யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 2வது வாரம் வியாழக்கிழமை
2014-03-20


முதல் வாசகம்

மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்படுவர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 17: 5-10

ஆண்டவர் கூறுவது இதுவே: மனிதரில் நம்பிக்கை வைப்போரும் வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக் காண்போரும் சபிக்கப்படுவர். அவர்கள் பாலைநிலத்துப் புதர்ச் செடிக்கு ஒப்பாவர். பருவ காலத்திலும் அவர்கள் பயனடையார்; பாலை நிலத்தின் வறண்ட பகுதிகளிலும் யாரும் வாழா உவர் நிலத்திலுமே அவர்கள் குடியிருப்பர். ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவரே அவர்களது நம்பிக்கை. அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவர்; அது நீரோடையை நோக்கி வேர் விடுகின்றது. வெப்பமிகு நேரத்தில் அதற்கு அச்சமில்லை; அதன் இலைகள் பசுமையாய் இருக்கும்; வறட்சிமிகு ஆண்டிலும் அதற்குக் கவலை இராது; அது எப்போதும் கனி கொடுக்கும். இதயமே அனைத்திலும் வஞ்சகம் மிக்கது; அதனை நலமாக்க முடியாது. அதனை யார்தான் புரிந்துகொள்வர்? ஆண்டவராகிய நானே இதயச் சிந்தனைகளை ஆய்பவர்; உள்ளுணர்வுகளைச் சோதித்து அறிபவர். ஒவ்வொருவரின் வழிகளுக்கும் செயல்களின் விளைவுக்கும் ஏற்றவாறு நடத்துபவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்
திருப்பாடல் 1: 1-2. 3. 4,6

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில் கனி தந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருபவர் பேறுபெற்றோர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 19-31

அக்காலத்தில் இயேசு பரிசேயரை நோக்கிக் கூறியது: ``செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து, நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். அவர், `தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்' என்று உரக்கக் கூறினார். அதற்கு ஆபிரகாம், `மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது' என்றார். அவர், `அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே' என்றார். அதற்கு ஆபிரகாம், `மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்' என்றார். அவர், `அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்' என்றார். ஆபிரகாம், `அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவி சாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள்' என்றார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''செல்வர் ஒருவர் இருந்தார்...இலாசர் என்னும் பெயர்கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்'' (லூக்கா 16:19-20)

இயேசு சொன்ன கதைகள் மக்களை மகிழ்விப்பதற்காக அவர் எடுத்துக்கூறிய புனைவுகள் அல்ல. கதைகள் வழியாக இயேசு மக்களுக்கு இறையாட்சி பற்றி அறிவித்தார். ''செல்வரும் இலாசரும்'' என்னும் கதை லூக்கா நற்செய்தியில் மட்டுமே வருகிறது. லூக்கா பல இடங்களில் செல்வம் பற்றியும் செல்வத்தால் வருகின்ற கேடுகள் பற்றியும் குறிப்பிடுகிறார். இந்த உவமையில் வருகின்ற ''செல்வர்'' விலையுயர்ந்த ஆடைகள் அணிந்துகொண்டு, நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். ஆனால் அவருடைய வாயில் அருகே விழுந்துகிடந்த ஏழை இலாசரோ பசியால் வாடினார்; அவருடைய உடலை மறைக்கக் கூட உடை இல்லை; மாறாக அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. இலாசர் என்னும் ஏழை தம் வீட்டு வாயில் அருகே கிடந்ததைச் செல்வர் கண்டுகொள்ளவில்லை. அவருடைய எண்ணமெல்லாம் அவருடைய நலம் பற்றி இருந்ததே தவிர, அந்த ஏழையைப் பற்றி அவர் சிறிதும் கவலைப்படவில்லை; அவருடைய பசியை ஆற்றிட சிறு அப்பத் துண்டு கூடக் கொடுக்கவில்லை. -- இன்று நம்மிடையே செல்வர்களும் உண்டு இலாசர்களும் உண்டு. அன்றுபோல இன்றும் செல்வக் கொழிப்பில் உழல்வோர் பலர் ஏழைகளிள் நிலைமையைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். ஏழைகள் ஏழைகளாகளாய் இருப்பதற்குத் தாங்கள் பொறுப்பல்ல என்று கைகழுவுவோரும் உண்டு. ''நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை'' (மத் 25:42) என்னும் சொற்களை நாம் தீர்ப்பு நாளில் கேட்காமலிருக்க வேண்டும் என்றால் இன்றே இப்போதே நம்மைச் சூழ்ந்திருப்போரில், குறிப்பாக ஏழை மக்களில், இயேசுவைக் காண வேண்டும்; அவர்களுடைய பசியை ஆற்றிட முன்வர வேண்டும். இவ்வாறு செய்யத் தவறினால் பாதாளத்தில் செல்வர் அனுபவித்த துன்பம் (லூக் 16:24) நமக்கு வராது என நாம் எப்படிக் கூறமுடியும்? இறையாட்சியில் பங்கேற்க விழைவோர் அன்புக் கட்டளையை ஒவ்வொரு நாளும் கடைப்பிடிக்க அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு:

இறைவா, இரக்கம் நிறைந்த உள்ளத்தோடு நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.