யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 1வது வாரம் செவ்வாய்க்கிழமை
2014-03-11


முதல் வாசகம்

எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 10-11

ஆண்டவர் கூறுவது: மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நீதிமான்களை இறைவன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கின்றார்.
திருப்பாடல் 34: 3-4. 5-6. 15-16. 17-18

3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். 4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். -பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். -பல்லவி

15 ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. 16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். -பல்லவி

17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். 18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப்போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார். ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்: ``விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.'' மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்' என்றார்'' (மத்தேயு 6:7)

இறைவனை நோக்கி நாம் வேண்டுதல் எழுப்பும்போது நமக்கு என்ன தேவை என மட்டுமே அவரிடம் நாம் கூறுவதில்லை. கடவுள் நம் அன்புத் தந்தை என்பதால் நமக்கு எது தேவை என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். நாம் மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டு போக வேண்டிய தேவையும் இல்லை; அவ்வாறு பிற இனத்தவரே செயல்படுவர் என இயேசு கூறுகிறார். சொற்களை உச்சரிப்பதால் நாம் கேட்பதைக் கடவுள் தருவார் என நினைப்போர் இறைவேண்டலை ஒருவித மந்திரவாதம் போலத்தான் பயன்படுத்துகிறார்கள். கிறிஸ்துவின் பார்வையில் இறைவேண்டல் என்பது அதுவல்ல. கடவுளின் பிரசன்னத்தில் நம்மை நிறுத்துவதே இறைவேண்டலின் அடிப்படையான பண்பு ஆகும். நாம் இறைவேண்டல் செய்வதற்கு முன்னரே கடவுளின் திருவருள் நம் உள்ளத்திலும் இதயத்திலும் நிறைந்துள்ளது. எனவே இறைவேண்டலின்போது நாம் அந்த இறைப்பிரசன்னத்தை உணர்வு முறையில் ஏற்கின்றோம்.

இறைவேண்டல் என்பது கடவுளுக்குத் தேவையானதல்ல, மாறாக மனிதருக்குத் தேவையானது. மனிதர் கடவுளின் உடனிருப்பைத் தங்கள் நினைவிலும் உணர்விலும் கொணரும்போது மனிதர் தம் உண்மையான நிலையை அறிகின்றார்கள். தம் வாழ்வும் செயலும் இறுதி நோக்கும் இறைவனையே தோற்றமும் நிறைவுமாகக் கொண்டிருப்பதை உணர்கிறார்கள். அப்போது மனிதர் மனிதத் தன்மையை மீண்டும் கண்டுகொள்கிறார்கள். இறைவேண்டல் என்பது இவ்வாறு நம்மை இறைவனோடு இணைக்கின்றது. அது நம் உள்ளத்திற்கு அமைதி கொணர்கின்றது. ஆக, இது வேண்டும் அது வேண்டும் என இறைவனிடம் நாம் கேட்பதுதான் இறைவேண்டல் என்றில்லை. இன்பத்திலும் துன்பத்திலும் நம்மோடு கடவுள் உள்ளார் எனவும், அவரில் நாம் நம்பிக்கை கொண்டால் ஒருநாளும் அவர் நம்மைக் கைவிடார் எனவும் நாம் உளமார ஏற்றுக் கொள்ளும் போது அங்கே இறைவேண்டல் தோன்றுகிறது. கடவுளைப் புகழ்வதற்குச் சொற்கள் தேவையில்லை, ஆனால் நம் வாழ்வு முறையே கடவுளின் புகழைப் பறைசாற்ற வேண்டும். அப்போது இறைவேண்டலே வாழ்வாக மாறும்.

மன்றாட்டு:

இறைவா, எந்நாளும் உம் திருவுளத்தை நிறைவேற்ற எங்களுக்கு அருள்தாரும்.