யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C

(இன்றைய வாசகங்கள்: சீஞா 3: 17-20, 28-29, எபி 12: 18-19, 22-24, லூக்கா 14: 1,7-44



ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள் ஆபேலின் இரத்தத்தைப் போலன்றிச் சிறந்த முறையில் குரலெழுப்பும் இயேசுவின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்டிருக்கிறீர்கள்.


திருப்பலி முன்னுரை

நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை வாழும் கடவுளின் நகர்:

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று பொதுக் காலம் இருபத்திரெண்டாம் ஞாயிறு.

திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும், கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருக்கும் ஆண்டவரின் சந்நிதானத்தில் நன்றிப்பலி செலுத்த ஒன்று கூடியுள்ளோம். இன்றைய நாளில் மீண்டும் புதிய ஆசீர்வாதத்திற்குள் நம்மை அழைத்தச் செல்கிறார் இறைவன். உறுதியின் உறைவிடமான இறைவன், உன்னதமான வாழ்வை நமக்குத் தருவதாக வாக்களிக்கின்றார். அத்தோடு நாம் செய்வது அனைத்தையும் பணிவோடு செய்யவேண்டுமென்றும், இறுமாப்பு அடையக்கூடாதெனவும் நமக்கு இறைவன் அறிவுரை தருகின்றார். ஆகவே நாம் அனைவரும் நம்மையெல்லாம் அழிவின் பாதையிலிருந்து காக்கும் தந்தையாம் கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரை போற்றுவோம். அவரது அறிவுரையின்படி வாழுவோம் ஏனெனில் கடவுளே! நல்லவர்: அவரே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளிக்கின்றார்.இறைவனைப் புகழ்ந்தேற்றும் வரம் கேட்டுச் செபிப்போம்.



முதல் வாசகம்

நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 3: 17-18, 20,28-29

குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்: அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவர். நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட. அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும்.ஆண்டவரின் ஆற்றல் பெரிது: ஆயினும், தாழ்ந்தோரால் அவர் மாட்சி பெறுகின்றார். இறுமாப்புக்கொண்டோரின் நோக்கு மருந்து இல்லை: ஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றி விட்டது. 29 நுண்ணறிவாளர் உவமைகளைப் புரிந்துகொள்வர்: ஞானிகள் கேட்டறியும் ஆவல் மிக்கவர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஒடுக்கப்பட்டோர்க்கு கடவுளே, மறுவாழ்வு அளித்தீர்
திருப்பாடல்: 68: 3-10

நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர். 4கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப் போற்றுங்கள்; `ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம். பல்லவி

5 திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்! 6யb தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். பல்லவி

9 கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்; வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர். 10 உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன; கடவுளே! நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர். பல்லவி

இரண்டாம் வாசகம்

நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை, வாழும் கடவுளின் நகர்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 18-19, 22-24

சகோதர சகோதரிகளே, நீங்கள் வந்து சேர்ந்திருப்பது தொட்டுணரக்கூடிய, தீப்பற்றியெரிகின்ற, இருள்சூழ்ந்த, மந்தாரமான, சுழல்காற்று வீசுகின்ற சீனாய் மலை அல்ல.அங்கு எக்காளம் முழங்கிற்று: பேசும் குரலொன்று கேட்டது. அக்குரலைக் கேட்டவர்கள் அதற்குமேல் தங்களோடு அது ஒரு வார்த்தைகூடப் பேசவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள்.ஆனால் நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை வாழும் கடவுளின் நகர்: விண்ணக எருசலேம். அதனைப் பல்லாயிரக் கணக்கான வானதூதர் சூழ்ந்துள்ளனர்.விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை விழாக் கூட்டமென அங்கே கூடியுள்ளது. நிறைவுபெற்ற நேர்மையாளர்களோடு சேர்ந்து, அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும்,புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள். ஆபேலின் இரத்தத்தைப் போலன்றிச் சிறந்த முறையில் குரலெழுப்பும் இயேசுவின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்டிருக்கிறீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா ! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா !

