யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 6வது வாரம் வெள்ளிக்கிழமை
2014-05-30


முதல் வாசகம்

இரவில் ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி, ``அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 9-18

பவுல் கொரிந்து நகரில் இருந்தபோது, இரவில் ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி, ``அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை. இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்'' என்று சொன்னார். அவர் அவர்களுக்கு ஓர் ஆண்டு ஆறு மாதம் இறைவார்த்தையைக் கற்பித்து அங்கேயே தங்கியிருந்தார். கல்லியோ என்பவர் அக்காயா நாட்டின் ஆட்சியாளராக இருந்தபோது யூதர்கள் ஒருமித்து, பவுலைத் தாக்கி, அவரை நடுவர் மன்றத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்து, ``இவன் திருச்சட்டத்துக்கு எதிரான முறையில் கடவுளை வழிபடுமாறு மக்களைத் தூண்டிவிடுகிறான்'' என்றார்கள். பவுல் பேச வாயெடுத்தபோது கல்லியோ அவர்களை நோக்கி, ``யூதர்களே, ஏதாவது குற்றமோ பழிபாவமோ இருக்குமாயின் நான் பொறுமையுடன் உங்கள் வழக்கைக் கேட்டிருப்பேன். ஆனால் இது சொற்களையும் பெயர்களையும் உங்கள் திருச்சட்டத்தையும் பற்றிய சிக்கலாய் இருப்பதால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்; இதில் நடுவராயிருக்க நான் விரும்பவில்லை'' என்று கூறி, அவர்களை நடுவர் மன்றத்திலிருந்து துரத்திவிட்டார். உடனே அவர்கள் அனைவரும் தொழுகைக்கூடத் தலைவரான சொஸ் தேனைப் பிடித்து நடுவர் மன்றத்துக்கு முன்பாக அடித்தனர். ஆனால் கல்லியோ எதையும் பொருட்படுத்தவில்லை. பவுல் பல நாள்கள் கொரிந்துவிலுள்ள சகோதரர் சகோதரிகளிடம் தங்கியிருந்தார். அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தம் நேர்த்திக்கடனை நிறைவேற்றக் கெங்கிரேயா நகரில் முடிவெட்டிக் கொண்டு, அக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகியோருடன் சிரியாவுக்குக் கப்பலேறினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளே, அனைத்து உலகின் வேந்தர் நீரே.
திருப்பாடல்47: 1-2. 3-4. 5-6

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. -பல்லவி

3 வேற்று மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்; அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார். 4 நம் உரிமைச் சொத்தை அவர் நமக்குத் தேர்ந்து அளித்தார்; அது அவர் அன்புகூரும் யாக்கோபின் பெருமை ஆகும். -பல்லவி

5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். 6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மெசியா பாடுபட்டு, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து மாட்சிமை அடைய வேண்டும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 20-23

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும். பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார். இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள். ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது. அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''நான் உங்களை மீண்டும் காணும் பொழுது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது'' (யோவான் 16:22)

இயேசு தாம் துன்பங்கள் அனுபவித்து இறக்கப் போவதை முன்னறிவித்ததும் சீடர்கள் துயரத்திற்கு உள்ளானார்கள். ஆனால் அவர்களது துயரம் மகிழ்ச்சியாக மாறுகின்ற நேரம் வரும் என்பதை இயேசு முன்னறிவிக்கிறார். துன்பத்தையும் சாவையும் அனுபவித்தாலும் இயேசு சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார். அது சீடர்களுக்கு மகிழ்ச்சியைக் கொணர்ந்தது. தம் தலைவரும் ஆண்டவருமாகிய இயேசு தங்களோடு தொடர்ந்து தங்கியிருக்கிறார் என்னும் உணர்வு அவர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. இயேசு உயிர்வாழ்கின்றார் என்னும் உணர்விலிருந்த பிறக்கின்ற மகிழ்ச்சியை இயேசு ஓர் உவமையால் விளக்குகிறார். பேறுகால வேதனை அனுபவிக்கின்ற பெண் தனக்குப் பிறக்கப் போகின்ற குழந்தையின் வரவைக் கண்டு தன் துயரத்தை மறந்து மகிழ்ச்சியடைகிறார். அதுபோலவே சீடர்களும் இயேசுவின் சாவினால் துயரத்திற்கு உள்ளானாலும், புதிய முறையில் இயேசு தங்களோடு உயிர் வாழ்கின்றார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவார்கள்.

இயேசுவின் உயிர்த்தெழுதலால் நமக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியை யாரும் நம்மிடமிருந்து நீக்கிவிட முடியாது (யோவா 16:22). அந்த மகிழ்ச்சி நம் உள்ளத்தை நிரப்பும். அதை யாரும் பறித்துவிட முடியாது. ஏனென்றால் அது கடவுள் நமக்கு இயேசு வழியாகத் தருகின்ற அன்புக் கொடை. உள்ளத்தின் ஆழத்தில் நாம் உணர்கின்ற அந்த மகிழ்ச்சியை ''உலகம்'' புரிந்துகொள்ளாது. ஆனால் கடவுளைத் தங்கள் உள்ளத்தில் ஏற்போர் அந்த மகிழ்ச்சியின் இனிமையைச் சுவைப்பார்கள். தாம் பெற்ற மகிழ்ச்சியை இயேசுவின் சீடர்கள் தம் சகோதர சகோதரிகளோடு பகிர்ந்துகொள்ள முன்வர வேண்டும். இயேசுவை நாம் நம்புவதே இந்த மகிழ்ச்சிக்கு ஒரே நிபந்தனை. அப்போது நம்மோடு தங்கியிருந்து நம்மை வழிநடத்துகின்ற இயேசு நமக்குத் தம் மகிழ்ச்சியையும் அமைதியையும் வழங்குவார். அதை யாரும் நம்மிடமிருந்து பறித்திட இயலாது.

மன்றாட்டு:

இறைவா, உம் மகிழ்ச்சியால் எங்கள் உள்ளங்களை நிரப்பியருளும்.