யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 1வது வாரம் செவ்வாய்க்கிழமை
2014-01-14

பொங்கல் விழா


முதல் வாசகம்

ஆண்டவர் அன்னாவை நினைவுகூர்ந்தார்; அவரும் சாமுவேலை ஈன்றெடுத்தார்.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 9-20

அந்நாள்களில் சீலோவில் உண்டு குடித்தபின், அன்னா எழுந்தார். குரு ஏலி, ஆண்டவரின் கோவில் முற்றத்தில் ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தார். அன்னா மனம் கசந்து அழுது புலம்பி, ஆண்டவரிடம் மன்றாடினார். அவர் பொருத்தனை செய்து வேண்டிக்கொண்டது: �படைகளின் ஆண்டவரே! நீர் உம் அடியாளாகிய என் துயரத்தைக் கண்ணோக்கி, என்னை மறவாமல் நினைவுகூர்ந்து எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன். அவனது தலைமேல் சவரக் கத்தியே படாது.� அவர் இவ்வாறு ஆண்டவர் திருமுன் தொடர்ந்து மன்றாடிக் கொண்டிருந்தபோது, ஏலி அவருடைய வாயைக் கவனித்தார். அன்னா தம் உள்ளத்தினுள் பேசிக் கொண்டிருந்தார்: அவருடைய உதடுகள் மட்டும் அசைந்தன; குரல் கேட்கவில்லை. ஆகவே ஏலி அவரை ஒரு குடிகாரி என்று கருதினார். ஏலி அவரை நோக்கி, �எவ்வளவு காலம் நீ குடிகாரியாய் இருப்பாய்? மது அருந்துவதை நிறுத்து� என்றார். அதற்கு அன்னா மறுமொழியாக, �இல்லை என் தலைவரே! நான் உள்ளம் நொந்த ஒரு பெண். திராட்சை இரசத்தையோ வேறு எந்த மதுவையோ நான் அருந்தவில்லை. மாறாக, ஆண்டவர் திருமுன் என் உள்ளத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன். உம் அடியாளை ஒரு கீழ்த்தரப் பெண்ணாகக் கருத வேண்டாம். ஏனெனில், என் துன்ப துயரங்களின் மிகுதியால் நான் இதுவரை பேசிக் கொண்டிருந்தேன்� என்று கூறினார். பிறகு ஏலி, �மனநிறைவோடு செல். இஸ்ரயேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது வேண்டுகோளைக் கேட்டருள்வார்� என்று பதிலளித்தார். அதற்கு அன்னா, �உம் அடியாள் உம் கண்முன்னே அருள் பெறுவாளாக!�என்று கூறித் தம் வழியே சென்று உணவு அருந்தினார். இதன்பின் அவர் முகம் வாடியிருக்கவில்லை. அவர்கள் காலையில் எழுந்து ஆண்டவர் திருமுன் வழிபட்டுவிட்டுத் திரும்பிச்சென்று இராமாவில் இருந்த தங்கள் இல்லம் அடைந்தனர். எல்கானா தம் மனைவி அன்னாவோடு கூடி வாழ்ந்தார். ஆண்டவரும் அவரை நினைவுகூர்ந்தார். உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார். �நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்� என்று சொல்லி, அவர் அவனுக்குச் �சாமுவேல்�என்று பெயரிட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

: ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது!
1 சாமு 2: 1. 4-5. 6-7. 8

1 ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது! என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது! ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன். பல்லவி

4 வலியோரின் வில்கள் உடைபடுகின்றன! தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்! 5 நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர்; பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார் ஆகியுள்ளனர்! மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல புதல்வரைப் பெற்றவளோ தனியள் ஆகின்றாள்! பல்லவி

6 ஆண்டவர் கொல்கிறார்; உயிரும் தருகின்றார்; பாதாளத்தில் தள்ளுகிறார்; உயர்த்துகின்றார்; 7 ஆண்டவர் ஏழையாக்குகிறார்; செல்வராக்குகின்றார்; தாழ்த்துகின்றார்; மேன்மைப்படுத்துகின்றார்! பல்லவி

