திருவழிப்பாட்டு ஆண்டு A (03-08-2014)

இயேசு சீடர்களிடம், 'அவர்கள் செல்ல வேண்டியதில்லை; 
நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்/> இயேசு சீடர்களிடம், 'அவர்கள் செல்ல வேண்டியதில்லை; 
நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்/> இயேசு சீடர்களிடம், 'அவர்கள் செல்ல வேண்டியதில்லை; 
நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்/> இயேசு சீடர்களிடம், 'அவர்கள் செல்ல வேண்டியதில்லை; 
நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்/>


திருப்பலி முன்னுரை

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இரக்கமும் கனிவும் உடைய ஆண்டவரின் சந்நிதானத்தில் நாம் ஒன்று கூடியுள்ளோம. நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல்வாழ்த்துக்கள் கூறி உங்கள் அனைவரையும்: இன்று பொதுக்காலம் பதினெட்டாம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வரவேற்று நிற்கின்றோம்.

'மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன்" என்னும் ஆசீர்வாதத்தோடு நாம் இன்றைய நாளில் இந்தத் திருப்பலிக் கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றோம். மகிழ்ச்சி நிறைந்த உன்னதமான வாழ்வை நமக்குத் தருவதாக இறைவன் கூறுகின்றார். இரக்கமும், கனிவும், பேரன்பும் உடையவரான ஆண்டவர் ஆறுதல், நிறைவு, செல்வம், இன்பம் அனைத்தையும் நமக்குத் தருகின்றார். எனவேதான், கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? எனத் திருத்தூதர் பவுலடியார் தனது அனுபவத்தைக் கூறுகின்றார். எனவே என்றும், எங்கும், எப்பொழுதும் இறைவனுடைய வார்த்தையிலே நம்பிக்கை கொண்டு அவர் காட்டும் வழியில் நடந்து நிறைவடைய இறையருள்கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

"தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்;
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 1-3

இறைவன் கூறுவதாவது: "தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள். வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள். உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்; நல்லுணவை உண்ணுங்கள்; கொழுத்ததை உண்டு மகிழுங்கள். எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்; தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன்."

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்
திருப்பாடல் 145: 8-9. 15-16. 17-18

8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். 9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி

15 எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். 16 நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர். பல்லவி

17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. 18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். பல்லவி

இரண்டாம் வாசகம்

எந்தப் படைப்புப் பொருளும் கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 35, 37-39

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? ஆயினும், நம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம். ஏனெனில் சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்போ நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 13-21

அக்காலத்தில் இயேசு புறப்பட்டுப் படகிலேறிப் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவு கொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார். மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, ``இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்'' என்றனர். இயேசு அவர்களிடம், ``அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்'' என்றார். ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, ``எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை'' என்றார்கள். அவர், ``அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்'' என்றார். மக்களைப் புல் தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்; அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலாக உணவு உண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்: கேளுங்கள்: அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

நீர் அழைத்தோரைத் உமக்கு ஏற்புடையோராக்கி உம் மாட்சியில் பங்கு பெறச் செய்த தந்தையே இறைவா!

நீர் அழைத்து அபிசேகம் செய்துள்ள எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவரும் சாலமோனைப் போன்று ஞானத்தோடு பணியாற்றவும், உமது திருச்சட்டத்தின்மீது மிகுந்த பற்றுக் கொண்டு வாழவும் வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பின் திருவுருவே இயேசுவே,

நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் என்னும் உமது கட்டளைக்காக இன்று நன்றி செலுத்துகிறோம். எங்களோடு வாழும் இல்லாதவர்களுக்கு உணவும், மாண்பும் வழங்கும் பொறுப்பை நீர் எங்களுக்கே தந்திருக்கிறீர். இந்தப் பொறுப்பை உணர்ந்து எங்களிடம் என்ன உள்ளதோ - செல்வம், ஆற்றல்கள், திறமைகள், நேரம் அதை உமது பாதங்களில் ஒப்புக்கொடுக்கும் தாராள மனத்தை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உமது வார்த்தையால் எம்மைக் குணப்படுத்தும் தந்தையே இறைவா!

பல்வேறு நோய்களினாலும், கவலைகளினாலும் பாதிக்கப்பட்டு வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்கள் உடல் நலமும், மனநலமும் பெற்று மகிழ்ந்திட அருள்கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டும். ஆண்டவரே,

எம் வேண்டுதலுக்குச் செவிகொடும்: நாங்கள் ஒவ்வொருவரும் நீதி, நேர்மை, கனிவு, பொறுமை, தாழ்ச்சியுடையோராய் உமது வார்த்தையின்படி எமது வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இறைவா,

உம் திருமகனிடம் விளங்கிய பரிவு எங்கள் வாழ்விலும் துலங்கிடவும், உம் திருமகனின் உடலையும், இரத்தத்தையும் எங்களுக்கு உணவாக அளித்த உமக்கு நாங்கள் நன்றியறிந்திருக்க அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டும் அன்புத் தந்தையே இறைவா!

