யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 4வது வாரம் சனிக்கிழமை
2014-04-05

புனித வின்சென்ற் பெரர்


முதல் வாசகம்

வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 11: 18-20

`ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்; நானும் புரிந்து கொண்டேன். பின்னர் நீர் அவர்களின் செயல்களை எனக்குக் காட்டினீர். வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்; அவர்கள் எனக்கு எதிராய், `மரத்தைப் பழத்தோடு அழிப்போம்; வாழ்வோரின் நாட்டிலிருந்து அவனை அகற்றிவிடுவோம்; அவன் பெயர் மறக்கப்படட்டும்' என்று சொல்லிச் சதித் திட்டம் தீட்டியதை நான் அறியாதிருந்தேன். படைகளின் ஆண்டவரே, நீர் நேர்மையோடு தீர்ப்பிடுபவர்; உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் சோதித்தறிபவர்; நீர் அவர்களைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும். ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.
திருப்பாடல் 7: 1-2. 8-9. 10-11

1 என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்; என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றித் தப்புவியும். 2 இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்; விடுவிப்போர் எவரும் இரார். பல்லவி

8bஉ ஆண்டவரே, என் நேர்மைக்கும் வாய்மைக்கும் ஏற்ப எனக்குத் தீர்ப்பளியும். 9 பொல்லாரின் தீமையை முடிவுக்குக் கொண்டுவாரும்; நல்லாரை நிலைநிறுத்தும்; நீர் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிபவர்; நீதி அருளும் கடவுள். பல்லவி

10 கடவுளே என் கேடயம்; நேரிய உளத்தோரை அவர் விடுவிப்பார். 11 கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி; நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக்கொள்ளாத இறைவன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 40-53

அக்காலத்தில் யூதர்களின் திருவிழா கூட்டத்தில் சிலர் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, ``வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே'' என்றனர். வேறு சிலர், ``மெசியா இவரே'' என்றனர். மற்றும் சிலர், ``கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்? தாவீதின் மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?'' என்றனர். இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது. சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத் தொடவில்லை. தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம், ``ஏன் அவனைப் பிடித்துக் கொண்டு வரவில்லை?'' என்று கேட்டார்கள். காவலர் மறுமொழியாக, ``அவரைப்போல எவரும் என்றுமே பேசியதில்லை'' என்றனர். பரிசேயர் அவர்களைப் பார்த்து, ``நீங்களும் ஏமாந்து போனீர்களோ? தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை நம்புவோர் யாராவது உண்டா? இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்'' என்றனர். அங்கிருந்த பரிசேயருள் ஒருவர் நிக்கதேம். அவரே முன்பு ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர். அவர் அவர்களிடம், ``ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?'' என்று கேட்டார். அவர்கள் மறுமொழியாக, ``நீரும் கலிலேயரா என்ன? மறைநூலைத் துருவி ஆய்ந்து பாரும். அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்'' என்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''நிக்கதேம் அவர்களிடம், ''ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?' என்று கேட்டார் (யோவான் 7:50-51)

நிக்கதேம் இயேசுவைத் தேடி இரவில் வந்த பரிசேயர். யூத சமயத்தில் மிகுந்த பிடிப்புள்ளவர். ஆனால் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்ட அவர் குறுகிய பார்வையினராக இல்லாமல் இயேசுவைப் பற்றி அதிகமாக அறிய விரும்பினார். எனவே இயேசுவைச் சந்திக்கச் சென்றார். முதலில் அவர் பயந்து, தயங்கிக்கொண்டே இயேசுவை அணுகினார். பிறர் தம்மைப் பற்றித் தவறாக நினைப்பார்களோ என அவருக்குப் பயம். ஆனால் அவர் திறந்த மனம் கொண்டவராக இருந்ததால் இயேசுவின்பால் ஈர்க்கப்பட்டார். இயேசுவின் எதிரிகள் ஒன்று சேர்ந்து இயேசுவுக்கு எதிராக சதித்திட்டம் வகுத்தபோது அவர்களை எதிர்த்துப் பேசும் துணிச்சல் நிக்கதேமுக்குப் பிறந்தது. இயேசு உண்மையிலேயே குற்றம் செய்தார் என்றால் அவருடைய குற்றம் யாது என விசாரித்து அறியாமல் அவருக்கு எதிராகத் தீர்ப்பளிப்பது முறையல்ல என நிக்கதேம் துணிந்து வாதாடினார்.

நிக்கதேம் இயேசுவிடம் கொண்ட நம்பிக்கை படிப்படியாகத்தான் வளர்ந்தது. நம் வாழ்விலும் நம்பிக்கை என்பது வளர்ச்சிக்கு உட்பட்டதே. சில வேளைகளில் நாம் உறுதியான நம்பிக்கையுடையவர்களாக இருக்கின்றோம். ஆனால் வேறு தருணங்களில் கடவுளின்மீது நாம் கொள்ளும் நம்பிக்கை தளர்ந்துபோய்விடுகிறது. நம்பிக்கை என்பது கடவுளின் கொடை. ஆனால் அதை நன்றியோடு ஏற்று நம்மில் வளரச் செய்வது நம் பொறுப்பு.

மன்றாட்டு:

இறைவா, இருளிலிருந்து ஒளிக்கு எங்களை வழிநடத்தும்.