யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)






பொதுக்காலம் 4வது வாரம் வியாழக்கிழமை
2014-02-06

புனித கொன்சலா கார்சியா


முதல் வாசகம்

தாவீது இஸ்ரயேலின்மீது ஆட்சி செலுத்திய காலம் நாற்பது ஆண்டுகள்
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 2: 1-4,10-12

தாவீதின் இறுதி நாள் நெருங்கினபோது அவர் தம் மகன் சாலமோனுக்குப் பணித்துக் கூறியது இதுவே: �அனைத்துலகும் போகும் வழியே நானும் போகிறேன். நீ நெஞ்சுறுதியும் வீரமும் கொண்டவனாய் இரு. உன் கடவுளாகிய ஆண்டவரின் ஆணைகளைக் கடைப்பிடி. அவர் காட்டும் வழியில் நட. மோசேயின் சட்டநூலில் எழுதப்பட்டுள்ள கடவுளுடைய நியமங்கள், விதிமுறைகள், நீதிச் சட்டங்கள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றைக் கடைப்பிடி. இப்படிச் செய்தால், நீ செய்யும் காரியங்களிலும் செல்லும் இடங்களிலும் வெற்றி காண்பாய். ஏனெனில் ஆண்டவர் என்னை நோக்கி, �உன் மைந்தர்கள் தங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் என் முன்னிலையில் உண்மையுடன் நடப்பார்களானால், இஸ்ரயேலின் அரியணையில் அமர்வதற்கேற்ற ஒருவன் அவர்களுள் இல்லாமல் போவதில்லை� என்று எனக்குக் கொடுத்த வாக்கு அப்போதுதான் நிலைத்திருக்கும். பின்னர் தாவீது தம் மூதாதையருடன் துயில் கொண்டு, தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டார். தாவீது இஸ்ரயேலின்மீது ஆட்சி செலுத்திய காலம் நாற்பது ஆண்டுகள். அவர் எபிரோனில் ஏழு ஆண்டுகளும் எருசலேமில் முப்பத்து மூன்று ஆண்டுகளும் ஆட்சி செலுத்தினார். சாலமோன் தம் தந்தை தாவீதின் அரியணையில் அமர்ந்தார். அவருடைய ஆட்சி உறுதியாக நிலைநாட்டப்பட்டது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, அனைத்தையும் ஆள்பவர் நீரே.
1 குறி 29: 10.-12

10 எங்கள் மூதாதை இஸ்ரயேலின் ஆண்டவரே, நீர் என்றென்றும் வாழ்த்தப் பெறுவீராக! -பல்லவி

11 ஆண்டவரே, பெருமையும் வலிமையும் மாட்சியும் வெற்றியும் மேன்மையும் உமக்கே உரியன. ஏனெனில் விண்ணுலகிலும் மண்ணுலகிலும் இருக்கும் அனைத்தும் உம்முடையவை. -பல்லவி

11 ஆண்டவரே, ஆட்சியும் உம்முடையதே. நீர் யாவருக்கும் தலைவராய் உயர்த்தப் பெற்றுள்ளீர். 12 செல்வமும் மாட்சியும் உம்மிடமிருந்தே வருகின்றன. -பல்லவி

12 நீரே அனைத்தையும் ஆள்பவர். ஆற்றலும் வலிமையும் உம் கையில் உள்ளன. எவரையும் பெருமைப்படுத்துவதும் வலியவராக்குவதும் உம் கையில் உள்ளன. -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-13

அக்காலத்தில் இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார். மேலும், ``பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக்கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். மேலும் அவர், ``நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும்பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்'' என்று அவர்களுக்குக் கூறினார். அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாறவேண்டும் என்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பன்னிருவரும் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்'' (மாற்கு 6:12)

