யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 3வது வாரம் புதன்கிழமை
2014-03-26


முதல் வாசகம்

நீங்கள் என் கட்டளைகளை ஏற்று, பின்பற்றி நடங்கள்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1,5-9

மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இப்பொழுது இஸ்ரயேலரே! கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள், முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள். நம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படியே நியமங்களையும் முறைமைகளையும் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். எனவே, நீங்கள் போய் உரிமையாக்கிக்கொள்ளும் நாட்டில் அவற்றைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும், உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர். நாம் குரல் எழுப்பும்போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப்போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? கவனமாய் இருங்கள்; உங்கள் கண்களால் நீங்கள் கண்ட அனைத்தையும் மறந்துபோகாதபடி உங்கள் இதயங்களில் காத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்நாள் முழுமையும் நீங்கள் அவற்றை மறக்க வேண்டாம். உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் அவற்றை எடுத்துக் கூறுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக.
திருப்பாடல் 147: 12-13. 15-16. 19

12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! 13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பல்லவி

15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. 16 அவர் வெண்கம்பளிபோல் பனியைப் பொழியச் செய்கின்றார்; சாம்பலைப்போல் உறைபனியைத் தூவுகின்றார். பல்லவி

19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதி நெறிகளையும் அறிவிக்கின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே! நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்கவந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்' என்றார்'' (மத்தேயு 5:17)

''திருச்சட்டமும் இறைவாக்குகளும்'' என்னும் கூற்று விவிலியத்தைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. ''திருச்சட்டம்'' என்பது மோசே வழியாகக் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கிய வாழ்க்கை நெறியைக் குறிக்கும். அதை விளக்கியுரைத்தனர் இறைவாக்கினர். எனவே, இயேசு ''பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருப்பவற்றை'' அழிக்கவரவில்லை என மத்தேயு இவண் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். என்றாலும், இயேசு பழைய ஏற்பாட்டுப் பழக்கங்கள் பலவற்றை விமர்சித்தார்; அவற்றை ஒதுக்கிவைத்தார். எடுத்துக்காட்டாக, உணவருந்துமுன் கைகழுவுதல், கலன்களைச் சுத்தம் செய்தல் போன்றவை குறித்து இயேசு படிப்பித்ததையும், ஓய்வுநாள் கடைப்பிடிப்பதுபற்றி இயேசு கொணர்ந்த புதிய போதனையையும், பழைய ஏற்பாட்டுச் சட்டங்களை அவர் வித்தியாசமாக விளக்கியுரைத்ததையும் இவண் குறிப்பிடலாம் (காண்க: மத் 15:1-20; மத்23:25; மத் 12:1-8; மத் 5:21-48). எனவே, இயேசு திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் அழிப்பதற்கல்ல, அவற்றை ''நிறைவேற்றவே'' வந்தார் (மத் 5:17) என்பதன் பொருள் என்ன?

இயேசு யூத மரபில் பிறந்து வளர்ந்தவர். எனவே, அவருடைய ஆன்மீகம் யூத முறையில் அமைந்திருந்தது என்பதை நாம் ஐயமற ஏற்கலாம். என்றாலும், இயேசு யூத சமய நெறிகளைச் சீர்திருத்தவதையும் தன் பணியின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார் என்பதை நற்செய்தி நூல்கள் தெளிவுபடுத்துகின்றன. யூத சமய மரபு சில வேளைகளில் சட்ட நுணுக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, சட்டத்தின் உண்மைப் பொருளை மறந்துபோனதுண்டு. இதை இயேசு கண்டிக்கிறார். அதுபோலவே, யூத சமய நெறிகளை விளக்கியுரைத்த மறைநூல் அறிஞரும் பரிசேயரும் அவற்றின் ஆழ்ந்த பொருளை மறந்துவிட்டிருந்தனர். எனவே இயேசு தம் சீடரின் நெறி ''மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிடச் சிறந்திருக்கவேண்டும்'' எனக் கோரினார் (காண்க: மத் 5:20). இயேசுவின் சீடர்களாக வாழும் நாம் அவருடைய வாழ்வில் துலங்கிய நெறியை நமதாக்கிட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பில் நாங்கள் எந்நாளும் நிலைத்திருக்க அருள்தாரும்.