யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 17வது வாரம் வியாழக்கிழமை
2014-07-31

புனித லொயலா இஞ்ஞாசியார்




முதல் வாசகம்

குயவன் கையிலுள்ள களிமண்ணைப் போல நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 18: 1-6

எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு: ``நீ எழுந்து குயவன் வீட்டுக்குப் போ. அங்கு என் சொற்களை நீ கேட்கச் செய்வேன்.'' எனவே நான் குயவர் வீட்டுக்குப் போனேன். அங்கு அவர் சுழல் வட்டை கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார். குயவர் தம் கையால் செய்த மண் கலம் சரியாக அமையாதபோதெல்லாம், அவர் அதைத் தம் விருப்பப்படி வேறொரு கலமாக வடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆண்டவர் எனக்கு அருளிய வாக்கு: ``இஸ்ரயேல் வீட்டாரே, இந்தக் குயவன் செய்வது போல் நானும் உனக்குச் செய்ய முடியாதா? என்கிறார் ஆண்டவர். இந்தக் குயவன் கையிலுள்ள களிமண்ணைப் போல இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

: இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்
திருப்பாடல் 146: 1-2. 3-4. 5-6

என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு; 2 நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்; என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன். பல்லவி

3 ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்; உன்னை மீட்க இயலாத மானிட மக்களை நம்ப வேண்டாம். 4 அவர்களின் ஆவி பிரியும்போது தாங்கள் தோன்றிய மண்ணுக்கே அவர்கள் திரும்புவார்கள்; அந்நாளில்அவர்களின் எண்ணங்கள் அழிந்துபோம். பல்லவி

5 யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்; தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர். 6 அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்; என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 47-53

அக்காலத்தில் இயேசு மக்களை நோக்கிக் கூறியது: ``விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.'' ``இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?'' என்று இயேசு கேட்க, அவர்கள், ``ஆம்'' என்றார்கள். பின்பு அவர், ``ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்'' என்று அவர்களிடம் கூறினார். இவ்வுவமைகளை இயேசு சொல்லி முடித்த பின்பு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா' என்று கேட்க, சீடர்கள், 'ஆம்' என்றார்கள்'' (மத்தேயு 13:51)

கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துகொண்டிருக்கிறது என்னும் நல்ல செய்தியை அறிவித்த இயேசு அதைப் பல உவமைகள் வழியாக மக்களுக்கு அறிவித்தார். குறிப்பாக, தம்மோடு நெருங்கிப் பழகி தம் போதனைகளை அருகிருந்து கேட்டு, தாம் புரிந்த அரும் செயல்களை நேரடியாகக் கண்டு அறிந்த தம் சீடர்களுக்கு இயேசு தம் உவமைகளின் உட்பொருளையும் விளக்கிக் கூறினார். இத்தகைய பேற்றினைப் பெற்ற சீடர்கள் இயேசு கூறியவற்றையும் அவர் செய்தவற்றையும் நன்றாக அறிந்து புரிந்திருப்பார்கள் என்றுதான் எண்ணத் தோன்றும். ஆனால் உண்மையில் அவர்கள் இயேசுவைப் புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டார்கள். பல தடவைகளில் இயேசுவின் போதனை அவர்கள் காதுகளில் விழுந்தும் அவர்கள் அப்போதனையை உள்வாங்கித் தம் நடத்தையில் எண்பிக்கத் தயங்கினார்கள்.

அன்று இயேசுவின் சீடர்கள் இயேசுவை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லையே என நாம் குறைகூறுகின்ற அதே தருணத்தில் நாம் இயேசுவை உண்மையிலேயே புரிந்துகொண்டுள்ளோமா என்னும் கேள்வியையும் எழுப்ப வேண்டும். இயேசு நம்மைப் பார்த்தும் அதே கேள்வியைக் கேட்கின்றார்: ''இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?'' (மத் 13:51). இயேசு யார் எனவும் அவர் நமக்கு வழங்கிய செய்தி யாது எனவும் நாம் உண்மையிலேயே புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நாம் திறந்த மனத்தோடு அவரை அணுக வேண்டும். அவரிடத்தில் நாம் முழுமையாக நம்பிக்கை கொள்ள வேண்டும். நம் இதயத்தைத் திறந்துவைத்து, அங்கே நம்மோடு பேசுகின்ற கடவுளின் குரலுக்கு நாம் கவனமாகச் செவிமடுத்தால் இயேசுவின் போதனைகளை நாம் அறிவளவில் மட்டுமன்றி, நம் இதய ஆழத்திலும் உணர்ந்து புரிந்துகொள்வோம். அப்போது அப்புரிதல் நம் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் கொணரும். இவ்வாறு நாம் மனம் மாறிய மனிதராக வாழ வேண்டும் என்பதே இயேசுவின் போதனையின் நோக்கம். நாம் மரபு வழி பெறுகின்ற மதிப்பீடுகளைப் ''பழையது'' என்னும் ஒரே காரணத்திற்காக ஒதுக்கிவைத்துவிடாமல், அவற்றைப் புதுப் பார்வையோடு ஏற்று, இயேசு கொணர்ந்த புது வாழ்வின் ஒளியில் நாம் பெற்றுக்கொண்டால் ''தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல'' (மத் 13:52) நாமும் அறிவோடு செயல்படுவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் மகன் வழியாக நீர் எங்களுக்கு அளிக்கின்ற நற்போதனையை நாங்கள் ஆழமாகப் புரிந்திட எங்களுக்கு அருள்தாரும்.