திருவழிப்பாட்டு ஆண்டு A (25-05-2014)

என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாம் துணையாளர் உங்களுக்கு 
அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் 
உங்களுக்கு நினைவூட்டுவார்/> என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாம் துணையாளர் உங்களுக்கு 
அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் 
உங்களுக்கு நினைவூட்டுவார்/> என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாம் துணையாளர் உங்களுக்கு 
அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் 
உங்களுக்கு நினைவூட்டுவார்/>


திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசுவில் அன்பு நிறை அருட்தந்தை! (அருட்தந்தையர்களே) அன்புநிறை சகோதர்களே! சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம். துணையாளராம் தூய ஆவியை நம்மேல் பொழிந்து, நமக்கு நிறைவளிக்கும் நம் இறைத்தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துக்கள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் பாஸ்க்கா காலம் ஆறாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

இறைவார்த்தைக்கு கவனமுடன் செவிசாய்த்து வாழுகின்றவர்கள் பெற்றுக் கொள்ளும் அருள் ஆசீர்வாதங்களையும், குறிப்பாக ஆவியானவர் அவர்கள்மேல் நிறைவாகப் பொழியப்படுவதையும் இன்றைய இறைவார்த்தைகள் வழியாக நாம் அறிந்து கொள்ளுகின்றோம். எனவே நம் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுவோம். பணிவோடும் மரியாதையோடும் அனைவரோடும் உறவாடுவோம். இறைவார்த்தையின்படி வாழுவோம். அதற்கான வல்லமையை இத்திருப் பலியில் கேட்டுச் செபிப்போம்



முதல் வாசகம்

பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்8:5-8,14-17

அந்நாட்களில், பிலிப்பு சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார். பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒரு மனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர். ஏனெனில் பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்தக் குரலுடன் கூச்சலிட்டுக் கொண்டே வெளியேறின. முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர். இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று. சமாரியர் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டனர் என்பதை எருசலேமிலுள்ள திருத்தூதர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சென்று சமாரியர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுமாறு இறைவனிடம் வேண்டினார்கள். ஏனெனில் அதுவரை அவர்களுள் யாருக்கும் தூய ஆவி அருளப்படவில்லை. ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் அவர்கள் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள். பின்பு பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
திருப்பாடல்6: 1-7. 16,20

1 அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; 2 அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். 3ய கடவுளை நோக்கி, `உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை' என்று சொல்லுங்கள். -பல்லவி

4 `அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்' என்று சொல்லுங்கள். 5 வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. -பல்லவி

6 கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். 7 அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! -பல்லவி

16 கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். 20 என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! -பல்லவி

இரண்டாம் வாசகம்

தீமை செய்து துன்புறுவதை விட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல்
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 15-18

அன்புக்குரியவர்களே! உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள். ஆனால், பணிவோடும் மரியாதையோடும் விடை அளியுங்கள். உங்கள் மனச்சான்றும் குற்றமற்றதாயிருக்கட்டும். அப்பொழுது உங்கள் கிறிஸ்தவ நன்னடத்தையைப் பழிக்கிறவர்கள் உங்களை இழிவாகப் பேசியதைக் குறித்து வெட்கப்படுவார்கள். ஏனெனில், தீமை செய்து துன்புறுவதை விட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல். கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார். நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடிருந்த அவர் இறந்தாரெனினும் ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர் பெற்றெழுந்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர்.அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14:15-21

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்: உங்களுக்குள்ளும் இருக்கிறார்.நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன். இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் வாழ்கிறேன்: நீங்களும் வாழ்வீர்கள்.நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர் மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள்போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக் காத இறைவன் போற்றி!

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

பேரன்பை எம்மிடமிருந்து நீக்காத தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும், தம் உள்ளத்தில் கிறிஸ்துவை மனவுறுதியோடு ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றி தூய வாழ்வு வாழ்ந்திடவும், தாங்கள் எதிர்கொள்ளும் விசுவாசத்திற்கு எதிரான சவால்களுக்கு தகுந்த முறையிலும், பணிவோடும், மரியாதையோடும் விடை அளித்திட அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம் மன்றாட்டைப் புறக்கணியாத தந்தையே இறைவா!