அருள் மிகுந்தவரே: விரைவில் சினமுறாதவரே: பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவரே. எம் இளைஞர்களைக் கண்ணோக்கி அவர்கள் மீது இரங்கும்: உம் அன்பின் ஆற்றலைத் அவர்களுக்குக் கொடும்: அவர்கள் எப்பொழுதும் மனிதநேயம் கொண்டவர்களாக இருக்க அவர்களுக்கு ஆசீர் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலாக உணவுண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்'' (மத்தேயு 14:21)

மக்களுக்கு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்து, அவர்கள் மனம் மாற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் இயேசு. கடவுளின் ஆட்சி மக்களிடையே வந்துகொண்டிருக்கிறது என்பதை அவர்கள் கண்கூடாகக் காணும் விதத்தில் இயேசு பல அதிசய செயல்களையும் புரிந்தார். அச்செயல்கள் வழியாக அவர் மக்களுக்கு நன்மை கொணர்ந்தார். இத்தகைய அரும் செயல்களில் ஒன்று ''ஐயாயிரம் பேருக்கு உணவளித்தல்'' ஆகும் (மத் 14:13-21). இந்நிகழ்ச்சியைப் பிற நற்செய்தி ஆசிரியர்களும் குறித்துள்ளனர் (காண்க: மாற் 6:30-44; லூக் 9:10-17; யோவா 6:1-14). மேலும் மத்தேயுவும் மாற்கும் இயேசு மக்களுக்கு உணவளித்த மற்றொரு நிகழ்ச்சியையும் குறிக்கின்றனர் (காண்க: மத் 15:32-39; மாற் 8:1-10). மக்கள் பெருந்திரளாக வந்து தம்மை அணுகியதைக் கண்ட இயேசு ''அவர்கள்மீது பரிவுகொண்டார்'' (மத் 14:14). அன்பிலிருந்து தோன்றுகின்ற பரிவுதான் இயேசுவின் உள்ளத்திலிருந்து எழுந்த பாச உணர்வு, அவர் மக்களிடத்தில் கொண்டிருந்த அக்கறை. எனவே அவர் ''உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்'' (மத் 14:14). மக்களுக்கு இயேசு உணவளித்த நிகழ்ச்சியை நாம் பல கோணங்களிலிருந்து பார்க்கலாம். இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் பாலைநிலத்தில் மன்னா என்னும் உணவை அளித்ததுபோல இங்கு இயேசு பசியுற்றோருக்கு உணவளித்துப் பாதுகாக்கின்றார். எலியா, எலிசா போன்ற இறைவாக்கினர் மக்களுக்கு உணவு வழங்கியதுபோல இங்கும் இயேசு செயல்படுகின்றார் (காண்க: விப 12:37; 2 அர 4:42-44). மேலும் நற்கருணையை இயேசு ஏற்படுத்தியதும் இங்கே முன்குறியாகக் காட்டப்படுகிறது. இயேசு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, ''வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்'' (மத் 14:19). இயேசு நமக்காகச் சிலுவையில் உயிர்துறப்பதற்கு முன் தம்மையே உணவாகக் கையளித்த நிகழ்ச்சி இவண் நினைவுகூரப்படுகிறது (காண்க: மத் 26:27).

மனித வரலாறு நிறைவுக்கு வரும் காலமும் இங்கே குறிக்கப்படுகிறது. கடவுளின் ஆட்சி முழுமையாக மலரும் நாளில் எல்லா மக்களினத்தாருக்கும் கடவுள் பெருவிருந்து அளிப்பார் என்னும் உருவகம் விவிலியத்தில் பல இடங்களில் வருகிறது. தேவைக்கு அதிகமாகவே உணவு தந்து, அனைவரின் பசியையும் கடவுள் போக்குவார்; அவர்களுக்கு முடிவில்லாப் பேரின்பம் அளிப்பார். இவ்வாறு பழைய ஏற்பாட்டு நினைவும், நற்கருணைக் கொண்டாட்ட நினைவும், இறுதிக் கால விருந்தின் நினைவும் உள்ளடங்கிய விதத்தில் மத்தேயு ''அப்பங்கள் பலுகுதல்'' நிகழ்ச்சியை வடிவமைக்கிறார். இந்த ஆழ்ந்த பொருள் கொண்ட நிகழ்ச்சியில் இயேசு உண்மையாகவே மக்களின் பசியைப் போக்குகிறார். அவ்வாறே இயேசுவின் சீடர்களும் செய்ய வேண்டும். அவர்களும் மக்களுக்கு உணவளிக்க வேண்டும் (''நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்'' - மத் 14:16). எஞ்சியிருக்கும் உணவை வீணடிக்காமல் மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டும். இன்று நற்கருணைக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் நாம் இயேசு நமக்குத் தம்மையே உணவாகத் தருகின்றார் என்பதைக் கருத்தளவில் மட்டுமே ஏற்காமல், அக்கொண்டாட்டத்தின் விளைவாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் உணர்ந்து இயேசுவைப் போல மக்கள்மீது ''பரிவுகொண்டு'' செயல்பட அழைக்கப்படுகிறோம். அப்போது நம் வாழ்வு வழியாகக் கடவுளின் ''வல்லமை மிக்க செயல்'' வெளிப்படும்; மக்களுக்கும் நலன் விளையும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனிடம் விளங்கிய பரிவு எங்கள் வாழ்விலும் துலங்கிட அருள்தாரும்.