யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 5வது வாரம் வியாழக்கிழமை
2014-05-22

புனித ரீட்டா


முதல் வாசகம்

என் முடிவு இதுவே: கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 7-21

அந்நாள்களில் நெடுநேர விவாதத்திற்குப் பின்பு, பேதுரு எழுந்து, திருத்தூதர்களையும் மூப்பர்களையும் நோக்கிக் கூறியது: ``சகோதரரே, பிற இனத்தவர் என் வாய்மொழி வழியாக நற்செய்தியைக் கேட்டு அதில் நம்பிக்கை கொள்ளும்படி கடவுள் தொடக்கத்திலேயே உங்களிடமிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். உள்ளங்களை அறியும் கடவுள் நமக்குத் தூய ஆவியைக் கொடுத்தது போல் அவர்களுக்கும் கொடுத்து அவர்களை ஏற்றுக் கொண்டார். நம்பிக்கையால் அவர்களுடைய உள்ளங்களைத் தூய்மைப்படுத்தினார். நமக்கும் அவர்களுக்கும் இடையே அவர் எந்த வேறுபாடும் காட்டவில்லை. ஆகவே நம் மூதாதையரோ நாமோ சுமக்க இயலாத நுகத்தை இப்போது நீங்கள் இந்தச் சீடருடைய கழுத்தில் வைத்துக் கடவுளை ஏன் சோதிக்கிறீர்கள்? ஆண்டவர் இயேசுவின் அருளால் நாம் மீட்புப் பெறுவதுபோலவே அவர்களும் மீட்புப் பெறுகிறார்கள் என நம்புகிறோம்.'' இதைக் கேட்டு அங்குத் திரண்டிருந்தோர் யாவரும் அமைதியாயினர். கடவுள் தங்கள் வழியாகப் பிற இனத்தவரிடம் அடையாளங்களும் அருஞ்செயல்களும் செய்தார் என்பதைப் பர்னபாவும் பவுலும் எடுத்துரைத்ததை அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசி முடித்ததும், யாக்கோபு அவர்களைப் பார்த்துக் கூறியது: ``சகோதரரே, நான் கூறுவதைக் கேளுங்கள். கடவுள் பிற இனத்தாரிடமிருந்து தமக்கென மக்களைத் தேர்ந்துகொள்ள முதலில் அவர்களைத் தேடி வந்த செய்தியைச் சீமோன் எடுத்துரைக்கக் கேட்டீர்கள். இறைவாக்கினரின் சொற்களும் இதற்கு ஒத்திருக்கின்றன. அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்: `இவற்றுக்குப்பின் நான் திரும்பி வந்து விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் எழுப்புவேன்; அதிலுள்ள கிழிசல்களைப் பழுதுபார்த்து அதைச் சீர்படுத்துவேன். அப்பொழுது மக்களுள் எஞ்சியிருப்போரும் என் திருப்பெயரைத் தாங்கியிருக்கும் வேற்று இனத்தார் அனைவரும் ஆண்டவரைத் தேடுவர், என்கிறார் இதைச் செயல்படுத்தும் ஆண்டவர்.' தொடக்கத்திலிருந்தே இதனை அவர் தெரியப்படுத்தியுள்ளார். எனவே என் முடிவு இதுவே: கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது. ஆனால் சிலைகளுக்குப் படைக்கப்பட்டுத் தீட்டுப்பட்டவை, கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை, இரத்தம் மற்றும் பரத்தைமை ஆகியவற்றைத் தவிர்க்குமாறு அவர்களுக்கு நாம் எழுத வேண்டும். மோசேயின் சட்டத்தை அறிவிப்போர் முற்காலத்திலிருந்தே எல்லா நகரங்களிலும் இருக்கின்றனர்; அதனை ஓய்வுநாள்தோறும் தொழுகைக் கூடங்களில் வாசித்தும் வருகின்றனர்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்
திருப்பாடல் 96: 1-3. 10

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். 2ய ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். பல்லவி

2b அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். 3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். பல்லவி

10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: `ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவி சாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-11

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களை நோக்கி, 'என் தந்தை என்மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்' என்றார்'' (யோவான் 15:9)

இயேசு வழங்கிய அன்புக் கட்டளையைச் சிலர் ஒரு சுமையாகப் பார்ப்பார்கள். ஆனால் அது நம்மீது சுமத்தப்பட்ட ஒரு பளு அல்ல. இயேசு தருகின்ற அன்புக் கட்டளை உண்மையிலேயே அவர் நமக்குத் தருகின்ற ஒரு ''கொடை''. இயேசுவுக்கும் தந்தை இறைவனுக்கும் இடையே நிலவுகின்ற அன்பை நாம் அனுபவிக்க வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம். அந்த அன்பை நன்றியோடு ஏற்று, நம் வாழ்வில் நாம் ஆழ உணரும்போது, கடவுள் தம் சாயலாக உருவாக்கிய மனிதரை அன்புசெய்வது போல நாமும் அன்பு செய்திட முன்வருவோம். இவ்வாறு கடவுளன்புக்கும் பிறரன்புக்கும் இடையே நிலவுகின்ற ஆழ்ந்த பிணைப்பை நாம் கண்டுகொள்வோம். பிறரை அன்புசெய்யும்போது நாம் கடவுளின் அன்புக்கு இவ்வுலகில் சான்று பகர்கின்றோம். கடவுள் நம்மை அன்பு செய்து, தம் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டது போல நாமும் பிறர்மீது அன்பு கொண்டு அவர்களை நம் சகோதர, சகோதரிகளாக ஏற்க அழைக்கப்படுகிறோம்.

பிறரை அன்பு செய்ய நமக்குத் தரப்படுகின்ற கட்டளை ஒரு கொடை என்றால் அதை நாம் ஒருவர் ஒருவரோடு பகிர்ந்திட வேண்டும். இங்கே இயேசு நமக்கு ஒரு முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் உள்ளார். இயேசு கடவுளின் அன்பை நம்மோடு பகிர்ந்துகொண்டு நமக்காகத் தம்மையே பலியாக்கியதால் நாமும் ஒருவர் ஒருவரை அன்புசெய்ய வேண்டும். அதே நேரத்தில் இயேசுவின் அன்பைப் போல நம் அன்பு அமைய வேண்டும். அதாவது, பிறர் வாழ்வு பெற வேண்டும், நிலைவாழ்வில் பங்கேற்க வேண்டும் என்னும் நோக்கோடு நாம் பிறரை அன்புசெய்திட வேண்டும். இந்த அன்பு தன்னலத்தைத் தேடாது; பிறர் நலனில் அக்கறை கொண்டிருக்கும். இந்த அன்பு பொறுமையானது; தீங்கு நினையாது; நன்மை செய்யும்; தற்புகழ்ச்சி கொள்ளாது (காண்க: 1 கொரி 13).

மன்றாட்டு:

இறைவா, இயேசு எங்களை அன்புசெய்ததுபோல நாங்கும் பிறரை அன்போடு அரவணைக்க அருள்தாரும்.