யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 3வது வாரம் சனிக்கிழமை
2014-03-29


முதல் வாசகம்

உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்.
இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6: 1-6

வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார். இரண்டு நாளுக்குப் பிறகு நமக்குப் புத்துயிர் அளிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்பிவிடுவார்; அப்பொழுது நாம் அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம். நாம் அறிவடைவோமாக, ஆண்டவரைப் பற்றி அறிய முனைந்திடுவோமாக; அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது; மழை போலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரி போலவும் அவர் நம்மிடம் வருவார்'' என்கிறார்கள். எப்ராயிமே! உன்னை நான் என்ன செய்வேன்? யூதாவே! உன்னை நான் என்ன செய்வேன்? உங்கள் அன்பு காலைநேர மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறதே! அதனால்தான் நான் இறைவாக்கினர் வழியாக அவர்களை வெட்டி வீழ்த்தினேன்; என் வாய்மொழிகளால் அவர்களைக் கொன்றுவிட்டேன்; எனது தண்டனைத் தீர்ப்பு ஒளிபோல வெளிப்படுகின்றது. உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்; எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகின்றேன்.
திருப்பாடல் 51: 1-2. 16-17. 18-19

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி

16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. 17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை. பல்லவி

18 சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக! 19யb அப்பொழுது எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக, அவரது குரலுக்குச் செவிகொடுங்கள்,' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 9-14

அக்காலத்தில் தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: ``இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: `கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.' ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, `கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்' என்றார்.'' இயேசு, ``பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்...பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்' என்றார்'' (லூக்கா 18:10,14) ''இயேசு, 'இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்...பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்' என்றார்'' (லூக்கா 18:10,14)

''பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமை'' லூக்கா நற்செய்தியில் மட்டுமே உள்ளது. கடவுளை நாம் எவ்வித மனநிலையோடு அணுக வேண்டும் என்பதற்கு இயேசு இக்கதை வழி பதில் தருகின்றார். அடிப்படையில் இருவித அணுகுமுறைகளை மனிதர் கடைப்பிடிக்கின்றனர். சிலர் தாங்கள் சாதித்த காரியங்களைப் பெரிதுபடுத்தி, தங்களையே உயர்ந்தவர்களாக, சிறந்தவர்களாக அனைவர் முன்னிலையிலும் காட்டிக்கொண்டுத் திரிவார்கள். மற்றவர்களோ இவ்வாறு தம்பட்டம் அடிக்காமல் தங்கள் வாழ்வில் குறை உண்டு என்பதை ஏற்றுக்கொள்வார்கள். இந்த இரு அணுகுமுறைகளில் முந்தியது பரிசேயரிடம் காணப்பட்டது; பிந்தியது வரிதண்டுவோரிடம் விளங்கியது. கடவுளை நாடிச் சென்று வேண்டுதல் செய்யும்போது நம்மில் தோன்றுகின்ற மன நிலை பரிசேயரிடம் துலங்கியதை ஒத்திருக்கிறதா அல்லது வரிதண்டுபவரிடம் காணப்பட்டதை ஒத்திருக்கிறதா?

இக்கேள்விக்குப் பதிலளிப்பது அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் நம்மிடம் சில வேளைகளில் ஒரு மன நிலையும் வேறு நேரங்களில் மறு மன நிலையும் தெரிவதுண்டு. நான் இதைச் செய்தேன், அதைச் செய்தேன் என்று கடவுளிடம் எடுத்துக் கூறி நாம் பெருமைகொண்டாடுவதில்லையா? அப்போது நம்மிடையே துலங்குவது பரிசேயரிடம் தெரிந்த மன நிலை தானே! இந்த மன நிலை கொண்டோர் கடவுளிடமிருந்து மன்னிப்பை எதிர்பார்க்கவில்லை, கடவுளிடமிருந்து உதவி கோருவதுமில்லை. தங்கள் சொந்த சக்தியால் எதையும் சாதித்துவிடலாம் என்கிற இறுமாப்புத் தான் அங்கே தெரிகிறது. இது சரியான மன நிலையல்ல என இயேசு தெளிவுபடுத்துகிறார். இதற்கு நேர் மாறானது வரிதண்டுபவரின் மன நிலை. அவருடைய தொழில் மக்களால் இகழப்பட்ட ஒன்று. ஏன், பல மக்கள் வரிதண்டுவோரை மனதார வெறுத்தனர். ஆனால் இந்த மனிதர் கடவுளிடம் சென்று தாம் குற்றம் செய்ததை ஏற்கிறார். பிறரை வஞ்சித்ததை ஒத்துக்கொள்கிறார். அதுமட்டுமல்ல. பிறரிடமிருந்து திருடிய பணத்தைத் திருப்பிக் கொடுப்பதாக வாக்களிக்கிறார். அவருடைய வாழ்க்கையில் ஒரு ஆழ்ந்த மாற்றம் ஏற்படுகிறது. கடவுளிடமிருந்து அவர் மன்னிப்புக் கோருகிறார். கடவுளும் அவருடைய மன்றாட்டை ஏற்றுக்கொண்டு அவரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார். நம்மிடம் இந்த மன நிலை துலங்குகிறதா?

மன்றாட்டு:

இறைவா, தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தை எங்களில் உருவாக்கியருளும்.