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1,7-14

அக்காலத்தில், ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை: "ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், "இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள் " என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், "நண்பரே, முதல் இடத்திற்கு வாரும் " எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்: தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர். " பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, "நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்கு கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும் " என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. வாழ்வின் ஊற்றாம் இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: தூய ஆவியின் நிறை வல்லமையால் அவர்களை நிரப்பி, தீமைகளை முறியடிக்க வேண்டிய சக்தியையும்,ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!,

பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், வேதனைகளோடும், விரக்தியோடும், கண்ணீரோடும் வாழும்; மனமிரங்கி அவர்களின் சமூக வாழ்வு தூய்மையானதாகவும், நிலையானதாகவும் இருக்கவும், அவர்கள் தாங்கள் பெற்றுக் கொண்ட திருமுழுக்கு அழைப்பிற்கேற்ப வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருக்கும் ஆண்டவரே !

கவலை, நோய், துன்பம் போன்றவற்றிலிருந்தும் விடுதலை பெறத் தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களும் நீர் கொடுக்கின்ற ஆறுதலைப் பெற்றுக் கொள்ளவும், இயற்கை, செயற்கை அழிவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. வாழ்வை வழங்குபவரே இறைவா,

உலகெங்கும் உமது நற்செய்தியைப் புறக்கணிப்பவர்களால், கிறிஸ்தவ மக்களும் மறை போதகர்களும் அனுபவிக்கும் துன்பங்கள் நீங்கிட, மீட்பின் மறைபொருளை உலகோர் அனைவரும் புரிந்துகொள்ளச் செய்யுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

5. அன்புத் தந்தையே இறைவா!

உலகிலிருந்து தவறுகள் அகலவும், நோய்கள் நீங்கிப் பஞ்சம் ஒழியவும், சிறைப்பட்டோர் விடுதலை பெறவும், வழிப்போக்கர் பாதுகாப்புப் பெறவும், பயணம் செய்வோர் நலமாக நாடு திரும்பவும், நோயுற்றோர் நலம் பெறவும், இறக்கின்றவர் மீட்பின் நிறைவு பெறவும் வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

தாழ்ந்தோரால் மாட்சி !

“தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்படுவர்” என்னும் இன்றைய மையக் கருத்தினை முதல் மற்றும் நற்செய்தி வாசகங்களில் காண்கிறோம். மானிட வாழ்வின் சுவைமிகு முரண்பாடுகளுள் இதுவும் ஒன்று. வலிமையுடையோர் எப்போதும் வெற்றி பெறமுடிவதில்லை. வலிமை குன்றியவர்களும் வெல்ல முடிகிறது. அதுபோல, நெஞ்சிலே செருக்குற்றோர் எப்போதும் இறைவனால் சிதறடிக்கப்படுகின்றனர். தம்மையே தாழ்த்திக் கொள்பவர்களுக்கு இறைவனின் முன்னிலையில் பரிவு கிடைக்கும் என்று இன்றைய முதல் வாசகம்- சீராக்கின் ஞானநூல் தெரிவிக்கிறது. “ ஆண்டவரின் ஆற்றல் பெரிது. ஆயினும், தாழ்ந்தோரால் அவர் மாட்சி பெறுகிறார்” என்று வாசிக்கிறோம். எனவே, வாசகம் தொடங்கும் முதல் வாக்கியத்தை மீண்டும் கவனிப்போம்: “குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்”. நம் இதயத்தில் தாழ்ச்சியை, பணிவை வளர்த்துக்கொள்வோம்.

மன்றாட்டு:

தாழ்ந்தோரை உயர்த்தும் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இதயத்தில் தாழ்ச்சியும், பணிவும் மிக்கவர்களாக நாங்கள் வாழ, பணிபுரிய அருள்தாரும். எங்கள் வாழ்விலும், பணியிலும் நீரே மாட்சி அடைவீராக. ஆமென்.