யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்காகாலம் 3வது வாரம் சனிக்கிழமை
2015-04-25

புனித மாற்கு - நற்செய்தியாளர் விழா


முதல் வாசகம்

என் மகன் மாற்குவும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றார்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5b-14

அன்பிற்குரியவர்களே, ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில், ``செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்.'' ஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார். உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள்மேல் கவலை கொண்டுள்ளார். அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம் போலத் தேடித் திரிகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப் பின் அவர் உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார். அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென். நம்பிக்கைக்குரிய சகோதரன் என நான் கருதும் சில்வான் வழியாகச் சுருக்கமாக உங்களுக்கு எழுதியுள்ளேன். உங்களை ஊக்குவிக்கவும் கடவுளுடைய மெய்யான அருளைப் பற்றிச் சான்று பகரவுமே எழுதினேன். இந்த அருளில் நிலைத்திருங்கள். உங்களைப் போலவே தேர்ந்துகொள்ளப்பட்ட பாபிலோன் சபையாரும், என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். அன்பு முத்தம் கொடுத்து நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழும் உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.
திருப்பாடல்89: 1-2. 5-6. 15-16

1 ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். 2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. பல்லவி

5 ஆண்டவரே, வானங்கள் உம் வியத்தகு செயல்களைப் புகழ்கின்றன; தூயவர் குழுவினில் உமது உண்மை விளங்கும். 6 வான்வெளியில் ஆண்டவருக்கு நிகரானவர் யார்? தெய்வ மைந்தர் குழுவில் ஆண்டவருக்கு இணையானவர் யார்? பல்லவி

15 விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள். 16 அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அவர் கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20

அக்காலத்தில் இயேசு பதினொருவருக்கும் தோன்றி, ``உலகெங்கும் சென்று படைப்பிற் கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்'' என்று கூறினார். இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களை நோக்கி, 'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்' என்றார்'' (மாற்கு 16:15-16)

மாற்கு நற்செய்தி 16:8 என்னும் சொற்றொடரோடு முடிகிறது என்றும், அதற்குப் பின் வருகிற 16:9-20 பகுதி ஒரு பிற்சேர்க்கை என்றும் அறிஞர் கூறுவர். சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசு மீண்டும் உயிர்வாழ்கின்றார் என்னும் அதிர்ச்சி தரும் செய்தியைக் கேட்ட பெண்கள் ''கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்'' என்றும், ''நடுக்கமுற்று மெய்ம்மறந்தவர்களாய் யாரிடமும் ஒன்றும் சொல்லவில்லை'' என்றும் மாற்கு நற்செய்தி முடிவடைவது சிறிது விசித்திரமாகப் படலாம். ஆயினும் அந்நிகழ்ச்சி நமக்கு ஓர் ஆழ்ந்த உண்மையை வெளிப்படுத்துகிறது. அதாவது, இயேசுவின் உயிர்த்தெழுதல் இயேசுவின் சீடர்களைப் பொறுத்தமட்டில் ஒரு பெரிய அதிர்ச்சியாகத்தான் இருந்தது. தம் ஆசிரியராக இருந்த இயேசு இறந்தபிறகு எல்லாமே முடிந்துவிட்டது என்று நம்பிக்கை இழந்து தளர்ந்துபோயிருந்த சீடர்களுக்கு அதிர்ச்சி அளித்த நிகழ்ச்சி இயேசுவின் உயிர்த்தெழுதல். இவ்வாறு அதிர்ச்சியுற்ற பிறகும் இயேசுவைப் பின்சென்றோர் அவர் உயிர்பெற்றெழுந்தார் என நம்புவதற்கு ஒரு முக்கிய காரணம் அவர் அவர்களுக்குத் தோன்றி தாம் உயிர்வாழ்வதாக அவர்களுக்கு உணர்த்தியதுதான். அப்போது இயேசு சீடர்களுக்கு ஒரு கட்டளை தருகிறார்: ''உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்'' (மாற் 16:15).

மாற்கு தம் நூலின் தொடக்கத்தில் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எழுத்தில் பதிப்பதாகக் கூறியிருந்தார் (காண்க: மாற் 1:1). இப்போது தம் நூலின் இறுதியிலும் நற்செய்தி தொடர்ந்து அறிவிக்கப்படவேண்டிய தேவையை எடுத்துக்காட்டுகிறார். யூதர்களுக்கு மட்டுமன்றி, உலக மக்கள் அனைவருக்குமே இந்நற்செய்தி அறிவிக்கப்படும். எல்லா மக்களும் இயேசுவைப் பற்றி அறிந்து, அவரில் நம்பிக்கை கொண்டு மீட்புப் பெற வேண்டும் என்பதே நற்செய்தியறிவிப்பின் நோக்கமாக இருக்கும். இன்று வாழ்கின்ற நாம் நற்செய்தியின் தூதுவர்களாகச் செயல்பட அழைக்கப்படுகிறோம். நாம் பெற்றுக்கொண்ட நற்செய்தியை வாழ்வில் கடைப்பிடிப்பதோடு அச்செய்தியைப் பிறரோடு பகிர்ந்துகொள்வதும் நம் பொறுப்பு.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பின் செய்தியை அனைவருக்கும் அறிவிக்க எங்களுக்கு அருள்தாரும்.