இன்று திருவருகைக் காலம் 4ம் ஞாயிறு

திருவழிப்பாட்டு ஆண்டு B (21-12-2014)

மரியா, நான் ஆண்டவரின் அடிமை: உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்/> மரியா, நான் ஆண்டவரின் அடிமை: உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்/> மரியா, நான் ஆண்டவரின் அடிமை: உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்/> மரியா, நான் ஆண்டவரின் அடிமை: உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்/> மரியா, நான் ஆண்டவரின் அடிமை: உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்/> மரியா, நான் ஆண்டவரின் அடிமை: உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்/> மரியா, நான் ஆண்டவரின் அடிமை: உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்/> மரியா, நான் ஆண்டவரின் அடிமை: உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்/> மரியா, நான் ஆண்டவரின் அடிமை: உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்/>


திருப்பலி முன்னுரை

திருவருகைக்காலம் 4 ஆம் வார திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று வாழ்த்துகிறேன். மனிதத்தை மீட்டு, மீண்டும் இறைமக்கள் என்ற நிழலுக்கு உயர்த்திட, மானுடம் தேடி வந்த இறைவன் வரும்காலம் அண்மித்துள்ள நிலையில், நாம் அவர் வருகையை, தரும் மீட்பை, எதிர்நோக்கி நம் மீட்பின் பாறையாம் ஆண்டவரின் திருப்பாதத்தில் ஒன்று கூடியுள்ளோம்.

இறைவனின் திட்டங்கள் வியப்புக்குரியவை, மனித அறிவுக்கும், சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை. அவை நன்மையானவை, நமது எதிர்கால வாழ்வின் வளமைக்கான திட்டங்களானவை. இறைவாக்கினர் வழியாக இறைவன் வெளிப்படுத்தும் நற்செய்திக்கு ஏற்ப நாம் வாழ அவரே நம்மை உறுதிப்படுத்துகின்றார். தாம் அழைத்தவர்களோடு என்றும் உடனிருந்து அவர்களை வழி நடாத்துகின்றார் என்னும் செய்திகளை இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன. நாம் ஒவ்வொருவரும் அன்னை மரியாளைப் போன்று: இறைவன் நம்மை சிறப்பான பணிகளுக்கு அழைக்கும்போதெல்லாம் நாம் அவரில் விசுவாசம் கொண்டு: இறைவா நான் உமது அடிமை, நீர் விரும்புவதை நிறைவேற்ற இதோ வருகின்றேன் என்னும் பதிலோடு அவருக்கு ஏற்புடைய வாழ்வு வாழ வரம் கேட்டு இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

தாவீதின் அரசு ஆண்டவர் முன் என்றென்றும் உறுதியாக இருக்கும்.
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-5, 8b-12, 14-16

தாவீது அரசர் தம் அரண்மனையில் குடியேறியபின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, �பாரும், நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது'' என்று கூறினார். அதற்கு நாத்தான், �நீர் விரும்பியது அனைத்தையும் செய்துவிடும்; ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்று அரசரிடம் சொன்னார். அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: �நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப்போகிறாயா? என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்ற இடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்வேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்து வாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன். மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்.
திருப்பாடல் 89: 1-2. 3-4. 26,28

ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். 2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப்போல் உறுதியானது. பல்லவி

3 நீர் உரைத்தது: `நான் தேர்ந்துகொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது: 4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்'. பல்லவி

26 `நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை' என்று அவன் என்னை அழைப்பான். 28 அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். பல்லவி

இரண்டாம் வாசகம்

ஊழி காலமாக மறைபொருளாக இருந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 16: 25-27

சகோதரர் சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவைப்பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ]இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர். ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, �அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு மரியா கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, �மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'' என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், �இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!'' என்றார். வானதூதர் அவரிடம், �தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' என்றார். பின்னர் மரியா, �நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்'' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.!

பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்து கொள்ளும் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவரும் தாங்கள் உமது அடிமை, நீர் விரும்புவதை நிறைவேற்றுவதே தங்கள் பணி என்பதை ஆழமாக உணரவும், நீர் அவர்களுக்கு வழங்கிய பணியை எச் சூழ்நிலையிலும் மனவுறுதியோடு நிறைவேற்றவும் அவர்களுக்கு தேவையான ஞானத்தை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தூயவரான தந்தையே!

உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள், எப்பொழுதும், எல்லாச் சூழ்நிலையிலும்: நாங்கள் அனைவரும் உமது அடிமை, நீர் விரும்புவதை நிறைவேற்றுவதே எங்கள் பணி என்பதை ஆழமாக உணரவும், நீர் எங்களுக்கு வழங்கிய பணியை எச் சூழ்நிலையிலும் மனவுறுதியோடு நிறைவேற்றவும் தேவையான ஞானத்தை அளித்துக் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பேருவகை அளிப்பவராம் இறைவா,

உம் திருமகனின் பிறப்பு விழாவை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் உலக மக்கள் அனைவரும், தங்கள் மனமாற்றத்தின் வழியாக புதுவாழ்வு காணவும், பிறர் நலனுக்காக தங்களை அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடையவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

பேரன்பின் ஊற்றாம் இறைவா,

கிறிஸ்து பிறப்பு விழாவுக்காக தயாராகி வரும் எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் உமது பகிர்தலையும், உம் திருமகனின் தியாகத்தையும் உணர்ந்து தூய வாழ்வு வாழ வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அரும்பெரும் செயல்கள் புரியும் வல்லவராம் தந்தையே இறைவா!