இயேசு தம் சொந்த ஊருக்கு வருகிறார். ஆனால் ஊர்மக்கள் அவரைக் கண்டு, ''இவர் நம்மைப் போல் ஒருவர்தானே. இவரிடத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது'' என எண்ணுகிறார்கள். மண்ணின் மைந்தரிடம் துலங்கிய மாண்புமிகு பண்புகளைக் காணத் தவறிவிடுகிறார்கள் சொந்த ஊர் மக்கள். ஆனால் வேறு ஊர்களைச் சார்ந்த மக்களோ இயேசுவிடம் ஓர் அதிசய சக்தி துலங்குவதை அடையாளம் காண்கிறார்கள். இந்த முரண்பாட்டை மாற்கு தெளிவாக விளக்குகிறார். இயேசு ''புதிய போதனை'' வழங்கினார் (மாற் 1:27). நோய்வாய்ப்பட்டிருந்த மனிதருக்குக் குணம் நல்கினார் (மாற் 1:21-28; 322-30). தீட்டுப்பட்டோர் எனக் கருதப்பட்ட மக்களைத் தொட்டுக் குணமாக்கி, தீட்டு என்பது மனித கற்பனையே என உணர்த்தினார் (மாற் 1:40-45; 51-43). நோயும் சாவும் மனிதரை அடிமைப்படுத்த இயலாது எனக் காட்டும் விதத்தில் மக்களுக்கு உயிரளித்து, அவர்களைக் ''கைதூக்கிவிட்டார்'' (மாற் 1:29-31; 5:21-43). பாவிகள் என முத்திரை குத்தப்பட்டு, சமுதாயத்தால் விலக்கிவைக்கப்பட்ட மக்களை அன்போடு வரவேற்றார் (மாற் 2:13-17). பாவ மன்னிப்பு வழங்கினார் (மாற் 3:22-30). மக்களை அடிமைகளாக்கிய சமய ஒழுங்குகளைத் தகர்த்தெறிந்தார் (மாற் 2:18-28). மனிதரின் நலனுக்கு முதன்மை அளித்தார் (மாற் 3:1-5). குடும்பம் என்னும் சொல்லுக்குப் புதுப்பொருள் வழங்கினார் (மாற் 3:31-35). கதைகள் வழியாகக் இயேசு ஆற்றிய பணியைத் தொடர்வதற்கு மனிதர் தேவைப்பட்டார்கள். எனவே, இயேசு பன்னிருவரைத் தேர்ந்துகொண்டு அவர்களுக்குச் சிறப்புப் பணி கொடுக்கிறார். அவர்கள் ஆற்றவேண்டிய பணி இயேசுவின் பணிதான். அவர்கள் எடுத்துரைக்க வேண்டிய செய்தி இயேசு அறிவித்த செய்திதான். பன்னிருவரை இயேசு தேர்ந்துகொண்டது இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தைக் குறிப்பதற்காக. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கடவுள் தமக்கென்று ஒரு மக்கள் இனத்தைத் தேர்ந்துகொண்டது போல இப்போது புதியதொரு மக்களினத்தைத் தேர்ந்துகொள்கிறார் என்பதற்குப் பன்னிருவர் அடையாளமாயினர். இப்புதிய மக்கள் குலம் இயேசுவின் பெயரால் கூடுகின்ற மக்கள் குழு. இதையே ''திருச்சபை'' என அழைக்கிறோம். இக்குழுவைச் சேர்ந்தவர்கள் இயேசுவின் சீடர்கள். இவர்கள் நடுவே இயேசுவின் போதனை செயலாக்கம் பெற வேண்டும்.

இயேசுவின் குழுவில் நாம் பங்கேற்க வேண்டும் என்றால் நாம் மனம் மாற வேண்டும். மனம் மாறுதல் என்பது வாழ்க்கையை மாற்றியமைத்தலைக் குறிக்கும். நம் உள்ளத்தின் ஆழத்தில் கடவுளை முழுமையாக ஏற்று, நம் சிந்தனைப் பாணியை வேரோட்டமான முறையில் மாற்றியமைப்பதே உண்மையான மன மாற்றம். இந்த மாற்றத்தை அனுபவிப்பவர்கள் கடவுளோடு நெருங்கிய உறவு கொள்ள முன்வருவார்கள். அவர்களுடைய வாழ்க்கை ஒரு புதிய முறையில் துலங்கும். அதில் ஏற்படுகின்ற புதுமை கடவுளின் அருளால் நிகழ்கின்ற புதிய நிலையை வெளிக்காட்டும். இவ்வாறு புதிய மன நிலை பெறுவோர் கடவுளின் மன நிலையோடு செயல்படுவர். அப்போது கடவுளின் ஆட்சி நிறைவாக அவர்கள் நடுவே மலரும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் ஆழ்ந்த மாற்றத்தைக் கொணர்ந்தருளும்.