யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
புனிதவாரம்
2014-04-15


முதல் வாசகம்

உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்துவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 1-6

தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்; தொலைவாழ் மக்களினங்களே, கவனியுங்கள்; கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்; என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். என் வாயைக் கூரான வாள்போன்று ஆக்கினார்; தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்; என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்; தம் அம்பறாத் தூணியில் என்னை மறைத்துக்கொண்டார். அவர் என்னிடம், `நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்' என்றார். நானோ, `வீணாக நான் உழைத்தேன்; வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்; ஆயினும் எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது; என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது' என்றேன். யாக்கோபைத் தம்மிடம் கொண்டுவரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்றுதிரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்; ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல் ; அவர் இப்பொழுது உரைக்கிறார்: அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: என் வாய் நாள்தோறும் உமது மீட்பை எடுத்துரைக்கும்.
பல்லவி: என் வாய் நாள்தோறும் உமது மீட்பை எடுத்துரைக்கும்.

1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும். 2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக்கொள்ளும். பல்லவி

3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர். 4 என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும்; நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர் பிடியினின்று என்னைக் காத்தருளும். பல்லவி

5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை. 6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்; உம்மையே நான் எப்போதும் புகழ்ந்து போற்றுவேன். பல்லவி

15 என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்; உம் அருட்செயல்களை என்னால் கணிக்க இயலாது. 17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பரம தந்தைக்குக் கீழ்ப்படிகின்ற எங்கள் அரசரே, போற்றப் பெறுக; அடிக்கக் கொண்டுபோகப்படும் சாந்தமான செம்மறிபோல நீர் சிலுவையில் அறையப்படக் கொண்டு செல்லப்படுகிறீர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 21-33, 36-38

அக்காலத்தில் தம் சீடர்களுடன் பந்தியமர்ந்த இயேசு உள்ளம் கலங்கியவராய், ``உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று திட்டவட்டமாகக் கூறினார். யாரைப்பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார். அவர்மேல் இயேசு அன்புகொண்டிருந்தார். சீமோன் பேதுரு அவருக்குச் சைகை காட்டி, ``யாரைப்பற்றிக் கூறுகிறார் எனக் கேள்'' என்றார். இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த அவர், ``ஆண்டவரே அவன் யார்?'' என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, ``நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்'' எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார். அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். இயேசு அவனிடம், ``நீ செய்ய இருப்பதை விரைவில் செய்'' என்றார். இயேசு ஏன் அவனிடம் இப்படிக் கூறினார் என்பதைப் பந்தியில் அமர்ந்திருந்தோர் யாரும் புரிந்துகொள்ளவில்லை. பணப்பை யூதாசிடம் இருந்ததால், திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக்கொண்டனர். யூதாசு அப்பத் துண்டைப் பெற்றுக் கொண்டவுடன் வெளியே போனான். அது இரவு நேரம். அவன் வெளியே போனபின் இயேசு, ``இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்'' என்றார். சீமோன் பேதுரு இயேசுவிடம், ``ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?'' என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, ``நான் போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வர இப்போது உன்னால் இயலாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய்'' என்றார். பேதுரு அவரிடம், ``ஆண்டவரே ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்'' என்றார். இயேசு அவரைப் பார்த்து, ``எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு மரியாவிடம், 'ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?' என்று கேட்டார் (யோவான் 20:15)

இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி கிறிஸ்தவ நம்பிக்கைக்கு அடிப்படை. கல்லறையிலிருந்து உயிர்பெற்றெழுந்த அந்த நேரத்தில் இயேசுவைக் கண்டவர் எவருமில்லை. ஆனால் உயிர்பெற்றெழுந்த இயேசு அவரில் நம்பிக்கை கொண்ட பல மனிதருக்குத் தோன்றினார். யோவான் நற்செய்தியில் இயேசு மகதலா மரியாவுக்குத் தோன்றிய நிகழ்ச்சி விரிவாகத் தரப்பட்டுள்ளது. இயேசுவின் உடலைக் கல்லறையில் காணாததால் கவலையோடு அழுதுகொண்டிருந்த மரியா ஒரு மனிதரைக் காண்கின்றார். அவர் தோட்டக்காரராக இருப்பாரோ என மரியா எண்ணுகிறார். ஆனால் உண்மையிலே அவர் உயிர்பெற்றெழுந்த இயேசுதான். இயேசு மரியாவிடம் ''ஏனம்மா அழுகிறாய்?'' எனக் கரிசனையோடு வினவுகிறார். ''யாரைத் தேடுகிறாய்?'' என இயேசு கேட்கிறார். இயேசுவைத் தேடுவதாக மரியா கூறியதும் இயேசு ''மரியா'' என்று பெயர் சொல்லி அழைக்கிறார். அக்குரலுக்குச் சொந்தக்காரர் யார் என்பதை மரியா உடனேயே கண்டுகொள்கிறார். தான் பேசிக்கொண்டிருக்கின்ற மனிதர் உண்மையிலேயே இயேசுதான் என உணர்ந்த அந்த நேரத்திலேயே மரியா ''ரபூனி'' (''போதகரே'') என இயேசுவைக் கூப்பிடுகிறார்.

இயேசு நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். இயேசுவை யார் என நாம் அறிந்து அவரிடத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றால் அதற்கு முதல் நிபந்தனை நாம் அவர் நம்மை எல்லையற்ற விதத்தில் அன்புசெய்கிறார் என்னும் உண்மையை ஏற்பதுதான். இயேசுவின் அன்பு நம்மை அரவணைக்கிறது எனவும் அவருடைய அன்பின் பிணைப்பில் நாம் புதுவாழ்வு பெறுகிறோம் எனவும் நாம் ஏற்றுக்கொண்டால் அவரை நாம் ஆண்டவரே எனவும் போதகரே எனவும் அழைப்பதோடு அவருடைய போதனையை நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் கொள்வோம். இயேசுவை அனுபவித்து உணர்கின்ற மனிதர் அவருடைய அன்பின் ஆழத்தை அறிவார்கள். அப்போது நாம் தேடுகின்ற இயேசு நம் கைகளுக்கு எட்டாதவராகவோ நம் பார்வைக்கு அப்பாற்பட்டவராகவோ இருக்கமாட்டார். மாறாக, அவர் நாம் நமக்கு எவ்வளவு நெருக்கமாக உள்ளோமோ அதைவிடவும் நமக்கு நெருக்கமாக உள்ளார் என நாம் உணர்வோம். இயேசுவின் உயிர்த்தெழுதல் நம்மை முற்றிலுமாக உருமாற்றுகிறது. பாவம் என்னும் தீமையிலிருந்து இயேசு நம்மை விடுவித்துள்ளார் என்னும் அனுபவம் நமதாக வேண்டும். அப்போது நன்மையைத் தேடிச் செல்கின்ற மனநிலை நம்மில் உருவாகும். நாம் தேடுகின்ற இயேசு நம்மை விட்டு அகன்றுவிட்டாரோ என்னும் அச்சம் நம்மில் எழாது. மாறாக, இயேசுவின் உடனிருப்பு நம் உள்ளத்தில் உள்ளதை நாம் உணர்வோம்; அவருடைய ஆவியால் புது வாழ்வு பெறுவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவைப் பின்பற்றி நாங்களும் உம் திருவுளத்தை நிறைவேற்ற அருள்தாரும்.