உலக நாடுகளில் பெருகிவரும் பிரிவினைகளும், ஆணவமும், தன்னலமும், ஊழல்களும் ஒழிந்து மக்கள் அனைவரும் அமைதியோடும், பாதுகாப்போடும், மகிழ்ச்சியோடும் வாழ அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

கருணையின் தேவா!

எம் பங்கிலுள்ள இளைஞர்கள் இளம் பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளை வீணடித்து விடாமல், எதிர்கால வாழ்வை திட்டமிட்டு செயல்படுத்திட தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நோயாளரின் ஆரோக்கியமே இறைவா!

உலக நாடு முழுவதும் பரவிவரும் பல்வேறுபட்ட கொடிய நோய்கள் இல்லாதொழியவும், இயற்கையாகவும், மனிதராலும் உருவாக்கப்படும் எல்லா அழிவுகளும் இல்லாது போகவும்: மக்கள் அனைவரும் உம்முடைய குரலுக்கே செவிகொடுத்து, உம்மைப் பின்பற்றி வாழவும் அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நோயாளரின் ஆரோக்கியமே இறைவா!

இன்றைய நாட்களிலே குடும்பத்தின் புனிதத் தன்மைக்கும் , உறவுக்கும், ஒற்றுமைக்கும் எதிராக இருக்கும் எல்லாச் சக்திகளையும் முறியடித்து: குடும்பங்களிலே அன்பும், ஒற்றுமையும், தோழமையும், புரிந்துணர்வும் நிலைபெற்று: குடும்பங்கள் திருக்குடும்பத்தின் தன்மைகளைக் கொண்டு வாழ அருளாசீர் அளித்திடவேண்டுமென்றும்: பிரிந்திருக்கும் குடும்பங்களை ஒன்று சேர்த்திடவேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''வானதூதர் அவரைப் பார்த்து, 'மரியா, அஞ்சவேண்டாம்' கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்' அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்' என்றார்'' (லூக்கா 1'30-31)

மரியாவிடம் வந்த கபிரியேல் வானதூதர் கடவுளின் செய்தியை அவருக்கு எடுத்துரைக்கிறார். ஆனால் மரியாவுக்கோ ஒரே குழப்பமும் கலக்கமும்தான் மிஞ்சியது. மரியாவின் வழியாகப் பிறக்கவிருக்கும் குழந்தை கடவுளின் வல்லமையால் இவ்வுலகுக்கு வரும் என்ற செய்தி மரியாவுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், வானதூதர் மரியாவுக்குத் தெளிவு வழங்குகின்றார். மரியா கடவுளின் தனிப்பட்ட அன்புக்கு உரித்தானவர் என்றும், கடவுளின் அருள் அவரிடம் நிறைவாக உள்ளது என்றும் வானதூதர் உறுதிகூறுகின்றார். கடவுளின் அருள் நம் எல்லோருக்கும் கொடையாக வழங்கப்படுகிறது. ஆனால் மரியா கடவுளின் மீட்புத் திட்டத்தில் ஒரு சிறப்பிடம் வகிக்கிறார். அவர் கடவுளின் ஒரே மகனை இவ்வுலகிற்குப் பெற்று வழங்கினார். இப்பெரும் பேறு மரியாவுக்குக் கடவுள் வழங்கிய சிறப்புக் கொடை எனலாம். இதனால் மரியா இயேசுவின் தாய் மட்டுமல்ல, இயேசுவின் வழியாக அருள்நிலையில் கடவுளின் பிள்ளைகளாக மாறியிருக்கின்ற நமக்கும் அவர் தாயாகின்றார்.

மரியா ஈந்த மகன் மரியாவுக்கு மட்டும் உரியவரல்ல, அவர் உலகின் சொத்து. அவருடைய பெயரே இந்த ஆழ்ந்த பொருளை விளக்கிநிற்கின்றது. ''இயேசு'' என்னும் பெயருக்கு மீட்பர் என்பது பொருள். இயேசு நம்மை மீட்கின்றார் என்றால் நாம் ஏதோ அடிமைநிலையில் இருந்ததால் நமக்கு மீட்புத் தேவைப்பட்டது என்பதை நாம் உணரலாம். மனித வாழ்க்கை அனுபவமாகிய பாவமும் சாவும் நம்மை அடிமைப்படுத்திய நிலையில் இயேசு கொணர்ந்த மீட்பு நமக்கு ஒரு புதிய நிலையை வழங்குகிறது. நாம் பெறும் புதிய நிலை கடவுளின் அன்பில் நாம் நிலைத்திருப்பதைக் குறிக்கும். கடவுளோடு நமக்குள்ள நெருங்கிய உறவு நம்மை அவரோடு இறுகப் பிணைப்பதால் நாம் கடவுளின் வல்லமையை நம் வாழ்க்கையில் உணரமுடிகிறது. எவ்விதத் தயக்கமும் இன்றி நாம் கடவுளின் வழியில் நடந்தால் அவர் தரும் அருள் ஒருநாளும் குறைபடாது.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்க்கையில் தோன்றுகின்ற அச்சங்களை அகற்றியருளும்.