யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 21வது வாரம் செவ்வாய்க்கிழமை
2014-08-26




முதல் வாசகம்

எங்கள் வாய்மொழி, திருமுகம் வழியாக அறிவிக்கப்பட்டவற்றில் நிலையாய் இருங்கள்.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-3, 14-17

சகோதரர் சகோதரிகளே! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றியும் அவரோடு நாம் ஒன்று கூடுவதைப் பற்றியும் உங்களுக்கு நாங்கள் கூற விழைவது: ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என, இறைவாக்காகவோ அருளுரையாகவோ நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால், நீங்கள் உடனே மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்; திகிலுறவும் வேண்டாம். எவரும் உங்களை எவ்வகையிலும் ஏமாற்ற இடம் கொடாதீர். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். ஆகவே அன்பர்களே! எங்கள் வாய்மொழி வழியாகவோ திருமுகம் வழியாகவோ அறிவிக்கப்பட்ட முறைமைகளைப் பற்றிக்கொண்டு அவற்றில் நிலையாயிருங்கள். நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க ஆண்டவர் வருகின்றார்
திருப்பாடல் 96: 10. 11-12. 12-13

10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். பல்லவி

11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். 12ய வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும். பல்லவி

12b அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். 13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 23-26

அக்காலத்தில் இயேசு கூறியது: ``வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப் பிடிக்காமல் விட்டுவிடுகிறீர்கள். இவற்றைக் கண்டிப்பாய்க் கடைப் பிடிக்கவேண்டும். அவற்றையும் விட்டுவிடக் கூடாது. குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள். வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள்' என்றார்'' (மத்தேயு 23:25)

நாடகத்தில் ஒருவர் அரசராகவோ, அமைச்சராகவோ, படைத்தலைவராகவோ, ஏவலாளாகவோ நடிக்கலாம். ஆனால் நாடகம் முடிந்ததும் அவர் தன்னுடைய அன்றாட வாழ்க்கை முறைக்குத் திரும்பி விடுவார். இயேசு குறிப்பிடுகின்ற ''வெளிவேடம்'' இதுபோன்றதுதான். பரிசேயரும் மறைநூல் அறிஞரும் மக்கள்முன் நல்லவர்கள்போல் நடிக்கிறார்களே தவிர உண்மையிலேயே நல்லவர்களாகச் செயல்படவில்லை என இயேசு குற்றம் சாட்டுகிறார். எல்லாப் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் வேண்டுமென்றே மக்களைத் திசைதிருப்பினார்கள் என்றோ, அவர்களை ஏய்த்துப் பிழைத்தார்கள் என்றோ நாம் கூற முடியாது. ஆனால் பொதுவாக அவர்கள் தாங்கள் நல்லதையே செய்வதாக நினைத்துக் கொண்டு, உண்மையில் தங்களையே ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள் என இயேசு சுட்டிக்காட்டுகிறார். சட்ட நுணுக்கங்களைத் துல்லியமாகக் கடைப்பிடித்த அவர்கள் உண்மையிலேயே கனமான காரியங்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். தூய்மை சார்பான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நிறைவேற்றினால் போதும், கடவுளுக்கு ஏற்புடையவர்களாகிவிடலாம் என நினைத்த அவர்கள் உண்மையிலேயே கருத்தில் கொள்ளவேண்டிய முதன்மைகளைப் புறக்கணித்துவிட்டுத் தங்களை நல்லவர்கள் என நினைத்துக்கொண்டார்கள். வெளித்தூய்மையில் கண்ணும் கருத்துமாக இருந்த அவர்கள் உண்மையான தூய்மை என்பது மனித இதயத்தை மாசின்றிக் காப்பதில் அடங்கும் என்பதை மறந்துவிட்டார்கள். ஆக, மனித உள்ளத்தில் அன்பும் இரக்கமும் பரிவும் பாசமும் நீதியும் நேர்மையும் இல்லாவிட்டால் அது மாசடைந்து பாழ்பட்ட வீடு போல ஆகிவிடும் என இயேசு உணர்த்துகிறார் (மத் 23:25).

மனிதரை மாசுபடுத்துகின்றவை உள்ளத்திலிருந்து எழுகின்ற தீய சிந்தனைகளும் அவற்றிலிருந்து பிறக்கின்ற தீய செயல்களுமே என இயேசு வழங்குகின்ற போதனை நமக்கும் பொருந்தும் (காண்க: மத் 15:18-19). எனவே நாம் தூய சிந்தனையை நம்மில் வளர்த்திட வேண்டும். எண்ணத்தில் தூய்மையிருந்தால் நாம் சிந்திக்கின்ற பாணிகளும் நலமாக இருக்கும். நம் சிந்தனையிலிருந்து எழுகின்ற செயல்களும் நல்லவையாக இருக்கும். வெளிச் சடங்குகளைத் துல்லியமாக நிறைவேற்றிவிட்டால் கடவுளுக்கு ஏற்புடையவராகிவிடலாம் என நினைப்பவர்கள் தங்களையே ஏமாற்றிக் கொள்கிற பரிசேயருக்கு ஒப்பானவர்களே. மாறாக, உள்ளத்தில் தூய்மையை வளர்த்துக்கொண்டு, ''நீதி, இரக்கம், நம்பிக்கை'' ஆகிய ''முக்கிய போதனைகளை'' நாம் கடைப்பிடித்தால் (மத் 23:23) கடவுளுக்கு ஏற்புடையவர்களாக வாழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, நேர்மையான உள்ளத்தை எங்களில் உருவாக்கியருளும்.