யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 1வது வாரம் புதன்கிழமை
2014-03-12


முதல் வாசகம்

நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள்.
இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 3:1-10

இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர், ``நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி'' என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்று நாள் ஆகும். யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்த பின், உரத்தகுரலில், ``இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்'' என்று அறிவித்தார். நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக்கொண்டனர். இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான். மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து, அதை நினிவே முழுதும் பறைசாற்றச் செய்தான். ``இதனால் அரசரும் அரச அவையினரும் மக்கள் அனைவருக்கும் அறிவிப்பதாவது: எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்; தம் தீய வழிகளையும், தாம் செய்துவரும் கொடுஞ்செயல்களையும் விட்டொழிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக்கொள்வார்; அவரது கடுஞ்சினமும் தணியும்; நமக்கு அழிவு வராது.'' கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் அவமதிப்பதில்லை.
திருப்பாடல் 51: 1-2. 10-11. 16-17

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். -பல்லவி

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். 11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். -பல்லவி

16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. 17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை. -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நாம் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32

அக்காலத்தில் மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது. யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிடமகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா! தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா?' என்றார்'' (லூக்கா 11:32)

யோனா என்னும் இறைவாக்கினரைப் பற்றிய கதை பழைய ஏற்பாட்டுப் புனைவுரைகளில் மிகச் சிறப்பான ஒன்று. கடவுளிடமிருந்து வந்த அழைப்பை ஏற்கத் தயங்கிய யோனாவைக் கடவுள் விட்டபாடில்லை.. தப்பித்து ஓடிவிடலாம் என்று நினைத்த யோனாவைத் துரத்திப் பிடித்தார் கடவுள்; ஒரு முக்கியமான பணியை ஆற்ற அவரை அனுப்பினார். பிற இன நகரமாகிய நினிவே சென்று, மக்கள் மனம் மாற வேண்டும் என்னும் செய்தியை அறிவிப்பதே அப்பணி. அரைகுறை மனத்தோடு யோனா அப்பணியை ஆற்றினார் என்றாலும், மக்கள் மனம் மாறி கடவுளிடம் திரும்பினார்கள். இயேசு தம்மை யோனாவுக்கு ஒப்பிட்டு, அதே நேரத்தில் அவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறார். யோனாவைப் போல இயேசுவும் மக்கள் மனம் மாற வேண்டும், கடவுளிடம் திரும்பவேண்டும் என்னும் செய்தியை அறிவிக்கிறார். ஆனால் யோனாவைவிடவும் பெரியவர் இயேசு. யோனா கடவுளின் பெயரால் மக்களுக்குச் செய்தி அறிவித்தார். இயேசுவோ கடவுளின் ஆட்சியை இவ்வுலகில் கொணர்வதற்காக நம்மிடையே வந்தார்.

இயேசு அறிவிக்கின்ற செய்தியைக் கேட்போர் அச்செய்தியில் அடங்கியிருக்கின்ற கருத்தைத் தம் உள்ளத்தில் ஏற்க வேண்டும்; அதைத் தங்கள் வாழ்வில் செயல்படுத்திக் காட்ட வேண்டும். கடவுள் பேரன்பும் இரக்கமும் உள்ளவர் என்னும் செய்தி யோனா வழியாக நினிவே மக்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் இயேசுவின் நற்செய்தி வழங்கப்படுகிறது. இயேசுவின் வாழ்வு, சாவு, உயிர்த்தெழுதல் வழியாகக் கடவுளின் எல்லையற்ற அன்பையும் இரக்கத்தையும் நாம் அனுபவிக்கின்ற பேறு பெற்றுள்ளோம். அந்த அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்திட நாம் அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, உங்கள் உள்ளத்தில் உண்மையான மாற்றத்தைக் கொணர்ந்தருளும்.