யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 17வது வாரம் வெள்ளிக்கிழமை
2014-08-01

புனித அல்போன்ஸ் மரிய லிகோறி




முதல் வாசகம்

ஆண்டவர் இல்லத்திலேயே மக்கள் எல்லாரும் எரேமியாவைச் சூழ்ந்துகொண்டனர்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 26: 1-9

யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிமுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஆண்டவர் அருளிய வாக்கு: ``ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: `நீ ஆண்டவர் இல்லத்தின் முற்றத்தில் நின்றுகொண்டு, அங்கு வழிபாடு செலுத்த வரும் யூதாவின் எல்லா நகரினர்க்கும் சொல்லுமாறு நான் உனக்குக் கட்டளையிடும் எல்லாச் சொற்களையும் நீ அவர்களுக்கு அறிவி; அவற்றில் ஒன்றையும் விட்டுவிடாதே. ஒருவேளை அவர்கள் உனக்குச் செவிசாய்த்து அவரவர் தம் தீய வழிகளை விட்டுத் திரும்பலாம். அப்பொழுது அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு அவர்களுக்கு நான் அளிக்க எண்ணியுள்ள தண்டனை பற்றி என் மனத்தை மாற்றிக்கொள்வேன்'. நீ அவர்களிடம் சொல்ல வேண்டியது: `ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், உங்களுக்குக் கொடுத்திருக்கும் என் சட்டத்தின்படி நடவாமலும், நீங்கள் செவிசாய்க்காதபொழுதும், நான் மீண்டும் மீண்டும் உங்களிடம் அனுப்பிவைக்கும் என் ஊழியர்களான இறைவாக்கினர்களுடைய சொற்களைக் கேளாமலும் இருப்பீர்களாகில், இக்கோவிலைச் சீலோவைப்போல் ஆக்குவேன்; இந்நகரை உலகில் எல்லா மக்களினத்தார் நடுவிலும் சாபக்குறியாக மாற்றுவேன்.'' ஆண்டவர் இல்லத்தில் எரேமியா உரைத்த இச்சொற்களைக் குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் கேட்டனர். மக்கள் அனைவருக்கும் சொல்லும்படி ஆண்டவர் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும் எரேமியா கூறிமுடித்தபோது, குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் அவரைப் பிடித்து, ``நீ கண்டிப்பாய்ச் சாகவேண்டும்'' என்று கூச்சலிட்டனர். ``இக்கோவில் சீலோவைப் போல் மாறும்; இந்நகர் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப்போகும் என்று ஆண்டவரின் பெயரால் நீ ஏன் இறைவாக்கு உரைத்தாய்?'' என்று கூறி, ஆண்டவர் இல்லத்திலேயே மக்கள் எல்லாரும் எரேமியாவைச் சூழ்ந்துகொண்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம் பேரன்பினால் எனக்குப் பதில்மொழி தாரும்.
திருப்பாடல் 69: 4. 7-9. 13

4 காரணமில்லாமல் என்னை வெறுப்போர் என் தலைமுடியை விட மிகுதியாய் இருக்கின்றனர்; பொய்க் குற்றம் சாட்டி என்னைத் தாக்குவோர் பெருகிவிட்டனர். நான் திருடாததை எப்படித் திருப்பித் தரமுடியும்? பல்லவி

7 ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. 8 என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். 9 உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச் சொற்கள் என்மீது விழுந்தன. பல்லவி

13 ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.'' இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58

அக்காலத்தில் இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், ``எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?'' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், ``தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்'' என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார்... அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்'' (மத்தேயு 13:54,57)

மத்தேயு நற்செய்தியில் வருகின்ற ஓர் அடிப்படையான கருத்து இயேசுவை ஏற்றவர்கள் சிலர் அவரை ஏற்க மறுத்தவர்கள் சிலர் என்பதாகும். இயேசுவின் போதனையில் ''ஞானம்'' வெளிப்பட்டது; அவர் செய்த புதுமைகளில் கடவுளின் ''வல்லமை'' தோன்றியது. இதை இயேசுவின் சொந்த ஊராரான நாசரேத்து மக்கள் நன்றாகவே அறிந்திருந்தார்கள் (மத் 13:54). ஆயினும் அவர்களுக்கு இயேசுவின் பெற்றோர் யார் என்றும், அவருடைய உறவினர் யார் என்றும் தெரிந்திருந்ததால் இயேசுவும் ஒரு சாதாரண மனிதர் தானே என முடிவுசெய்துவிடுகிறார்கள். ஆக, இயேசுவைப் பற்றிய ''வியப்பு'' ஒருபுறம், அவரைப் பற்றித் தமக்கு எல்லாம் தெரியுமே என்னும் அலட்சியப் போக்கு மறுபுறம் - இவை நாசரேத்து மக்களின் கண்களை மறைத்துவிட்டன. இயேசு உண்மையிலேயே யார் என்பதை அவர்கள் காணத் தவறிவிட்டார்கள். அது மட்டுமல்ல, அவர்கள் தங்கள் கண்களை மறைத்த திரையை அகற்ற முன்வரவில்லை.

இயேசுவைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? அவருடைய போதனை நம் உள்ளத்தைத் தொட்டு அதை உருகவைக்கிறதா? அவர் மக்களின் நன்மைக்காகப் புரிந்த அரும் செயல்கள் நம்மில் ''நம்பிக்கை'' என்னும் தீபத்தை ஏற்றிவைக்கிறதா? இயேசுவின் போதனையையும் சாதனையையும் கண்டு வியப்போர் எல்லாம் அவரில் நம்பிக்கை கொள்வதில்லை. அந்த நம்பிக்கை நம்மில் எழ வேண்டும் என்றால் நம்மைப் பற்றிக்கொண்டிருக்கின்ற முற்சாய்வுகளை நாம் களைந்திட வேண்டும். நம் உள்ளம் கபடற்றதாக மாறிட வேண்டும். அப்போது நாம் கடவுளின் அருளை நம் உள்ளத்தில் ஏற்றிட முன்வருவோம். நம்பிக்கை என்னும் ஒளி நம்மில் கதிர்வீசத் தொடங்கும். இயேசுவின் சீடர்கள் ''நம்பிக்கை குன்றியவர்களாக'' இருந்தார்கள் (காண்க: மத் 6:30; 8:26; 14:31; 16:8). ஆனால் அவருடைய சொந்த ஊர் மக்களோ ''நம்பிக்கை இல்லாதவர்களாக'' மாறிவிட்டார்கள் (மத் 14:58). நம்பிக்கை நம்மில் எழும்போது கடவுளின் வல்ல செயல்கள் நம் வாழ்வில் நிகழ்வதை நாம் கண்டு உணர்வோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனில் நம்பிக்கை கொண்டு வாழ எங்களுக்கு அருள்தாரும்.