யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 5வது வாரம் செவ்வாய்க்கிழமை
2014-02-11

தூய லூர்துஅன்னை பெருவிழா


முதல் வாசகம்

`மக்களின் மன்றாட்டைக் கேட்டருளும்படி என் பெயர் இக்கோவிலில் விளங்கும்.�'
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 8: 22-23, 27-30

அந்நாள்களில் சாலமோன் ஆண்டவரின் பலிபீடத்தை நோக்கி நின்றுகொண்டு, இஸ்ரயேல் சபையார் அனைவர் முன்னிலையில் வானத்திற்கு நேரே தம் கைகளை உயர்த்தி மன்றாடியது: �இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் உம்மைப் போன்ற வேறு கடவுள் யாரும் இல்லை. உமது முன்னிலையில் முழு உள்ளத்தோடு உமக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் உம்முடைய அடியார்க்கு உமது உடன்படிக்கையின்படி தவறாது பேரன்பு காட்டி வருகிறீர். கடவுள் உண்மையில் இந்த மண்ணுலகில் தங்கியிருப்பாரா? வானமும் வான மண்டலங்களும் உம்மைக் கொள்ள இயலாதிருக்க, நான் கட்டியுள்ள இக்கோவில் எப்படி உம்மைக் கொள்ளும்? என் கடவுளாகிய ஆண்டவரே! உம் அடியான் செய்கிற வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் கேட்டருளும்; உம் அடியான் இன்று உம் முன்னிலையில் எழுப்பும் கூக்குரலுக்கும் செய்யும் வேண்டுதலுக்கும் செவிசாய்த்தருளும்! �என் பெயர் இவ்விடத்தில் விளங்கும்� என்று இக்கோவிலைப்பற்றி நீர் சொல்லியிருக்கிறீர்! இவ்விடத்தில் உம் அடியான் செய்யும் வேண்டுதலைக் கேட்டருள்வதற்காக, இரவும் பகலும் உமது கண்கள் இதனை நோக்கி இருப்பனவாக! உம் அடியானின் விண்ணப்பத்திற்கும் இவ்விடத்தை நோக்கிச் செய்கிற உம் மக்கள் இஸ்ரயேலர் வேண்டுதலுக்கும் செவிசாய்ப்பீராக! உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து கேட்டு அருள்வீராக! கேட்டு மன்னிப்பு அருள்வீராக!''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!
திருப்பாடல்84: 2-3. 4,9. 10. 11

2 என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. 3 படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. பல்லவி

4 உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். 9 எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்! நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும்! பல்லவி

10 வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது; பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும், என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது. பல்லவி

11 ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்; ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்; மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, நீர் உம் நியமங்களைத் தந்தீர்; உம் ஒழுங்கு முறைகளில் என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-13

ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன. ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, ``உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?'' என்று கேட்டனர். அதற்கு அவர், ``வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். `இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்' என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்'' என்று அவர்களிடம் கூறினார். மேலும் அவர், ``உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்துவிட்டீர்கள். `உன் தந்தையையும் தாயையும் மதித்து நட' என்றும் `தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்' என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, `நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது `கொர்பான்' ஆயிற்று; அதாவது `கடவுளுக்குக் காணிக்கையாயிற்று' என்றால், அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்'' என்று அவர்களிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, 'உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?' என்று கேட்டனர்'' (மாற்கு 7:5)

கிருமிகள் வழியாக நோய்கள் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கையாகக் கைகளைக் கழுவ வேண்டும் என்பது இப்போது பரவலான வழக்கமாக இருக்கிறது. இது நல்ல வழக்கம்தான். அதுபோல, உணவருந்துமுன் கைகளைக் கழுவ வேண்டும் என்பதும் சரியாகத்தான் படுகிறது. ஆனாலும் சடங்கு சம்பிரதாயமாகக் கை அலம்புகின்ற பழக்கம் யூதர்களிடையே நிலவியது. இது பற்றிய சட்ட திட்டங்கள் ''மூதாதையர் மரபு'' என்னும் தொகுப்பாக முதலில் வாய்மொழி முறையிலும் பின்னர் ''மிஷ்னா'' என்னும் எழுத்துமுறையிலும் வடிவம் பெற்றன. வழிபாட்டுச் சடங்குகளை நிறைவேற்றும்போது தூய்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக யூத குருக்கள் கை கழுவினர். பிற இனத்தாரோடு உறவுகள் வளரவே, கை கழுவும் பழக்கம் குருக்களல்லாத பொது மக்களிடையேயும் பரவியது. சட்டத்தைக் காக்கும் வேலியாக உருவான இப்பழக்கம் படிப்படியாக ஒரு தடுப்புச் சுவர் போல ஆயிற்று. அதாவது, மக்களை ஒருவர் ஒருவரிடமிருந்தும் கடவுளிடமிருந்தும் பிரிக்கின்ற தடையாக மாறிற்று. இத்தகைய தடுப்புச் சுவர்களை இயேசு தகர்த்தெறிய வந்தார். கை கழுவவதற்கு எவ்வளவு தண்ணீர் பயன்படுத்துவது, கைகளைக் கழுவும்போது அவற்றை எப்படி விரிப்பது, எத்தனை தடவை கழுவுவது போன்ற அதிநுணுக்கமான கேள்விகள் எழுப்பப்பட்டன. உரோமை ஆட்சியாளர்களால் சிறைப்படுத்தப்பட்ட யூத குரு பற்றி ஒரு கதை உண்டு. குடிப்பதற்கென்று அவருக்கு அவ்வப்போது தண்ணீர் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் அத்தண்ணீரைக் குடித்துத் தாகம் தீர்ப்பதைவிட சடங்குமுறையான கை அலம்பலுக்கென்றே தண்ணீரை எல்லாம் பயன்படுத்திவிட்டதால் சாவும் நிலைக்கு வந்துவிட்டாராம். அந்த அளவு சடங்குமுறை ஒழுங்குகள் மக்களின் வாழ்வை ஆக்கிரமித்துக் கொண்டன.

தண்ணீரினால் கழுவிப் பெறுகின்ற வெளித்தூய்மையை விட உள் தூய்மையே முதன்மையானது என இயேசு கற்பிக்கிறார். தேவையற்ற சுமைகளை மக்கள் மீது ஏற்றிய சமயத் தலைவர்களை இயேசு கடிந்துகொள்கிறார். தூய்மை என்பது உள்ளத்திலிருந்து எழ வேண்டும். நம்மைத் தேடி வருகின்ற கடவுளுக்கு நம் உள்ளத்தை நாம் திறப்பதே தூய்மை அடைய வழியே தவிர வெளிச் சடங்குகளால் வாழ்வில் தூய்மை துலங்கிவிடாது. அதுபோலவே தீட்டு என்பது மனித உள்ளத்திலிருந்து பிறக்கின்ற அழுக்கு. அத்தகைய அழுக்குகளை இயேசு பட்டியலிடுகிறார்: ''மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன'' (மாற் 7:21-22). இத்தகைய தீட்டுகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளவும் தூய்மை வாழ்வு நடத்தவும் நாம் விரும்பினால் நாம் ''உதட்டளவில் கடவுளைப் போற்றாமல் உள்ளத்தளவில் அவரை அணுகிச் செல்ல வேண்டும்'' (காண்க: மாற் 7:6). கடவுளின் வார்த்தையை நம் வாழ்வில் செயல்படுத்த வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் நல்ல சிந்தனைகள் உருவாகிட எங்களையே உம்மிடம் கையளிக்க அருள்தாரும்.