8 புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்! குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்! உயர்குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ! கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 21-28

இயேசுவும் சீடர்களும் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார். அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, ``நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்'' என்று கத்தியது. ``வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ'' என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று. அவர்கள் அனைவரும் திகைப்புற்று, ``இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!'' என்று தங்களிடையே பேசிக்கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''ஓய்வு நாள்களில் இயேசு (கப்பர்நாகும்) தொழுகைக் கூடத்திற்குச் சென்று கற்பித்துவந்தார்'' (மாற்கு 1:21)

இயேசு தலைசிறந்த ஆசிரியரும் போதகருமாக விளங்கினார். அவர் ஆற்றிய பணியில் முக்கியமான ஒன்று கற்பிக்கும் பணி என்றால் மிகையாகாது. முற்காலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு மோசே கற்பித்ததுபோல, எசாயா போன்ற இறைவாக்கினர் போதித்ததுபோல, இயேசுவும் மக்களைத் தேடிச்சென்று அவர்களுக்குக் கடவுள் பற்றியும் கடவுளின் ஆட்சி பற்றியும் எடுத்துரைத்தார். இவ்வாறு போதிப்பதற்கு இயேசு தேர்ந்துகொண்ட இடம் யூதர்களின் ''தொழுகைக் கூடம்'' ஆகும். இத்தகைய தொழுகைக் கூடம் ஒன்று கப்பர்நாகும் ஊரில் இருந்தது. அவ்வூருக்கு இயேசு அடிக்கடி செல்வது வழக்கம். தற்கால அகழ்வாராய்ச்சியின் பயனாக அவ்வூர்த் தொழுகைக் கூடம் பற்றிய தடயங்கள் கிடைத்துள்ளன. இயேசுவின் போதனையைக் கேட்க மக்கள் குழுமி வந்தனர். இயேசு ''மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்துவந்தார்'' (மாற் 1:22) என்னும் குறிப்பு கருதத்தக்கது. இயேசுவின் போதனையில் அதிகாரம் இருந்தது என்பதன் பொருள் என்ன? இயேசு கடவுள் பற்றிய உண்மைகளை எடுத்துரைத்த வேளையில் வெறும் சொற்களை மட்டும் பயன்படுத்தவில்லை. விவிலியத்தில் கூறப்பட்டிருப்பதை மட்டுமே எடுத்துக் கூறவும் இல்லை. மாறாக, தம் தந்தையாகிய கடவுளோடு தமக்கிருந்த நெருங்கிய உறவின் ஆழத்தை மக்களோடு பகிர்ந்துகொண்டார்.

கடவுளோடு நமக்கிருக்கும் உறவு தந்தைக்கும் பிள்ளைக்கும் இடையே, தாய்க்கும் சேய்க்கும் இடையே நிலவுகின்ற உறவுக்கு ஒப்பானது. நாம் கடவுளையே முற்றிலும் சார்ந்திருக்கின்றோம். இயேசுவும் மக்களுக்குப் போதித்தபோது கடவுள் யார் என்பதைச் சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்தினார். கடவுளைப் பற்றிப் பேசுவதற்கு மாறாக, கடவுள் யார் என்பதை இயேசு தம் வாழ்க்கையில் வெளிப்படுத்தினார். எனவே அவருடைய சொல்லுக்கும் செயலுக்கும் ''அதிகாரம்'' இருந்தது. இயேசு கடவுளின் உறவை மனிதரோடு பகிர்ந்துகொண்டார். அந்த உறவை அனுபவித்தவர்கள் அவருடைய அதிகாரத்தையும் கண்டுகொண்டார்கள். இயேசு நம் ஆசிரியர் என்றால், அவரது பள்ளியில் பயில்கின்ற மாணவர் நாம் என்றால் அவரிடமிருந்த கற்றவற்றை நாம் கடைப்பிடிக்க வேண்டும். நாம் பெற்ற கல்வி அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்திட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவின் போதனையை ஏற்க எங்கள் இதயங்களைத் திறந்தருளும்.