைத்தான் திருக்காட்சிப் பெருவிழா எனக் கொண்டாடுகிறோம்.
காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டனர் எனும் இறைச் சொற்களுக்கு ஏற்ப உலக இருளகற்றத் தோன்றிய இறைமகன் பிறப்பை
“அவருடைய விண்மீன் எழுதலால் உலகுக்கு உணர்த்தியதை உணர்ந்துகொண்ட கீழ்த்திசை ஞானிகள் அவரைத் தேடி வந்தனர்.
விண்மீன் காட்டிய வழியில் திருமகனைக் கண்டனர். உரிய முறையில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இரண்டாம் வாரமாகிய இன்று இயேசுவின் பணித் தலமையில் நாமும் நம்மை
இணைத்துக்கொண்டு நம்மைச் சுற்றியிருப்போர்க்கும் உலகோர்க்கும் இயேசுவைச் சந்திக்கச் செய்ய வழிகாட்டும் ஒளியாயிருக்க அழைக்கப்படுகிறோம்.
இன்றைய இறைவாக்குகளோடு இணைந்து இயேசுவின் வழி செல்லும் புதிய ஒளி பெற்றவர்களாக ஆக திருப்பலியில் உணர்ந்து பங்கேற்போம்.
ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்: அவரது மாட்சி உன்மீது தோன்றும்!
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் விடுவிக்கும் நம் இறைவனின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.
இன்று அன்னையாம் திருச்சபை ஆண்டவரின் திருக்காட்சி விழாவினைக் கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கின்றது.
மீட்பு என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கு மட்டும் உரிய தனியுடைமை அல்ல.
மாறாக, அது எல்லோருக்கும் உரிய உயர்வான கொடை என்பதை இன்றைய பெருவிழா நமக்கு உணர்த்துகின்றது.
இன்றைய முதல் வாசகம் பிற இனத்தார் உன் ஒளியை நோக்கி வருவார்கள். என்றும்,
இரண்டாம் வாசகத்தில் தூய பவுலடியார் நற்செய்தியின் வழியாக பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவுடன் உடன் பங்காளிகள் ஆகின்றனா என்றும்,
இன்றைய நற்செய்தியில்: பிற இனத்து ஞானிகள் இயேசுவை வணங்கி ஆராதித்தனர் என்றும் கூறப்படுகின்றது.
கடவுள் தன்னை ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தில் வெளிப்படுத்தினாலும்கூட அவர் எல்லோருக்கும்,
எல்லாக் காலத்திற்கும் சொந்தமானவர். இன்று நாம் வாழும் காலச் சூழ்நிலையில்:
இறைவார்த்தை, நற்கருணை வழியாக தன்னை வெளிப்படுத்தும் அன்புத் தெய்வம் நீதிக்கான முயற்சிகளிலும்,
சமத்துவ சம பந்தியிலும், ஏழை எளியோருக்கான நிலப்பாடுகளிலும்,
உரிமைக் குரலிலும் தன்னைத் தானே வெளிப்படுத்துகின்றார் என்பதை உணர்ந்தவர்களாய்,
அவரின் வெளிப்பாட்டை அறிந்து கொள்ளத் தேவையான ஞானத்தையும், அருளையும் வேண்டி இத் திருப்பலியில் பங்கேற்போம்.
வரலாற்றையே படைத்த இறைவன் வரலாற்றில் காலம்,
இடம் இவற்றிக்கு உட்பட்டவராக பிறந்தார்.
இவர் இஸ்ரயேல் குலத்தில் பிறந்திருந்தாலும் தன்னை எல்லா மக்களுக்கும்
‘தானே இறை மீட்பர்’ என்று புறவினத்தாருக்கும் வெளிப்படுத்தி
தன்னுடைய மீட்பு திட்டத்தில் பங்கு கொள்ள அழைப்பு விடுக்கிறார்.
இன்றைய சூழ்நிலையில் நாம் இறைபிரசன்னத்தை உணர்ந்து,
பிற மக்களும் கிறிஸ்துவை அறிய, கிறிஸ்துவுக்குள் வாழ கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறோமா?
என்பதை சிந்திக்க அழைக்கின்றது இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள். எனவே அனைவரும் இறைவெளிப்பாட்டை,
இறைபிரசன்னத்தை உணர எனது பங்களிப்பை கொடுப்பேன் என்ற சிந்தனையோடு இத்திருப்பலியில் பங்கெடுப்போம்.
எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்! பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்.
உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; சேபா நாட்டினர் யாவரும் பொன், நறுமணப் பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.
1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. பல்லவி
7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி
சகோதரர் சகோதரிகளே, உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.
ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, �யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்'' என்றார்கள்.
இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், �யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்.
ஏனெனில், `யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்' என்று இi றவாக்கினர் எழுதியுள்ளார்'' என்றார்கள்.
பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்துகொண்டான். மேலும் அவர்களிடம், �நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்'' என்று கூறி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றி குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.
|
இன்றைய சிந்தனை
''கிழக்கிலிருந்து ஞானிகள் வந்து, 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீண் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள்'' (மத்தேயு 2:2) மன்றாட்டு:இறைவா, நீர் காட்டுகின்ற ஒளியைத் தொடர்ந்து எங்கள் நம்பிக்கைப் பயணம் அமைந்திட அருள்தாரும். |