எம் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றவும், பணிவோடும், மரியாதையோடும் அனைவரோடும் உறவாடவும்; இறைவார்த்தையின்படி வாழவும். அருள் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உமது வார்த்தையால் எம்மைக் குணப்படுத்தும் தந்தையே இறைவா!

பல்வேறு நோய்களினாலும், கவலைகளினாலும் பாதிக்கப்பட்டு வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்கள் உடல் நலமும், மனநலமும் பெற்று மகிழ்ந்திட அருள்கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!

பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், வேதனைகளோடும், விரக்தியோடும், கண்ணீரோடும் வாழும் கணவன் மனைவி அனைவர் மீதும் மனமிரங்கி அவர்களின் அன்பு தூய்மையானதாகவும், நிலையானதாகவும் இருக்கவும், அவர்கள் தாங்கள் பெற்றுக் கொண்ட அழைப்பிற்கேற்ப பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆன்மாக்களின் ஆயரும், கண்காணிப்பாளருமான தந்தையே இறைவா!

எமது இளைஞர், இளம் பெண்களை நிறைவாக ஆசீர்வதித்து, அவர்கள் நெறிகெட்ட தலைமுறையிலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொண்டு உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கடலை உலர்ந்த தரையாக மாற்றிவிடும் தந்தையே இறைவா!

ஆன்மீகம், அன்பு, அமைதி, உறவு என்பன வற்றி பாலைவனமாகப் போகியுள்ள மனித இதயங்களில் மனித நேயப் பண்புகள் அனைத்தும் மீளவும் துளிர்த்து நல்லுறவின் சமூகம் உருவாகிட அருள்கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்.

வாழ்க்கைத் துணைவி, வாழ்வோடு வரும் நட்பு, இரத்தத்தில் பிறந்து வளரும் உறவு உங்களோடு தங்கியிருந்தால், உங்களுக்குள் இருந்தால், ஆகா எப்படி இருக்கும்! இறைவனின் தூய ஆவி இதைச் செய்வதாக இயேசு சொல்லுகிறார். "உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரைக்"(யோவான் 14:16) கேட்பேன். "அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்."(யோவா 14:17)

அவர் நம்மோடு தங்கியிருந்தால் - சக்கேயு வீட்டில் தங்கியபோது அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆசீர்வாதம், (லூக்19:5) அந்திரேயா திருத்தூதர் பெற்ற இறை அனுபவம்,(யோவான் 1:38) எம்மாவு சீடர்கள் பெற்ற மகிழ்ச்சி (லூக்24:29) நமக்குக் கிடைக்கும். அவர் நமக்குள் இருந்தால் - உடலும் உயிர் பெறும்(உரோ8:11), உரிமை வாழ்வு வாழ்வோம்(உரோ 8:17) தெய்வீக மாட்சியில் வாழ்வோம். ஏனென்றால் "தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும்"(உரோ 8:10).

இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும் போது, இறைவனின் தூய ஆவி இன்றும் நம்மில் தங்கியிருக்கிறார்; நமக்குள் இருக்கிறார். நமது வாழ்க்கைத் துணையின், நண்பர்களின், உறவின் வடிவில் நம்மோடு அவரே இறைவனின் தூய ஆவியே நம்மோடு நமக்குள் தங்கியிருந்து நமக்கு நல் வாழ்வைத் தந்து கொண்டிருக்கிறார். இவர் வழியாக நீங்கள் அனுபவிக்கும் அனைத்திலும் அவர்கள் வழியாக இறைவனின் தூய ஆவியே செயல்படுகிறார். ஆகவே நம் இறைவன் நம்மைத் திக்கற்றவர்களாக விடமாட்டார். நம்மோடு தங்கி நம்மை வழிநடத்துவார்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை எதிர்க்கின்ற சக்திகளைக் கண்டு நாங்கள் துவண்டுவிடாதிருக்க அருள்தாரும்.